2024

2024

போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு கார்டினல் மல்கம் ரஞ்சித்!

போப்பாண்டவருக்கான போட்டியில் கார்டினல் மல்கம் ரஞ்சித்!

தற்போதைய 88 வயதடையும் போப்பாண்டவர் பலவீனமாகவும் நோயாளியாகவும் ஆகும் நிலையில் அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு விரைவில் இடம்பெறலாம் எனவும், அடுத்த போப்பாண்டவருக்கான போட்டியில் கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களும் போட்டியிடுவார் என வத்திகானோடு தொடர்பான இணையத்தளம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் 12 கார்டினல்கள் போட்டியிட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டினல் மல்கம் ரஞ்சித் வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து வருபவர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிவருபவர். தற்போதைய போப்பாண்டவர் பிரன்ஸிஸ் ஒப்பீட்டளவில் லிபிரல் கொள்கையுடையவர். லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சியடைந்த விடுதலை இறையியலூடாக மேலே வந்தவர்.

பொதுவாக அடுத்து வரும் போப்பாண்டவர் முன்னையவருடைய வழியில் செல்லமாட்டார் என்ற கருத்து இருப்பதாகவும் அதனால் அடுத்த போப்பாண்டவர் சற்று இறுக்கமான பழமைத்துவவாதியாக அமையலாம் எனவும் கருதப்படுகின்றது. போப்பாண்டவரை கார்டினல்கள் தெரிவு செய்வர். ஆனால் அவர்கள் 80 வயதுக்கு குறைவானவர்களாகவும் இருக்க வேண்டும். 253 கார்டினல்களில் 140 பேர் எண்பது வயதுக்குக் குறைந்தவர்கள். இவர்கள் நேரடியாக வத்திக்கானுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த வாக்களிப்பு நீண்ட நாட்களுக்கு நடைபெறும். ஆனால் வாக்களிக்கப் போகும் கார்டினல்களுக்கு போட்டியிடும் கார்டினல்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான சூழலும் இல்லை. போட்டியில் உள்ளவர்கள் தாம் எதிர்காலத்தில் கத்தோலிக்கத்துவத்தை எப்படிக் கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற அவர்களுடைய பார்வையின் அடிப்படையிலேயே தங்கள் வாக்குளை வழங்குவார்கள். தற்போதுள்ள போப் நோய்காரணமாக, முதுமை காரணமாக ஓய்வுபெற்றாலே அடுத்த போப்பாண்டவருக்கான தெரிவு நடைபெறும். தன்னால் முடியாத போது தாங்கள் ஓய்வுபெறுவோம் என போப்பாண்டவர்கள் உடன்பட்டே வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் பொருளாதார இருள் மெல்ல விலகுகின்றது!

இலங்கையின் பொருளாதார இருள் மெல்ல விலகுகின்றது!

இலங்கைக்கு சர்வதேச தனியார்கள், நிறுவனங்கள் வழங்கிய பணமுறியை 27 சதவீதத்தால் குறைத்து புதிய பணமுறியை ஏற்றுக்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி புதிய பணமுறி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஜனாதிபதி அனுர ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதார ரீதியில் இலங்கை ஸ்தீரத் தன்மையடைந்து வருகின்றது. 2022இல் இலங்கை தன்னுடைய 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த முடியாமல் இன்னல்பட்டதையடுத்து பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டு எரிபொருள் போன்ற அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கான டொலர் கையிருப்பில் இல்லாமல் போனது. அதனையடுத்து மக்கள் பெற்றோலுக்கு காத்துக்கிடந்ததும், சர்வதேச நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் நியமித்ததும் வரலாறு. அதனால் மேலதிக கடன்களைப் பெறாமல் டொலர் கையிருப்பை அதிகரிப்பதில் தற்போதைய அரசு மிகத்தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

அதனால் ஜனாதிபதி அனுராவின் ஒவ்வொரு அசைவும் சுற்றுலாத்துறையை வளர்ப்பது, முதலீட்டாளர்களைக் கவருவது, நாட்டை டிஜிற்றலைஸ் ஆக்குவது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பது என்பதை நோக்கியதாக உள்ளது. இந்திய விஜயத்தின் போது இவ்விடயங்கள் மிக அழுத்தம் திருத்தமாக உரையாடப்பட்டுள்ளது. உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுராவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. இந்திய முதலீட்டாளர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய முதலீட்டளர்கள் துறைசார் விற்பனர்களுடனான சந்திப்பில் இலங்கை தொழில்முனைவோருக்கான நட்பு நாடு எனச் சொல்லி அவர்களை வரவேற்றுள்ளார்.

அரசாங்கம் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு அப்பால் சென்று கடன் பெறவில்லலை எனவும் நிர்ணயிக்கப்பட்ட 3.7 ரில்லியன் ரூபாய்களே கடன்வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 2 ரில்லியன் ரூபாய்களே உள்ளுரளவில் பெறப்பட்டுள்ளதாகவும் ரெரிட்டே ரிசேர்ச் என்ற சுயாதீன சிந்தனை மையம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் தேவையானால் இன்னும் 1.7 ரில்லியன் ரூபாய்களை உள்ளுர் பணமுறியைக் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை நெருக்கடியைச் சந்தித்த போது அதன் மொத்தத் தேசிய உற்பத்தி – ஐpடிபி 1.2 சதவிகிதத்திலிருந்து தற்போதைய கடைசிக் காலாண்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகரத்திற்கு வந்தபோது 5.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையின் அனைத்துத் துறைகளும் வளர்ச்சியைக் காட்டினாலும் கட்டிட நிர்மானம் 23.8 சதவீதமாகவும் சேவைத்துறை 18.8 விகிதமாகவும் தேயிலை 16.3 விகிதமாகவும் எரிசக்தித்துறை 15.2 விகிதமாகவும் துணித்தொழில் 13.5 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இவற்றின் பிரதிபலிப்பாக இலங்கை நாணயத்தின் பெறுமதியிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரிக்ஸில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கான ஆதரவை தாங்கள் முழுமையாக வழங்குவோம் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிறி விக்கிரம் மிசிறி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இலங்கை பிரிக்ஸில் இணைவது என்பதனைக் காட்டிலும் பிரி;க்ஸினுடைய புதிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கான மூலதனத்தை பெறுவதிலேயே அது ஆர்வமாக உள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் திங்கட்கிழமை 15ம் திகதி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நவம்பர் 30 இலங்கை வந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் நிர்வாகிகளுடனும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கத்திற்காக பணம் சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 இல் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், இவ்வாறானவர்களின் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விஜயசுந்தரம் சங்கர் சார்பில், அண்மையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்காகப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா முன்னிலையாகி வாதிட்டார்.

“விஜயசுந்தரம் சங்கர் 2010 பிரித்தானியாவுக்குச் சென்று வாழ்கின்றார். 2012இல் அவர் பிரித்தானிய பிரஜையுமானார். அவர் பிரித்தானியா சென்ற பின் நாட்டுக்கு தன்னுடைய தாயாரின் இறுதிக் கிரியைகளுக்காக நாடு திரும்பியவர். 2009 ஆண்டுக்குப் பின் இவ்வாறு பல புலம்பெயர் தமிழர்கள் ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள். இது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கின்றது. நாட்டினது நற்பெயரையும் பாதிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வர அஞ்சுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் முதலீடு செய்வதையும் தடுக்கின்றது” போன்ற காரணங்களை முன் வைத்து கே வி தவராசா வாதிட்டார். அவர் பணத்தை அனுப்பியது உண்மைதான். அது அவருடைய தாய் தகப்பனுக்கு அதுவுமொரு குற்றமா எனவும் கேள்வி எழுப்பினார். இறுதியில் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விஜயசுந்தரம் சங்கரை விடுதலை செய்தார்.

70 வயது தாயின் பெயரில் கடையை குத்தகைக்கு எடுக்க வெளிநாட்டவர் விண்ணப்பம்! – சாவகச்சேரி மக்கள் கொந்தளித்தனர்!

70 வயது தாயின் பெயரில் கடையை குத்தகைக்கு எடுக்க வெளிநாட்டவர் விண்ணப்பம்! – சாவகச்சேரி மக்கள் கொந்தளித்தனர்!

சாவகச்சேரி நகரசபையால் உலக வங்கியின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கடைத் தொகுதிகளை குத்தகைக்கு விடுவது சம்பந்தமான கேள்வி அறிவித்தல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் நேற்று நகரசபை முன்றலில் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தகர் ஒருவர் வழங்கிய நேர்காணலில் ‘’சாவகச்சேரி நகரசபை தமக்கு வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக புதிய கடைத்தொகுதிகளை, குத்தகைக்கு வழங்குவதாக பகிரங்க ஏலத்தில் விட்டு தம்மை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். அதாவது, 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் அழிவடைந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் நகரசபையால் கட்டப்படும் போது சாவகச்சேரி வர்தகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக இதுவரை கடைகளை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பித்தவர்கள் தொடர்பிலும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது பெற்றோரின் பெயரில் கடைகளை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பித்துள்ளனர். சாதாரணமாக சாவகச்சேரி பிரதேசத்தில் வாழும் ஒருவர் வெளிநாட்டுக்காரருடன் போட்டியிட்டு அதிக விலையை கொடுத்து கடைகளை ஏலத்தில் எடுக்க முடியாது. உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்பட்ட கடைகளை பொது ஏலத்தில் விட்டு பணம் படைத்த புலம்பெயர் தமிழர்கள் அதிக விலை கொடுத்து கடைகளை குத்தகைக்கு எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி நகரசபை ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சாவகச்சேரி வியாபாரிகள் குமுறுகிறார்கள்.

ஏற்கனவே புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை அதன் பெறுமதிக்கு மேலாக பணம் கொடுத்து வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உழைத்து வாழும் சாமானிய மக்கள் ஒரு பிடி நிலம் கூட வாங்க முடியாதளவிற்கு காணிகளின் விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. வடக்கில் ஒருபக்கம் போட்டிக்கு அதிக விலை கொடுத்து காணிகளை விலைக்கு வாங்கி கோடிகளை கொட்டி ஆடம்பர பங்களாக்களை கட்டும் புலம்பெயர் தமிழர்கள். அவ்வாறு கட்டிய வீடுகளை சுற்றுலா வரும்போது மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இப்படி பல வீடுகள் பூட்டிய நிலையில் பாழடைந்து காணப்படுகின்றன. அதேநேரம் இனத்தின் விடுதலைக்கு போராடியவர்கள் ஒரு தகரகொட்டகைக்கு வழியின்றி கஷ்டப்படுகிறார்கள்.

போராட்டக்காரர்கள் நகரசபையின் நுழைவாயிலை பூட்டி தமது எதிர்ப்பை காட்டியதோடு புதிய கடைத்தொகுதிகளுக்கான விண்ணப்பதாரிகள் சாவகச்சேரி நகராட்சி எல்லைக்குள் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் வந்த பொலிஸார் பூட்டை உடைத்து கதவை திறந்ததோடு போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். அப்போது நகர சபை ஊழியர் ஒருவர் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை ஓட்டி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது மோதப் போவதாக பயமுறுத்தியதாகவும் ஊடகவியலாளர்களோடும் முரண்பட்டார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் கேள்விக் கோரலானது தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு உள்ளூராட்சி ஆணையாளரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் அரசாங்க பதவிகளை வகிப்பவர்களுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பாடல் மற்றும் உறவுகளில் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றது. அரச நிர்வாகத்தில் இடம்பெற்று வந்த அதிகார துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் ஊழலால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த மக்கள். இன்று வெகுண்டு எழுந்து போராடுவதை காணக்கூடியதாக உள்ளது.

நீக்கப்படுகிறது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஆயுதப்படை பாதுகாப்பு !

நீக்கப்படுகிறது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஆயுதப்படை பாதுகாப்பு – 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்கிறது பாதுகாப்பு அமைச்சு!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரின் பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கென ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் நீக்கப்படவுள்ளதாக அவர் கூறியள்ளார்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசாங்கம் இதுவரை செலவிட்ட பணத்தில் சுமார் 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – வடக்கு மாகாண ஆளுநர்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல், வீடமைப்புத் திட்டம், வாழ்வாதார உதவி மற்றும் வேலை வாய்ப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி தமிழகத்தில் தற்போதும் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய ஆளுநர், அதற்குரிய திட்டங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி தேடுகிறார்கள் – பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

17.12.2024 பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கங்களின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி தேடப்பட்டதாக தெரிவித்தார்.

“எங்கள் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் கொலிபிகேஷன் தொடர்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கே இருக்கும் நம் பலரின் கொலிபிகேஷனை தேடுகின்றனர். கொலிபிகேஷனை கேட்கிறார்கள், அதை கேட்கிறார்கள்… இதை கேட்கிறார்கள்.

மிகவும் ஆர்வமாக உள்ளனர். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கங்கத்தில் உள்ளவர்களின் கல்வித் தகுதிகள் தேடப்படவில்லை என்பது ஒருபுறம் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்களின் திருட்டையே தேடினார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு வரலாறு உள்ளது! பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிப் பிரச்சினையை தூண்டக்கூடாது! மாத்தளை சுனீத்த ஹாமத்துறு.

தையிட்டி விகாரைக்கு வரலாறு உள்ளது! பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிப் பிரச்சினையை தூண்டக்கூடாது! மாத்தளை சுனீத்த ஹாமத்துறு

தையிட்டி விகாரை சங்கமித்தை வந்து ஒரு நாள் தங்கிச் சென்ற வரலாறு கொண்ட விகாரை. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் கைவிடப்பட்டுள்ளது என்கிறார் மாத்தளை சுனீத்த ஹாமத்துறு. இவர் தேசம்நெற்க்கு அளித்த நேர்காணலில் சட்டவிரோதமாக அந்த விகாரை தையிட்டியில் அமைக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே விகாரை இருந்த இடத்திலேயே அது மீள் நிர்மாணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். இந்த விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிவாதத்தையூட்டி இதனை ஒரு இன மதப்பிரச்சினையாக்கக் கூடாது என்கிறார் மாத்தளை சுனீத்த ஹாமத்துறு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனீத்த ஹாமத்துறு தன்னுடைய இளவயதிலேயே துறவறம்கொண்டு மாத்தளை விகாரையில் பணியாற்றுவதுடன் நாமினி ஓயா மத்திய மகாவித்தியாலயத்தில் தமிழ், பாளி மொழி கற்பிக்கின்ற ஆசிரியராகவும் உள்ளார். ஜாதிவாதம் இல்லாத சமாதான பூமியாக இலங்கை உருவாக வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனத் தெரிவிக்கும் அவர், தமிழர்கள் பலர் பௌத்தத்தை கடைப்பிடிப்பதாகவும் யாரும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் துப்பாக்கி முனையில் விகாரைகளை பாதுகாப்பது பௌத்தத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார். பெரும்பாலும் விகாரைகளில் கணபதி தெய்வம் இருக்கின்றார். சிங்கள மக்கள் சைவத் தெய்வங்களை வழிபடுகிறார்கள். இதில் ஜாதிவாதம் வரத்தேவியில்லை எனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

பார் பேர்மிட் வழங்குவதற்கு சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் அது நல்லதொரு விடயம், அதை நான் வரவேற்கின்றேன்.

இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.

ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் பேர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபாரிசு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்” – என்றார்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:

இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். அப்போது பரஸ்பரம் இரு தலைவர்களும் இத்தகைய ஒரு சந்திப்பு இரு நாடுகளிடேயும் இடம்பெற்றது தொடர்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

மோடி செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் போது இந்தியாவை முதலாவதாக தெரிவு செய்தமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட இலங்கை ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவின் வெளிவிகாரக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தொடர்பாக இலங்கை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் “இந்தியாவின் பாதுகாப்பிற்கிற்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்வகையில் இலங்கையின் பிரதேசத்தை ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்ற உறுதிமொழியையும் தனது உரையில் இந்தியாவிற்கு வழங்கினார்.

ஜனாதிபதியின் இக் கூற்றானது இலங்கை – இந்திய உறவுகள் தொடர்பில் சீனாவுடனான இலங்கை உறவை மையப்படுத்தி எழுப்பட்டு வந்த ஐயப்பாட்டை துடைத்தெறிவதாகவும் இலங்கை இந்தியாவின் தொப்புள் கொடி உறுவுதான் என்பதையும் வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.