19

19

அமெரிக்கா மீது நாமும் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வடகொரிய அதிபர் எச்சரிக்கை!

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள்  தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் – ஆங்கில ஊடகம் பரபரப்பு செய்தி !

ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள்  தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லமொன்றில் உளஉடல் பாதிப்புகளை எதிர்கொண்ட 90பெண்கள் தங்கியுள்ளனர்.

ஆனால் இந்த தங்குமிடம்  ஒரு பெண்ணிற்கான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.

இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களில் சிலர் ஏலத்தில் விற்கப்பட்டவர்கள் அவர்கள் எதிர்கொண்ட மோசமானஅனுபவம் காரணமாக அவர்கள்  அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் துயரமளிக்கும் விதத்தில் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் தங்குமிடத்திலும் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் ஓமானிற்கு வந்து மூன்று வருடங்களாகின்றன நான் கடந்த மாதம் இங்கு வந்தேன் ஆனால் அவர்கள் நான் வெளியே செல்ல அனுமதிக்கின்றார்கள் இல்லை அதிகாரியிடம் எனது கடவுச்சீட்டும் டிக்கெட்டும் உள்ளது அவர் அவற்றை கிழித்துவிடப்போவதாக மிரட்டுகின்றார்இ அவர் என்னை  தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றார் நான் இங்கு யாரையும் காதலிக்க வரவில்லை நான் ஒரு மாதகாலமாக முடங்கியநிலையில் இருக்கின்றேன் அதிகாரி எனது ஆவணங்களை பரிசலீப்பதற்கு மறுக்கின்றார். நான் அவரது விருப்பத்திற்கு உட்படாததால் என்னை இங்கு பலவந்தமாக வைத்துள்ளனர் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அதிகாரியே தூதரகத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றார் இங்குள்ள பெண்கள் எவரும் இலங்கை தூதுவர் பார்க்கவில்லை என மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார்.

அதிகாரியொருவர் இருக்கின்றார் அவர் 1.5 மில்லியனிற்கு யுவதிகளை விற்பனை செய்கின்றார் அவர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக கடத்துவதில் ஈடுபட்டுள்ளார்இ இங்குள்ள அனைத்து பெண்களிற்கும் சமைத்து சாப்பிடுவதற்கு 10 கிலோ உணவையே அவர்கள் வழங்குகின்றனர்இபெண்கள் பட்டினியால் அழும் தருணங்களும் உண்டு என ஓமானில் சிக்குண்டுள்ள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கழிவறைகள் உள்ளன ஒவ்வொன்றையும் 40 பெண்கள் பயன்படுத்துகின்றனர் உரிய கதவுகள் இல்லை குறிப்பிட்ட நபர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கின்றார் பல பெண்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் தகவலைகளை நான் ஊடகங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஏனையபெண்களும் பாதிக்கப்படுவதற்கு முதலில் அவர்களை மீட்கவேண்டும்.அங்கு தொடர்பாடல் வசதிகள் எதுவுமில்லை பல பெண்கள் பல மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லைஇஇங்குள்ளவர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் இறந்துவிட்டார்கள் என கருதுகின்றனர் ஆனால் அவர்கள் பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கப்பட்டுள்ளனர் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் இதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை தங்கள் மத்தியில் பங்குபோட்டுக்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பதவி விலகும் ஊழியர்கள் – நான் கவலைப்படமாட்டேன் என எலான் மஸ்க் ட்வீட் !

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார். டுவிட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கையில் மாறுதல்களை செய்தார். ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது. இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக்கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை ‘கெடு’ விதித்தார். ‘கெடு’ முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் அடுத்தடுத்து பலர்  வேலைகளிலிருந்து விலகி வருகிறார்கள். டுவிட்டரிலேயே ‘குட் பை’ எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்குக்கு ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க்,

”சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் நான் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்” என்று பதில் அளித்துள்ளார். டுவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்தார். ‘கெடு’ முடிந்தபோது, முக்கியமான ஊழியர்களாக கருதப்பட்ட சிலருடன் எலான் மஸ்க் அவசர ஆலோசனை நடத்தினார்.

சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் சிலர் நேரடியாகவும், வேறு சிலர் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர். அவர்களை தக்கவைக்க முயற்சி நடந்தது. ”எப்படி வெற்றி பெறுவது என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புகிறவர்கள் மட்டும் என்னுடன் சேருங்கள்” என்றும் எலான் மஸ்க் கூறினார். இதற்கிடையே, உலகம் முழுவதும் ‘டுவிட்டர்’ அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் !

உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் !

ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான சிவஜோதியின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருமதி ஹம்சகௌரி சிவஜோதியின் உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும், நாளை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, கிளிநொச்சி திருநகரிலுள்ள லிற்றில் எய்ட் அரங்கில் இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.

முதலாவது அமர்வில் கிளிநொச்சி, ஜெயந்திநகர், மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ கேஷ்வரநாத சர்மா மற்றும் கருணா நிலையத்தின் தலைமைக்குரு டானியல் ஆகியோர் ஆசியுரை வழங்கவிருப்பதுடன், தலைமையுரையை கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட கலை கலாசார அலுவலர் குணபாலன் நிகழ்த்துவார்.

இளையோரை விருத்தி செய்தல் எனும் தலைப்பில் சிறப்புரையை எழுத்தாளர் கருணாகரனும், சிவஜோதியின் நினைவுப் பகிர்வை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமாரும் வழங்கவுள்ளனர்.

இரண்டாவது அமர்வில் தலைமையுரையை செல்வி யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவி வர்ஷனா வரதராசாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக மெய்யியல் துறை மாணவி இறுதி வருட மாணவி செல்வி விராஜினி காயாத்திரி இராஜேந்திரனும் ஆற்றவுள்ள நிலையில் நூலின் முதற் பிரதியை செல்வி அபிலாஷா தேவராஜாவும் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இதேவேளை உறுதி கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் எனும் தலைப்பில், யாழ்.பல்கலைக்கழக முகாமத்துவ பீட முதலாம் வருட மாணவி செல்வி ஹார்த்தியாயினி இராஜேஸ்கண்ணாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசாவும் உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை எனும் தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளரும் மனிதம் அமைப்பின் உருவாக்குநர் சபை உறுப்பினருமான நிவேதா சிவராஜாவும் உரையாற்றவுள்ளனர். நிகழ்வின் இறுதியில், சிவஜோதியின் ஞாபகார்த்த நினைவு விருது வழங்கப்படவுள்ளது.

கலை இலக்கியச் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான வைத்தீஸ்வரன் சிவஜோதி 2020ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 30ஆம் திகதி காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி, நூலகம், இலக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றோடு இணைந்து பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் பல நாடகங்களில் நடித்தவர். தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid அமைப்பின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டு அந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியவர்.

வைத்தீஸ்வரன் சிவஜோதியின் மறைவைத் தொடர்ந்து அவரது பிறந்ததினத்தன்று சிவஜோதி ஞாபகார்த்த விருதும் 1லட்சம் ரூபா பணப் பரிசும் நாடகத்துறை சார்ந்து வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக இந்த விருது வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.