28

28

அமெரிக்காவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் – ஒன்பது மாதத்துக்குள் 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் பலி !

அமெரிக்காவின் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பறவை காய்ச்சலுக்கு, முதன்முறையாக 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்து உள்ளன. அவற்றில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும்.

கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 கோடியே 5 லட்சம் பறவைகள் உயிரிழந்து இருந்தது அதிக அளவாக இருந்தது. அதனை இந்த பாதிப்பு எண்ணிக்கை முறியடித்து உள்ளது.

இதன்படி, பறவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவை உயிரிழக்கின்றன. முட்டையிடும் கோழி பண்ணைகளில் ஒரு கோழிக்கு பாதிப்பு உறுதியானால் அதில் உள்ள 10 லட்சம் கோழிகளும் அழிக்கப்படும். இதுபோன்ற அழிவுகளால், கோழி முட்டைகள் மற்றும் கோழிகளின் விலை அதிகரித்தது.அமெரிக்காவில் பறவை காய்ச்சல் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. பின்னர் 46 மாகாணங்களில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. வான்கோழி பண்ணைகள் 70 சதவீதத்திற்கும் கூடுதலான அளவுக்கு காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொண்டன என அந்த அறிவிக்கை தெரிவிக்கின்றது.

“இலங்கைக்கு உதவியதால் பலர் எங்களிடம் உதவி கேட்கிறார்கள்.”- பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா

இலங்கைக்கு பங்களாதேஸ் உதவி வழங்கிய பின்னர் பல நாடுகள் தங்களிடம் உதவி கோரியுள்ளன என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் இலங்கையுடன் நாணயபரிவர்த்தனையில் ஈடுபட்ட பின்னர் பல நாடுகள் எங்களை தொடர்புகொண்டு அவ்வாறான உதவியை நாடின என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து நாங்கள் இலங்கைக்கு உதவினோம் அதன் பின்னர் பல நாடுகள் என்னை தொடர்புகொண்டன என அவர் தெரிவித்துள்ளார்.

பல அரசாங்கங்கள் என்னை தொடர்புகொண்டுள்ளன நான் யதார்த்தத்தை அவர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளேன் நாங்கள் வேறு உதவிகளை அடிப்படையாகவைத்தே வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தருணத்தில் நாங்கள் உதவி வழங்கும் நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கின்றன நாங்கள் உடனடியாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி சீனாவில் மக்கள் போராட்டம் !

உலகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் சீனாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

அந்த வகையில் ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு மற்றும் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே, ஊரடங்கு அமலில் உள்ள ஜிங்ஜங்க் மாகாணத்தில் உரும்யூ நகரில் கடந்த 24-ம் திகதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உரும்யூ நகரில் நேற்று முன் தினம் இரவு திரண்ட மக்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சீன அதிபர் ஜி ஜீன்பிங்கிற்கு எதிராகவும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும், போராட்டம் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.