10

10

பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடிக்க செய்தார் – தனுஷ்க குணதிலக தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியது சிட்னி நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, தனுஷ்கா குணதிலக தனது வீட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், பின்னர் அவர் ஒரு கையை பெண்ணின் கழுத்தில் வைத்து 20 முதல் 30 வினாடிகள் வரை கழுத்தை நெரித்தார்.

இந்த பலாத்காரம் தொடர்பாக அப்பெண் துஷ்பிரயோக பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரால்டில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பான விடயங்களை பகிரங்கப்படுத்த ஊடகங்களுக்கு சிட்னி நீதவான் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டை அடுத்து தடையை நீக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

பெண்ணின் அனுமதியின்றி பாலியல் பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தனுஷ்க குணதிலக்க, காணொளி தொழில்நுட்பம் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன் போது பலாத்காரம் நடந்த விதம் தொடர்பான முழுமையான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முழு அறிக்கையை சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.

விசாரணைகளின் போது முறைப்பாட்டாளர் முன்வைத்த சில விடயங்களை தனுஷ்க குணதிலக்க ஒப்புக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக் சார்பில் கடந்த திங்கட்கிழமை ஆஜரான சட்டத்தரணி ஆனந்த அமரநாத், வழக்கிலிருந்து விலகினார். தனுஷ்க குணதிலக் சார்பில் பாரிஸ்டர் சாம் பரராஜசிங்கம் மற்றும் சட்டத்தரணி சாரா பிளேக் ஆகியோர் ஆஜராகினர்.

யாழ்ப்பாணத்தில் 4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் – தந்தை தலைமறைவு !

4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்ட வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில் மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி, தாயையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 04.11.2022 அன்று, வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.

பின்னர் அவர், கடந்த 4ம் திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட் எப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்ட நிலையில் காணொளியில் இருந்த குறித்த குழந்தை இன்று காலை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.