19

19

ஹெரோயின் உள்ளிட்ட எல்லா போதைப்பொருட்களுக்கும் முழுமையான தடை – தலிபான்களின் அதிரடியான 05 அறிவிப்பு !

பெண்கள் உரிமை மற்றும் தூதரகப்  பாதுகாப்பு உட்பட முக்கிய 5 வாக்குறுதிகளைத் தலிபான்கள்  அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகள்

பெண்களுக்கு உரிமை

பெண்கள் வேலைக்குச் செல்லவும், படிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இஸ்லாம் விதிகளின்படிதான் அது செயல்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

1996 – 2001ஆம் ஆண்டும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பொது மன்னிப்பு

எங்களுக்கு எதிராக இருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம். அரசுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூதரகங்களுக்குப் பாதுகாப்பு

வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரகங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கன் மண்ணை அந்நியர் பயன்படுத்த அனுமதியோம்

ஆப்கானிஸ்தான் மண்ணை அந்நியர் பயன்படுத்த நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என்றுதலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கப் படைகள், பின்னர் அங்கு 20 ஆண்டு காலம் நடைபெற்ற தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருட்களுக்குத் தடை

தலிபான்கள் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர்.

ஹெய்டி நிலநடுக்கம் – உயிர்ப்பலி 2,189 ஆக உயர்வு !

ஹெய்டியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2,189 ஆக அதிகரித்துள்ளது.

ஹெய்டியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி திடீரென ரிக்டர் அளவில் 7.2 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தினால் ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலையில் இந்த நில நடுக்கத்தினால் பலியானவர்கள் எண்ணிக்கை 2, 189 ஆக அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு மாகாணங்களில் அவசர நிலையை  அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் ஹெய்டி அடிக்கடி இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ் திட்டம் – உலக சுகாதார அமைப்பு கண்டனம் !

லட்சக்கணக்கான மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் உள்ளபோது, பூஸ்டர் டோஸ்களை வழங்க  பணக்கார நாடுகள் அவசரப்படுவதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகள் ஒரு டோஸ் கூட செலுத்த முடியாத நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் , பிரிட்டன் ஆகிய நாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் இதனை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

“ஏற்கனவே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வைத்திருக்கும் மக்களுக்கு கூடுதல் லைஃப் ஜாக்கெட்டுகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.

அதே வேளையில் ஒரு லைஃப் ஜாக்கெட் கூட இல்லாமல் மக்களை தவிக்க விட்டுள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை கூட போடவில்லை. ஆனால் பணக்காரநாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு அவசரப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் எங்கே ..? – உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகொப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌

மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.