01

01

. “எங்கள் சுதந்திரம் ஆபத்தில் இருக்கின்றது.” – கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டத்தில் !

ஐரோப்பிய நாடான பிரான்ஸ், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. சில நாட்களாக பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருந்து வருகிறது. பிரான்சில் கொரோனா 4-ம் அலை தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பிரான்சில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாரீஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கட்டாய கொரோனா கட்டுப்பாடுகள் தங்களது சுதந்திரத்தை பறிக்கிறது என்று கோ‌ஷமிட்டனர்.

போராட்டக்காரர்கள் கூறும்போது, மனித உரிமை உள்ள நாட்டில் இப்படி செய்வது நம்ப முடியாதது. இதனால் தான் தெருக்களில் இறங்கி போராடுகிறோம். எங்கள் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறோம்’ என்றனர்

போராட்டம் நடத்திய மக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பாரீசில் நடந்த மோதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டங்கள் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மன் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் – ஐக்கிய நாடு சபை அறிக்கை !

எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில்,

“ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை செய்ததில் இருவரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

டைக்ரேவில் சுமார் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர். மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அவசர உணவுத் தேவையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக டைக்ரே பகுதியில் உள்ள இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது.

முன்னதாக, 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது. அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவிவந்த ராணுவ ரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்குக் கொண்டுவந்தார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்சினைகளை அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சகலதுறை வீரரான இசுரு உதான !

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, 33 வயதான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திடம் அறிவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இடதுக்கை வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான, இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் 237 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதேபோல 34 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 விக்கெட்டுகளையும் 256 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.