07

07

“ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும்” – அமைச்சர் சரத் வீரசேகர

“இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும்” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (06.01.2021) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த அவர் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் 8 தீர்மானங்களை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொண்டுவந்திருந்தார். அவ்வாறே 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்துக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது சரத் வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது என கூறினார்.

இந்த நிலையில் இவை அனைத்தும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டு என்பதை நாம் இம்முறை ஜெனீவா அமர்வில் நிருபிப்போம் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிக்க தமிழ்தேசிய கட்சிகள் இணக்கம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றையதினம் (06.01.2021) மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இதுகுறித்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

முன்மொழிவு வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் முக்கியஸ்தர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.