2021

2021

தொலைபேசி இறக்குமதியை தடைசெய்யத் தீர்மானம் இல்லை – அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன

தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையும் இடம் பெறவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி இடை நிறுத்தப்படவேண்டும் என இலங்கை மத்திய வங்கி தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு வேறு மூலோபாயங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்பார்த்துள்ளது. பரஸ்பர பறிமாற்ற வசதிகள் ஊடாக சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடமிருந்து 8 ஆயிரம் மில்லியன் நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். தொலைக்காட்சி, தொலைப்பேசி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறான தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அர்ஜுன அலோசியஸிற்கு சொந்தமான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகளை மீள ஆரம்பிக்க வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் சந்தேக நபராக உள்ள காரணத்தினால் அந்நிறுவனத்திற்கு விற்பனை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பொறுத்தமற்றது என அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது என்றார்.

அஸ்ட்ராஜெனெகா பெற்றவர்களுக்கு பைசர்

ஒக்ஸ்போர்ட்டின் அஸ்ட்ராஜெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள் இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கை கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இரண்டாவது செலுத்துகையை மேற்கொள்ளும்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகக்கவசங்களுக்கு bye சொல்கிறது இங்கிலாந்து..!

ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக கொரோனாவை வெற்றி கொண்டு வெளிவருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. முக்கியமாக உலகின் பல பகுதிகளும் முடங்கிப்போயிருக்க ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக முகக்கவசங்களை தூக்கி வீச ஆரம்பித்துள்ளன. முக்கியமாக யூரோ உலக்கிண்ண போட்டிகளை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்த வண்ணமுள்ளனர்.

கொரோனா  பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது  முக கவசம்  அணிவது கட்டாயமாக உள்ளது. விரைவில் இந்த கட்டுப்பாடு அகற்றப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து வீட்டு வசதிதுறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் கூறியதாவது:-

வருகிற 19-ந்திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக நீக்க தயாராகி வருகிறோம். அதன் பிறகு யாரும் முககவசம் அணிய தேவை இருக்காது. இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன.” என்று அவர் கூறியுள்ளார்.

நேர்முக வர்ணனையில் அருவருக்கத்தக்க விதமாக பேசிய தினேஷ்கார்த்திக் !

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நேர்முக வர்ணனையின்போது, அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியமைக்காக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டையையும், பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியையும் ஒப்பிடும் வகையில் தினேஷ் கார்த்திக் பேசியமைக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

தினேஷ் கார்த்திக்கின் ஆபாசமான இத்தகைய விமர்சனத்துக்கு அவரின் மனைவியும், தாயும் கூட கண்டனம் வெளியிட்டனர்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் மன்னிப்புக் கோரியுள்ளார். தினேஷ் கார்த்திக் தனது கிரிக்கெட் வர்ணனையின்போது, “ பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் தங்களின் மட்டையை விரும்பவதில்லை. அது அவர்களுடனே இருக்கும். ஆனால், மற்ற வீரர்கள் பயன்படுத்திய மட்டைகளைதான் அதிகமாக விரும்புவார்கள். மட்டை என்பது அடுத்தவர் மனைவி போல. அதுதான் சிறந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சமூகவலைத்தலங்களில் கடும் கண்டனம் எழுந்திருந்த நிலையில், இலங்கை – இங்கிலாந்து இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியின், வர்ணனையில் தனது முந்தைய அருவருக்கத்தக்க பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

கடந்த போட்டியில் நான் பேசிய பேச்சுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை. ஆனால், அது தவறுதான்.

அனைவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல என்றார்.

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட மக்கள் படை – கிராம மக்களை சுட்டுத்தள்ளிய இராணுவம் !

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்திகதி இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், இராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், மத்திய மியான்மரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் தீவிரமடைந்துள்ளது. சில பகுதிகளில் இராணுவத்திற்கு எதிராக மக்களே ஒன்று சேர்ந்து பாதுகாப்பு படைகளை உருவாக்கி உள்ளனர்.
இதில், காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இராணுவத்திற்கு எதிரான பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 890 ஆக உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை கிராமத்திற்குள் புகுந்த இராணுவ வீரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இறந்துபோனவர்களின் உடல்களை மீட்பதற்கு கூட வெளியேற முடியாத நிலையில் இருந்துள்ளனர். சனிக்கிழமை 17 உடல்களும், இன்று 8 உடல்களும் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பலர் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். காட்டுப்பகுதியில் உள்ள தங்கள் குழுவினரை இராணுவம் வேட்டையாடி வருவதாக பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இலங்கையில் இது வரை 2 62 795 பேர் பாதிப்பு !

2019 இறுதி தொடங்கி பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.85 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 77 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதே நேரம் இலங்கையை பொறுத்தவரை  இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 62 ஆயிரத்து 795  பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து விடுதலை கீதம் பாடிய மேதகு நாயனார்! – த.ஜெயபாலன்

ஞானப்பால் குடித்து தேவரம் பாடிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குப் பிறகு விடுதலை கீதம்  பாடியவர் மேதகு நாயனார். மேதகு என்ற இந்தப் பெயரை நக்கல் நளினத்துக்காக வைத்தார்களா இல்லை உண்மையிலேயே நேர்மையுடன் தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது  தெரியவில்லை. ஆனால் மேதகு படம் ஒரு ஆளுமையுடைய வரலாற்றை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

அந்தப் படத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் எதுவுமே தெரியாத சிலரே உருவாக்கியுள்ளனர். அந்தப் படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள், நடந்த சம்பவங்கள் பற்றிய எவ்வித ஆய்வும் இல்லாமல், சகட்டுமேனிக்கு காட்சிப்படுத்தப்பட்டு, ஒரு வரலாற்றுக் குப்பையாக்கி உள்ளனர். மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்று பலர் வரலாற்றைப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் தங்கள் தேவைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்குமேற்ப வரலாற்றைச் சோடிக்கலாம் எனக் கருதுகின்றனர். அதற்கு மேதகு நல்லதொரு உதாரணம்.

படத்தின் தலைப்பில் இருந்து இறுதிவரை படம் உயிரோட்டமாக இல்லை. சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களுடைய கட்டாயத்தின்படி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகின்றது. உலகத்தில் எத்தனையோ தலைவர்களுடைய ஆளுமைகளுடைய படங்கள் தத்துரூபமாக எடுக்கபட்டு; காலத்தால் அழியாத வரலாற்று ஆவணங்களாக அமைந்து; பல விருதுகளையும் வென்றுள்ளன. ஆனால் மேதகு படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பிரச்சாரவாடை தாங்க முடியவில்லை. உலகில் எந்தத் தலைவரதும், ஆளுமையினதும் வரலாறும் இவ்வளவு பிரச்சாரவாடையுடன் உண்மைக்குப் பிறம்பாகப் பதிவு செய்யப்படவில்லை. உண்மையான தலைவர்களுக்கு செயற்கையாக விம்பம் கட்டவேண்டிய அவசியமும்  இல்லை. பிரச்சாரமும் தேவையில்லை.

காந்தியின் வரலாற்றை மகாத்மா என்ற பெயரில் படமாக்கவில்லை. காரணம் அத்தலைவர்களுக்கு பிரச்சாரம் தேவைப்பட்டிருக்கவில்லை. தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. இதுவரை இவ்வுலகில் தலைவர்களாக கொள்ளப்பட்டவர்களில் தீபெத் மக்களுக்காக குரல்கொடுக்கும் தலய்லாமா மட்டுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் சிறுபிராயம் முதல் சமயகட்டுப்பாடுகளோடு வாழ்பவராகவும்  உள்ளார். ஏனைய தலைவர்கள் சாமானியர்களாகப் பிறந்து தலைவர்களாக ஆகினர். அவர்கள் சாதாரண மனிதருக்குள்ள பண்புகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் தாங்கள் எப்போதும் சரியாக இருந்ததாகவோ சுத்தமான சுவாமிப் பிள்ளைகளாக வாழ்ந்ததாகவோ குறிப்பிடவில்லை. தங்கள் ஆளுமைகளினால் தங்களை ஆளுமைகளாக நிறுவினர். அவர்கள் தங்களைப் பற்றிய விம்பங்களைக் கட்டமைக்கவில்லை. அதனால் அவர்கள் சர்வதேச அளவிலும் பல்வேறு தரப்பினராலும் ஆளுமைகளாக தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் பொறுத்தவரை அவர்கள் தங்கள் brand name யை – unique selling pointயை செயற்கையாகக் கட்டமைக்க முயல்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு அம்சமே மேதகு.

படத்தில் சம்பவம் நடந்த திகதியையும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வைத்துக்கொண்டு கதைகள் புனையப்பட்டு உள்ளது. இப்படத்தில் உண்மையின் வறுமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனுடைய வரலாறு – நேர்மையாக் பதிவு செய்யப்பட முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. புலிக்குட்டிகளின் விசிலடிச்சான் குஞ்சுகளின் தலையீடு இல்லாமல் காத்திரமாக எடுக்கக் கூடிய ஒரு படைப்பாளியினாலேயே அவ்வாறானதொரு சிறந்த படைப்பைத் தர முடியும்.

பூலான் தேவியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தில் பூலான் தேவியின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்மையுடன் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானியாவின் சனல் போர் பில்ம்ஸ் இனால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சேகர் கபூர் இயக்கி இருந்தார். அதேபோல் சந்தோஸ் சிவனின் ‘தி ரெறறிஸ்ற்’ திரைப்படம் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு தற்கொலைக் கொலையாளியின் உணர்வை மையமாக வைத்து உயிரோட்டமாக அப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அத்தற்கொலைப் போராளி இன்னொரு போராளியுடன் உறவுகொள்வதை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் வைத்துக்கொண்டு, இயக்கத்தில் அப்படி நடப்பதில்லை என்று மனித உணர்வுகளைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக விமர்சனங்களை முன் வைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதோ பிரபாகரன் பிறக்கின்ற போதே அவர் விடுதலை உணர்வோடு பிறந்து மூன்று வயதிலேயே ‘தமிரின் தாகம் தமிழீழத் தாயகம்’ சொன்னார் என்பது போலவே தான் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அத்திரைப்படம்  பதிவு செய்கின்ற துரையப்பா கொலை வரையான காலகட்டத்தில் வே பிரபாகரன் ஒரு ஆர்வக்கோளாறுடைய இளைஞர். பிரபாகரனுக்கு தம்பி என்ற பெயர் வரக்காரணமே அவர் இருந்தவர்கள் எல்லோரிலும் இளையவராக இருந்ததும்  அவரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்ததும் வரலாறு. குட்டி மணி தங்கத்துரை போன்றவர்கள் அதனாலேயே ‘மல்லி’ என அழைத்தனர். பிரபாகரனுடன் தம்பி நிலைத்துக்கொண்டது. படத்துக்கு தம்பி என்ற பெயரே மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும்.

அன்றைய சூழலில் இருந்த அரசியல் பின்னணியைக் கூட படம் தவறவிட்டுவிட்டது. துரையப்பாவை துரோகியாக்கியது தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் உட்பட்ட இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆவா குறூப். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் இல்லை என்று சொல்ல பிரபாகரன் போன்றவர்கள் துரையப்பாவை படுகொலை செய்தனர். தமிழீழ கோசத்தை கண்டு பிடித்து பிரபாகரன் போன்ற இளைஞர்களின் கையில் கொடுத்ததே தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் ஒன்றும் விடுதலை உணர்வோடு பிறந்து வளர்ந்து போராட வரவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தூண்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். அவர் விடுதலைப் போராட்ட புத்தகம் எல்லாம் படித்தார் என்பது சற்று ஓவர். ஆனந்தவிகடன் குமுதம் கல்கி படித்ததாகவே வே பிரபாகரன்  நேர்காணல் ஒன்றிலேயே சொல்லி உள்ளார்.

பிரபாகரன் தீயிட்டு கொழுத்திய பஸ் வண்டி கூட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியாகத் தெரியவில்லை. தமிழகத்தில் ஓடும் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பஸ் வண்டியே கொழுத்தப்பட்டது.

இதெல்லாவற்றுக்கும் மேலாக தமிழாராச்சி மாநாட்டைச் சித்தரித்த காட்சி அமைப்புகள் மிக மோசமானவை. யாழ்ப்பாண தமிழராய்ச்சி மாநாடு மண்டபத்தினுள்  நடத்த முடியாமல் முத்தவெளி மைதானத்தில் மக்கள் திரண்டனர். ஆனால் படத்திலோ நூற்றுக்கும் குறைவான மக்கள் மத்தியில் புத்தகவெளியீடு நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக வந்திருந்த இரா ஜனர்த்தனன் உரையாற்ற திட்டமிட்டு இருந்தமையாலேயே பொலிஸார் அங்கு செல்லப்பணிக்கப்பட்டனர். அப்பொலிஸ் அதிகாரி மேலே நோக்கித் துப்பாக்கிச்சூட்டை நடாத்த மின்சாரக் கம்பி அறுந்து இரும்புக் கம்பியில் வீழ்ந்தது. அப்போது அந்த இருப்புக் கம்பியில் கையைப் பிடித்துக்கொண்டு நின்றவர்களே மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டடனர். அன்று மரணித்த ஒன்பது பேர் மின்சாரம் தாக்கியும் இன்னுமொருவர் மாரடைப்பாலும் மரணமானதாக பிரேத பரிசோதணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. மேதகு வில் காட்டப்பட்டது போல் யாரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு மரணிக்கவில்லை.

வரலாற்றை எப்படியும் புனையலாம் எப்படியும் திரிக்கலாம் என்று எம்மத்திலயில் இன்றும் சிலர் நம்புகின்றனர். அவர்களுக்கு பாடம் வரலாறே பாடம் கற்றுக்கொடுக்கும் என்பதில்  சந்தேகம் இல்லை. வே பிரபாகரன் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தனையோ படுகொலைகளைச் செய்தும் இன்றுவரை அவர்களுடைய வரலாற்றை துடைத்தெறிய முடியவில்லை. ஆண்டுதோறும் நினைவுக் கூட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால் வே பிரபாகரனுக்கு எவ்வித ஞாபகார்த்த நிகழ்வுகளும் இல்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு அமைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வே பிரபாகரன் மே 18 இல் கொல்லப்பட்டாரா மே 19 இல் கொல்லப்பட்டாரா எப்போது கொல்லப்பட்டார் அல்லது இன்னும் இருக்கின்றாரா என்பதற்கே அவ்வமைப்பு விடைகாணவில்லை.

பயணத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்குச் சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (அந் நாட்டு நேரப்படி) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு மாகாணத்தின், ஜொலோ தீவில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த விமானத்தில் புதிதாக இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்துள்ளனர் என்றும் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அபூ செய்யப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டடனர் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

பசிலின் வருகையால் தீர்வு கிட்டாது – தயாசிறீ காட்டம்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போல உருவாக்கப்படும் விம்பங்களில் உண்மையில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வந்து அமைச்சரானால் மறுநாள் காலை நினைப்பதெல்லாம் நடந்து விடாது. இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. 2025ஆம் ஆண்டில் கடனை செலுத்த 29 பில்லியன் டொலர் தேவை.
கோட்டாபயவின், மஹிந்தவின் அரசாங்கமோ அல்லது பசில் நாடாளுமன்றத்துக்கு வந்ததால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றிருக்காமல், நாட்டு மக்களுக்கு முதலில் பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால், இந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மக்களிடம் கேட்க முடியும். ஏனென்றால் நாம் அனைவரும் இதை எதிர்கொள்ள வேண்டும். எவரேனும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கூறினால், அப்படியில்லை. உண்மை நிலைமை இதுதான் – என்றார்.