2021

2021

வாழ்வதற்கான உரிமைக்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையே!! இந்த வாரம் பார்சல் டெலிவரி மோசடி 500,000 ஆக அதிகரிப்பு!!!

கிறிஸ்மஸ் மற்றும் நியூஇயர் காலக் கொண்டாட்டங்கள் பிரித்தானியாவில் நடைபெறும் பார்சல் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை கொண்டுள்ளன. இவ்வாராம் பார்சல் டெலிவரிகளின் மிக உச்சமான காலமாகையால் மோசடிகளின் எண்ணிக்கையும் எகிறியுள்ளது. ஸ்கொட்லன்ட் யாட் இன் மோசடிதடுப்புப் பிரிவின் கணிப்பின்படி இவ்வாரம் மட்டும் 500,000 மோசடிகள் நடைபெறும் என மதிப்பிட்டுள்ளது.

எனக்கு ஹேர்மிஸ் டெலிவரி நிறுவனத்தின் பெயரில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து டிசம்பர் 21இல் அனுப்பி வைக்கப்பட்ட குறும்தகவலில் தாங்கள் டெலிவரி செய்ய முயற்சித்த போது நாங்கள் வீட்டில் இல்லாததால் நான் மேலதிகமாக 1.45 செலுத்த வேண்டும் என்று சொல்லி அதற்கான இணைப்பை வழங்கி இருந்தனர். இந்த இணைப்பைக் க்கிளிக் செய்தால் அது எங்களின் மிக முக்கியமான தகவல்களைப் பெற்று அதிலிருந்து எம்மி;டம் இருந்து பணத்தைக் கறக்கின்றனர். நான் பொதுவாகவே ஒன்லைனில் எதுவும் ஓடர் செய்வதில்லை என்பதால் எனக்கு அதன் நம்பகத்தன்மையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. இன்று பிபிசி செய்தியில் இவ்வாறான மோசடிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இலங்கையில் இருந்து புத்தகப் பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. டிபிடி குறித்த திகதியில் பார்சலை டெலிவரி செய்யவில்லை. அவர்கள் டெலிவரி செய்ய முயற்சித்த தினத்தில் நான் வீட்டில் இல்லை. அவர்கள் அருகில் உள்ள அவர்களின் கலக்சன் பொயின்ற்றில் பார்சலை விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.அவர்களுடைய டெப்போவுக்கு போன் பண்ணி அதனை பெற்றுக்கொள்ள முயன்றால் கொரோனா காரணமாக நாங்கள் டெப்போ பக்கமே வர இயலாது என்றார்கள். போனில் இருந்த பெண்ணும் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. எனக்கும் இரத்தக் கொதிப்பாகியது. மனேஜரை கூப்பிடச் சொன்னால் மனேஜரும் அரை மணிநேரத்திற்குள் போன் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் போன் எடுக்கவேயில்லை. திருப்பியும் இன்னொரு சுற்று அதே பதில் அதே விளைவு. இன்று ஒரு மாதம் கடந்தும் அந்த பார்சலுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.

இதற்கிடையே பார்சலை அனுப்பியவர் தான் இன்னுமொரு பார்சல் அனுப்பி உள்ளதாகவும் அது புதிய முகவரிக்கு வரும் என்றும் சொன்னார். அதுவும் குறித்த டெலிவரியில் வரவில்லை. அதன் பின் அமெக்ஸ் டெலிவரி நிலையத்தில் இருந்து ஒரு குறும் தகவல் வந்தது 11:25க்கும் – 12:25க்கும் இடையே பார்சல் வரும் என்று. அன்று பார்சல் வரவில்லை.

அதன் பின் மறுநாள் மாலை 18:40க்கும் – 19:40க்கும் இடையே பார்சல் வரும் என்று டிஎச்எல் இல் இருந்து ஒரு குறும்தகவல் வந்தது. ஆனால் பார்சல் வரவில்லை. குறும்தகவல் வந்தது. உங்களுடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்டதாகவும் நான் – ஜெயபாலன் பார்சலை பெற்றுக்கொண்டதாகவும்.

ஆனால் பார்சல் அதன் பின் 48 மணிநேரங்களிற்குப் பின்னரே என் கைக்கு வந்தது. புத்தகம் என்பதால் யாரும் அதனை களவாடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெறுமதியான பொருட்கள் என்றால் சில வேளை இந்தப் பார்சல் எனக்கு கிடைத்தே இருக்காது.

ஒரு பார்சலை டெலிவரி செய்வதற்கு ஏன் இத்தனை நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே. தங்களுடைய பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் இயங்கி மக்களை ஏமாற்றுகின்றனர். நீங்கள் பொருளை அனுப்புவதற்கான பணத்தைக் கட்டும்வரை தான் அவர்களுக்கு கஸ்டமர். அதற்குப் பின் நீங்கள் யாரோ அவர்கள் யாரோ. அவர்களுக்கு பணத்தையும் கட்டி அவர்களுக்கு போன் பண்ணி அவர்களுக்காக காத்திருந்து நேரத்தையும் வீணடித்து அமசோன் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ் போன்றவர்களை அதீத செல்வந்தராக்கி கொண்டிருக்கிறோம். எமது நுகர்வோர் கலாச்சாரமே அவர்களது அதீத செல்வத்தின் பின்னணி. எமக்கு என்ன வேண்டும் என்பதை இன்று இவர்களே தீர்மானிக்கின்றனர்.

இந்தப் பெரும் நிறுவனங்களும் லாப நோக்கில் டெலிவரி ரைவர்களை மிகவும் கசக்கி புளிகின்றனர். ப்றிலன்ஸாக தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு சிறுநீர் கழிக்க நேரம் இல்லாத அளவுக்கு டெலிவரி செடுயூல் போடப்பட்டு இருக்கும். அவர்கள் வானில் உள்ள போத்தலிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். வாகனத்தை ஓட்டிக் கொண்டே உணவருந்துகின்றனர். எல்லாத் தவறுகளும் எல்லா பொறுப்புகளும் அவர்கள் தலையிலேயே கட்டப்படுகின்றன. சம்பளம் பெறும் நவீன கூலி அடிமைகளாக்கப்பட்டு உள்ளனர். கொன்சவேடிவ் அரசின் சிரோ அவர் கொன்ராக் இந்த மல்டிநஷனல் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கவே உதவுகின்றது. தொழிலாளர்களின் நலன்பற்றியோ மக்களின் நலன்பற்றியோ எவ்வித கரிசனையும் கிடையாது.

திறந்த சந்தைப் பொருளாதாரம் உங்களுக்கு தேர்வு செய்வதற்காக உரிமையை வழங்குவதாக மார்தட்டி பீற்றிக்கொள்கின்றது. அந்த தேர்வு என்ன? ரைட் செடுயூலில் சிறுநீரை போத்தலில் களித்து வேலையைச் செய்ய வேண்டும். இல்லையேல் வேலையில்லாமல் பிச்சைப் பணத்திற்கு கையேந்த வேண்டும். இந்த மேற்கு நாடுகளின் வாழ்வதற்கான உரிமை என்பதற்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையும் தான். அதனை கோவி;ட் அம்மணமாக நிரூபித்துள்ளது. கோவிட்இல் வறுமைகோட்டில் வாழ்வோரே பெரும்பாலும் உயிரிழந்தனர். உயிர் இழந்துகொண்டிருக்கின்றனர். உயிரிழப்பர். 2000க்கும் மேற்பட்ட அதீத செல்வந்தர்களின் லாபம் கோவிட் காலத்தில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

லண்டனில் எனது இன்றைய அனுபவம்!!!

இன்று காலை எனக்கு தொலைபேசியில் ஒரு குறும் தகவல் Hey dad this is my new number you can delete my old number. இரண்டாவது மகன் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் இப்ப விடுமுறையில் வந்துவிட்டான். இதற்கு முன்னரும் இவன் இப்படி போன் நம்பரை மாற்றி இருக்கிறான். நான் பஞ்சிப்பட்டு மாற்றாமல் குழம்பி சத்தம் போட்டும் இருக்கிறேன். அந்த போன் நம்பருக்கு போன் செய்தேன் போன் கரகரத்தது. இப்படி அனுபவங்கள் முன்னரும் நடந்தது. மீண்டும் ஒரு மசேஜ். தன்னுடைய போன் உடைந்துவிட்டதாகவும் கதைக்க முடியாது என்றும் மசேஜ் வந்தது. சரி போன் வாங்கி இப்ப ஒரு ஆறு மாதம் தான் வொறன்ரியில் மாற்றுவோம் என்றன். முன்னம் விட்ட தவறை திரும்பவும் விடக்கூடாது. அப்பனுக்கு மகன் அட்வைஸ பண்ண விடக்கூடாது என்று என்பதுக்காக உடனேயே நம்பரை மாற்றி புதிய நம்பரை சேவ் பண்ணிக்கொண்டேன்.

பிறகு இன்னுமொரு மசேஜ் தனது பாங்க் எக்கவுண்டை ப்றீஸ் பண்ணி வச்சிருக்கிறதாகவும் தனக்கு பில்லைக் கட்டிவிடவும் கேட்டான். சரி என்ன பல்கலைக்கழகத்தில் படிப்பவனுக்கு ஒரு ஐம்பது நூறு பவுண் தானே பெத்ததுக்கு அதுவும் செய்யாவிட்டால் மரியாதையில்லை தானே. ‘நோ புரம்பளம்’ என்றும் தகவல் அனுப்பிவிட்டு எவ்வளவு கட்ட வேண்டும் என்றேன். £1800 பவுண் என்று தகவல் வந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் ஒரு பிச்சைக்கார வாத்தி என்றது நம்மட கொன்ஸ் தோழரின் புண்ணியத்தில உலகத்துக்கே தெரியும். என்ர பாங்கில எந்தக் காலத்தில £1800 பவுண் இருந்தது. நாங்கள் எல்லாம் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மாதிரி £50 பவுண் தாளையே கண்டிராத ஆட்கள்.

ஆனால் பாவம் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் ரூம் வாடகை குவாட்டருக்கு (இது அந்தக் கூவாட்டர் இல்ல. காலாண்டு) அவ்வளவு வரும் அது தான். அதுவா கட்ட வேணும் என்று மசேஜ் அனுப்பிவிட்டு இன்னுமொரு மசேஜ்ம் போட்டேன். எனக்கு சம்பளம் இன்னும் வரவில்லை. அண்ணாவிடம் வாங்கிக் கட்டு அண்ணாவுக்கு நான் பிறகு குடுக்கிறேன் என்று. என்னிடம் காசு இல்லாமல் அண்ணாவிட்ட கேள் என்று சொன்னது கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவனுக்கு ஏற்கனவே ஒரு £1000 குடுக்கக்கிடக்கு. (இந்தத் தகவல் தோழர் கொன்ஸ்க்கு அல்வா கொடுக்க.) திரும்பி மசேஜ் வந்தது நீங்கள் அண்ணாவிடம் சொல்லுங்கள் என்று. இப்ப எனக்கு உதைக்கத் துவங்கியது. எற்கனவே டாட் என்று அழைத்ததே எனக்கு இடித்தது.

என்னுடைய பிள்ளைகள் யாரும் என்னை ஒரு போதும் டாட் என்றோ டாடி என்றோ அழைப்பதில்லை. அப்பா என்றே அழைப்பார்கள். ஆங்கிலத்தில் மசேஜ் வந்தாலும் Appa என்றே எழுதுவார்கள். கொஞ்சம் அன்பு கூடினால் டோய் அப்பா அப்பா லூசா என நான் அவர்களை அழைப்பது போலே அழைப்பார்கள். டாட் டாடி எல்லாம் கொஞ்சம் ரூமச் மாதிரித்தான் தெரிந்தது. ஆனால் யூனிவர் சிற்றியில குவாட்டர் இறங்கிச்சுதோ தெரியேல்ல. அத்தோடு அண்ணாவிட்ட கேள் என்றால் அவன் நேர அண்ணனின் கழுத்தைப் பிடித்து காசை மாற்றியிருப்பான். அண்ணன் தான் அலறி அடித்து எனக்கு அடித்திருப்பான். சரி என்று மூத்தவனுக்கு அடித்தேன். அவன் போனைத் தூக்வில்லை. அண்ணவோடு கதைத்துவிட்டு சொல்கிறேன் என்றுஒரு மசேஜ் போட்டுவிட்டு இருக்க மூத்தவன் அடித்தான்.

‘தம்பி நிக்கிறானா?’. ‘ஓம்’ என்றான். கொடுத்தான். ‘ஏன் ரூம் ரென்ற் கட்டவில்லையா’ என்றேன். ‘ஏன் காசு கேட்ட நீ’ என்றேன். அப்பதான் நித்திரையால் எழும்பியவன், ‘உங்களுக்கு என்ன லூசா?’ என்றான். அப்ப தான் ஓடி வெளித்தது. பிச்சைக்காரனாய் இருந்தால் எங்களிட்ட இருந்து காசு பிடுங்குவது கொஞ்சம் கஸ்டம் என்று.

உடனே நான் மசேஜ் போட்டேன் ‘நீ தந்த எக்கவுண்டுக்கு 1500 பவுண் போட்டிருக்கிறேன்’ என்று அதுக்குப் பிறகு அவரை இழுத்தடித்து சம்பாசணையில் இருந்து கொண்டே அக்சன் புரொடில் போய் கொம்பிளெயின் பண்ணிவிட்டு அவன் தந்த எக்கவுண்டுக்கு 1.50 மாற்றிவிட்டு வங்கிக்கு போன் பண்ணிச் சொல்லி உள்ளேன்.

பெரும்பாலும் நாங்கள் ஊகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறோம். அதனால் தவறான முடிவுகளுக்கு தள்ளப்பட்டு பொருளாதார நஸ்டத்தையும் சந்திக்கின்றோம். இன்று எனது வங்கியில் பணம் இருந்திருந்தால் சில வேளை நான் அந்தத்தொகையை இழந்திருப்பேன். ஏதோ எனக்குத் தட்டிய சிறுபொறி என்னைக் காப்பாற்றியது. மிகக் கவனம். சிறிய கவனக் குறைவுகள் பெரும் இழப்புகளுக்கு எம்மைக் கொண்டு செல்லும். பொருளாதார இழப்புகள் மட்டுமல்ல அதனிலும் மோசமான உறவு முறிவுகள்இ உயிரிழப்புகள் என அவை பாரதூரமானவையாகவும் அமைந்துவிடும்.

முன்கூட்டிய முடிவுகளை வைத்துக்கொண்டு தான் நாம் பலவற்றைச் செய்கின்றோம். முதல் குறும் தகவலில் நான் ‘நீ யார்? என்று கேட்காமல் அந்தச் தகவல் என்னுடைய பிள்ளைகளிடம் இருந்துதான் வந்தது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். அவன் காசு கேட்ட போது நானாக அது வாடகைக் காசாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த முன் கூட்டிய முடிவுகள் என்னை தவறான முடிவுகளை எடுக்க வைத்தது. அதனால் எதனையும் தீர ஆராய்ந்து இயலுமான தகவல்களை திரட்டிய பின்னரேயே முடிவெடுக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் £250,000 பவுண்களை பறிகொடுத்த லண்டன் தமிழர்களின் கதை தேசம்நெற்றில். பறிகொடுத்தவர்களும் தமிழர்கள் பறித்தவர்களும் தமிழர்கள்.

மியன்மாரில் சுரங்கத்தில் நிலச்சரிவு – 70க்கும் அதிகமானோர் மாயம் !

மியன்மார் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணம் ஹபகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சீனா எல்லை அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று அதிகாலை சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் மீது மண் சரிந்து அமுக்கியது.
இந்த நிலச்சரிவில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பெருமளவில் மணல் சரிந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. நிலச்சரிவு குறித்து அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சரிந்து விழுந்த மணலை அப்புறப்படுத்தி தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் 25 தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நிலச்சரிவில் 70 முதல் 100 பேர் வரை சிக்கி உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்களது கதி என்ன? என்பது தெரிய வில்லை. அதிகளவில் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

அத்துமீறினால் அரசுடமை – எச்சரிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும் எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈட்டை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே வெடிப்புக்கு காரணம்!

எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு வெடிப்புகளுக்கு காரணம் என, எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பலகே இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், சிலிண்டர்களிலிருந்து எரிவாயுக் கசிவு ஏற்படுவதை சோதனை செய்ய லிட்ரோ நிறுவனத்திடம் உரிய முறைமைகள் எதுவும் இல்லை என்பதும் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பேக்கரி உற்பத்திகளுக்கும் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பல் என்பவற்றின் அடிப்படையிலேயே விலைகள் தீர்மானிக்கப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சொல்பேச்சைக் கேட்க மறுத்த உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் உட்பட இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் இன்று (21) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவு செலவுத் திட்டத்தில் நடுநிலை வகிப்பதாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடி சமூகநலன் சார்ந்து முடிவு எடுக்கப்பட்ட போதும் குறித்த உறுப்பினர் எதிர்த்து வாக்களித்துள்ளதாக க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் கட்சியின் முடிவை மீறி செயற்பட்ட காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவரும் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக க.சுகாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தால் வரவு செலவுத் திட்டம் தவிசாளரின் மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் புயல் – உயிரிழப்பு 208 ஆக உயர்வு !

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டது.
கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
சூறாவளிக் காற்றுடன் பயங்கர மழை பெய்ததால் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வாகன போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்தன. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. விவசாய பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன.
இந்த புயலுக்கு 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ராய் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
50-க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்ன வென்று தெரியவில்லை. அங்கு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

35 வயதில் சிலியின் ஜனாதிபதியாகிறார் கேப்ரியல் போரிக் !

தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது அதிபர் என்ற பெருமையை போரிக் பெற்றுள்ளார். கேப்ரியல் போரிக், 35 வயதாகும் இவர் தான் சிலி நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்க இருக்கும் இளம் கம்யூனிஸ்ட் தலைவர். அதிபர் பதவி புதிது என்ற போதும் கடந்த காலங்களில் சிலி அரசின் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டக்களங்களில் கேப்ரியல் போரிக் மிகவும் பிரபலம்.

சிலி நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாபெரும் போராட்டம் நாட்டையே உலுக்கியது. தரமான கல்வி, உதவி தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சிலி அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் முக்கிய நபரான போரிக் தான் தற்போது  அந்நாட்டின் புதிய அதிபர். இந்த போராட்டம் தான் தற்போது பதவியிலிருந்து வெளியேறும் அதிபர் செபாஸ்டியன் பெனெரா அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கும் வாக்கெடுப்பு நடத்தும் நிலையை உருவாக்கியது.

பெரும்பான்மையான சிலி மக்கள் இந்த வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஆதரவு அளித்தனர். புதிய அரசியல் அமைப்பு வரும் 2022 ஆம் ஆண்டு மத்தியில் உருவாக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது. செபாஸ்டியன் பெனெராவின்  பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து சிலியில் அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தீவிரமான போராட்டங்களால் இளைஞர்களின் அபிமானத்தையும், ஆதரவினையும் பெற்ற முன்னாள் மாணவர் தலைவர் கேப்ரியல் போரிக்கை இடதுசாரி கட்சி களத்தில் இறக்கியது. வலதுசாரி தரப்பில் ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் என்பவர் போட்டியிட்டார்.

பொது சுகாதார அமைப்பு, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, பெரும் செல்வந்தர்களுக்கு அதிகவரி, தனிநபர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட போரிகின் தேர்தல் வாக்குறுதிகள் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது. பரபரப்பான தேர்தல் பரப்புரைகளை அடுத்து சிலி அதிபருக்கான தேர்தல் நடைபெற்று, முடிவுகள் ஞாயிறு அறிவிக்கப்பட்டன. இதில் 55. 87% விழுக்காடு வாக்குகள் பெற்று சிலியின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார் கேப்ரியல் போரிக். கேப்ரியல் போரிகின் வெற்றியை நாடுமுழுவதிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சாலைகளில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சிலியின் தேசிய கொடிகளை ஏந்திய படி ஆடிப்பாடினர். போரிக்- கை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி தலைவர் ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் 44% வாக்குகளை பெற்றிருந்தார். கேப்ரியல் போரிக் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி சிலி நாட்டின் அதிபராக முறைப்படி பதவி ஏற்க உள்ளார். அரசியலில் தீவிரம் காட்டி வந்ததால் கேப்ரியல் போரிக் சட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை. இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு ஐரீன் என்ற காதலி இருப்பது குறிப்பிடத்தக்கத்து.

சிவஜோதி ஓராண்டு நினைவு: ஒரு சமூகப் போராளிக்கு ஒரு சமூக அரசியல் தலைவரின் மனையில் நினைவுக்கூட்டம்

சமூக செயற்பாட்டாளனும் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகவும் இருந்து எம்மைவிட்டுப் பிரிந்த வ சிவஜோதியின் ஓராம் ஆண்டு நினைவு நிகழ்வு அவன் பிறந்த இளமைக்காலக் கல்வியைக் கற்ற சுளிபுரம் மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளனான சிவஜோதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒரு உருவாக்கம். அந்த வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவை நாளை டிசம்பர் 19 அன்று மாலை நான்கு மணி முதல் 6 மணிவரை நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு இலங்கையின் இடதுசாரி அரசியல் தலைவர்களில் முன்னோடியான சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த எம் கே சுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்த சத்தியமனையில் உள்ள மண்டபத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தந்தையின் வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சத்தியராஜன் (மீரான் மாஸ்டர்) பெயரில் உள்ள அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வ சிவஜோதி என்ற ஆளுமையை உருவாக்கியதிலும் அவனுடைய சமூக செயற்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் சோ தேவராஜா தலைமையில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சிவஜோதியின் துணைவியார் பெற்றோர் கல்லூரி நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
 
இந்நிகழ்வில் சட்டத்தரணியும் கொழும்பு தமிழ் சங்க தலைவரான நடராசா காண்டீபன்இ தாயகம் ஆசிரியர் கந்தையா தணிகாசலம் ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தெட்சனாமூர்த்தி மதுசூதனன்இ புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் தலைவரும் புதியநீதி பத்திரிகை ஆசியருமான சி கா செந்திவேல், ஆய்வாளரும் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான கலாநிதி நடேசன் இரவீந்திரன் ஆசிரியர் பரமானந்தர் மதனகோபாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
நிகழ்வின் இறுதியில் வ சிவஜோதியின் பயணத்தை அவன் விட்ட இடத்திலிருந்து தொடரும் அவருடைய துணைவி லிற்றில் எய்ட் இன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்பாவர். ஹம்சகௌரி சிவஜோதி சிவஜோதியின் வழியில் குறிப்பாக சமூகத்தில் பெண்களுடைய நிலையை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் ஊடாக மேற்கொண்டு வருகின்றார். பெண் சமத்துவம், குடுபங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, இளவயதுத் திருமணங்கள், இளவயதில் தாய்மை அடைதல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிகழ்வில் ‘சிவஜோதியின் ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்படும்.
 
தற்போதைய சுகாதார சுகாதார விதி முறைகளுக்கு அமைய நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நிகழ்வு பற்றிய பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளது.