சிவஜோதி ஓராண்டு நினைவு: ஒரு சமூகப் போராளிக்கு ஒரு சமூக அரசியல் தலைவரின் மனையில் நினைவுக்கூட்டம்

சமூக செயற்பாட்டாளனும் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகவும் இருந்து எம்மைவிட்டுப் பிரிந்த வ சிவஜோதியின் ஓராம் ஆண்டு நினைவு நிகழ்வு அவன் பிறந்த இளமைக்காலக் கல்வியைக் கற்ற சுளிபுரம் மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளனான சிவஜோதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒரு உருவாக்கம். அந்த வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவை நாளை டிசம்பர் 19 அன்று மாலை நான்கு மணி முதல் 6 மணிவரை நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு இலங்கையின் இடதுசாரி அரசியல் தலைவர்களில் முன்னோடியான சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த எம் கே சுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்த சத்தியமனையில் உள்ள மண்டபத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தந்தையின் வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சத்தியராஜன் (மீரான் மாஸ்டர்) பெயரில் உள்ள அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வ சிவஜோதி என்ற ஆளுமையை உருவாக்கியதிலும் அவனுடைய சமூக செயற்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் சோ தேவராஜா தலைமையில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சிவஜோதியின் துணைவியார் பெற்றோர் கல்லூரி நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
 
இந்நிகழ்வில் சட்டத்தரணியும் கொழும்பு தமிழ் சங்க தலைவரான நடராசா காண்டீபன்இ தாயகம் ஆசிரியர் கந்தையா தணிகாசலம் ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தெட்சனாமூர்த்தி மதுசூதனன்இ புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் தலைவரும் புதியநீதி பத்திரிகை ஆசியருமான சி கா செந்திவேல், ஆய்வாளரும் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான கலாநிதி நடேசன் இரவீந்திரன் ஆசிரியர் பரமானந்தர் மதனகோபாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
நிகழ்வின் இறுதியில் வ சிவஜோதியின் பயணத்தை அவன் விட்ட இடத்திலிருந்து தொடரும் அவருடைய துணைவி லிற்றில் எய்ட் இன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்பாவர். ஹம்சகௌரி சிவஜோதி சிவஜோதியின் வழியில் குறிப்பாக சமூகத்தில் பெண்களுடைய நிலையை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் ஊடாக மேற்கொண்டு வருகின்றார். பெண் சமத்துவம், குடுபங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, இளவயதுத் திருமணங்கள், இளவயதில் தாய்மை அடைதல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிகழ்வில் ‘சிவஜோதியின் ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்படும்.
 
தற்போதைய சுகாதார சுகாதார விதி முறைகளுக்கு அமைய நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நிகழ்வு பற்றிய பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *