2021

2021

காதல் திருமணத்துக்காக அரச வாழ்க்கையை துறந்த ஜப்பான் இளவரசி மகோ !

ஜப்பான் இளவரசி மகோவும் சாமானிய பிரஜையான கெய் கொமுருவும் இன்று (26) திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி இன்று (26) முற்பகல் 10 மணியளவில் குறித்த இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் மகோ கல்வி பயின்றபோது அவருக்கு கெய் கொமுரு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துக்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு பல எதிர்ப்புகள் காணப்பட்டன.

ஜப்பானிய வழக்கத்தின் படி, அரச குடும்பத்தில் உள்ளவர்கள் சாதாரண பிரஜையொருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், ஜப்பானிய இளவரிசியான மகோ தமது காதலருக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், அரச குடும்பத்தினால் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்தையும் அவர் நிராகரித்துள்ளதுடன், அவர்களின் திருமண நிகழ்வும் மிகவும் எளிமையாக இடம்பெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர், மகோ மற்றும் அவரது கணவர் ஆகியோர் அமெரிக்காவில் குடியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாருக்கு விஜயம் செய்குதுள்ள இந்தியக்கோடீஸ்வரர் கௌதம் அதானி !

இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார். கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கௌதம் அதானியின் மகன், பிரதம நிறைவேற்றதிகாரி, அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளார். அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.

நான்கு வழிச்சாலைகளையும், 5.3 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்டதாக இது அமையவுள்ளது. துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘என் எண்ண ஓட்டத்தில்…’ நூல் வெளியீடும்! ‘சிவஜோதி நினைவுப் பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்) – அறிவிப்பும்!

‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற தலைப்பில் அமரர் சிவஜோதி வயீத்தீஸ்வரனின் ஆக்கங்களின் தொகுப்பு வருகின்ற 18ம் திகதியன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றி குறுகிய காலத்தில் அம்மண்ணின் மைந்தனான சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தையொட்டி இந்நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதியின் பிறந்த தினமான நவம்பர் 18 இலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி எழுதிய கட்டுரைகள், மேற்கொண்ட நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. தேசம் வெளியீடாக வரும் இந்நூலை திருமதி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்துள்ளார். நாடகக் கலை, நாடகக் கலைஞர்களுடனான நேர்காணல், பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய கல்வியியலாளர்களின் நேர்காணல்கள் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் தாங்கி இந்நூல் வெளிவருகின்றது.

சிவஜோதியை ஆண்டுதோறும் நினைவு கூருகின்ற வகையில் சிவஜோதி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் சிவஜோதி ஒரு நாடகக் கலைஞர் என்பதாலும்; நாடகக் கலையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்ததாலும் நாடகக் கலைக்காக தங்களை அர்ப்பணித்த ஒரு கலைஞருக்கு அல்லது நாடகக் கலைக்கு சேவையாற்றுகின்ற அமைப்பு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சன்மானத்தை பெறுகின்றவருக்கு அல்லது அமைப்புக்கு அந்நிகழ்வில் ஹம்சகௌரி சிவஜோதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவார்.

இந்நிகழ்வில் சிவஜோதி நினைவாக லிற்றில் எய்ட் இல் கற்கும் மாணவ மாணவியருக்கு யாழ் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய பாடசாலை சீருடைகளை வழங்க உள்ளனர். சிவஜோதி யாழ் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதியின் நினைவு நிகழ்வுகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும், நாடகக் கலைக்கு உழைக்கின்றவர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சிவஜோதி நினைவுப்பரிசை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்து உள்ளது. அதற்காக சிவஜோதி ஞாபகார்த்த நிதியம் ஒன்று லிற்றில் எய்ட் இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதி நேசித்த நாடகக் கலைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன்வருபவர்கள் இந்நிதியத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.

சிவஜோதி ஞர்பகார்த்த நிதியத்துக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்கள் நிதியை வழங்க முடியும்.
வங்கி: HNB
கணக்கின் பெயர்: Little Aid Skill Development Centre (Gurantee) Limited
வங்கிக் கணக்கு இலக்கம்: 146020176746

இவ்வாண்டுக்கான சிவஜோதி நினைவுப் பரிசைப் பெறும் நாடகக் கலைஞர் அல்லது நாடக்குழு நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவஜோதி ஞாபகார்த்த குழு அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வை சிவஜோதி முன்நிலை உறுப்பினராக இருந்து இயக்கிய மக்கள் சிந்தனைக் கழகம் மற்றும் லிற்றில் எய்ட் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

– சிவஜோதி ஞாபகார்த்த குழு –

லண்டன் நூலுரையாடல்: பாமரன் உண்மையில் பாமரனா?

நேற்று ஒக்ரோபர் 23 இல் ‘திரள்’ இலக்கிய குழுமம் ஏற்பாடு செய்த தோழர் பாமரனின் ‘பகிரங்க கடிதங்கள்’ நூலின் வாசிப்பனுபவமும் கலந்துரையாடலும் ஹரோவில் சிறப்பாக நடைபெற்றது. இருபது வரையான மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வை ஊடகவியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் பா நடேசன் தலைமையேற்று நடத்தினார். கோவிட் காலத்தில் கருக்கொண்ட ‘திரள்’ குழுமத்தின் முதலாவது நிகழ்வு இதுவென்பதிலும் பார்க்க பா நடேசன் தம்பதியர் மீது அரசியல் என்ற பெயரில் சேறடிப்பு மேற்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது நேரடி நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சட்டவல்லுநர், விமர்சகர் கருணா தம்பா பாமரனுடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பாமரன் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழும்பிய குரல் எனத் தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் ரஜிதா சாம், பாமரன் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரும்புள்ளிகளாக இருந்தாலும் அவர்களை தன் எழுத்துக்கள், கிண்டல்கள் மூலம் விமர்சனத்திற்கு உட்படுத்தியதாகவும் அவருடைய எழுத்துக்களில் இருந்த நளினத்தையும் விதந்துரைத்தார். திரைச் சமூகத்தைச் சேர்ந்த கே பாலச்சந்தர், சங்கர், மணிரத்தினம், வைரமுத்து, வாலி ஆகியோர் உட்பட ஜெயலாலிதா, வைக்கோ, சோ ராமசாமி ஆகியோரை நோக்கியும் பகிரங்கக் கடிதங்கள் எழுதப்பட்டு இருந்ததை விதந்துரைத்தார். ஊடகவியலாளர் விமர்சகர் கோபி ரத்தினம் தமிழ் தேசிய அரசியலில் பாமரனின் நிலைப்பாட்டை விதந்துரைத்தார். அவருடைய எள்ளல் அங்கத எழுத்துமுறை சொல்லவரும் விடயத்தினை மலினப்படுத்தி விடும் என்பதால் தான் அதனை விரும்புவதில்லை என்றும் ஆனால் பாமரனின் எழுத்துக்களில் தனக்கிருந்த ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.

விமர்சகர் வேலு நூல் ஆய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு லண்டன் தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் மேடைக்கு வெளியே வெளிப்பட்டது.

ஆய்வாளர்களைத் தொடர்ந்துநிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் ஊடகவியலாளர் குணா கவியழகன் பாமரன் ஒரு அதிகாரத்திற்கு எதிரான குரல் என்று பாராட்டினார். தமிழகத்தில் கருத்தியல்களை உருவாக்கும் அதிகாரமையங்களை கேள்விக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் சாம் பிரதீபன் பாமரனைக் கொண்டாட நான் வரவில்லை என்றாலும் அவருடைய எழுத்துக்களை மதிப்பதாக குறிப்பிட்டார். ஆனால் வைரமுத்துவின் கட்டெறுப்பு எங்கு ஊருகின்றது என்பதைப் பார்ப்பவர்கள் மகளீரின் தொப்புளுக்கு அப்பால் வைரமுத்து எழுதியவற்றை பார்க்க வேண்டும் என்றார்.

பாமரனுடைய எழுத்துக்களை இன்றே சந்திக்கிறேன் என்று கூறிய தேசம் ஜெயபாலன் இதுவரை கதைத்தவர்களின் அடிப்படையில் பாமரன் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை என்றும் கெ பாலச்சந்தரும் மணிரத்தினமும் படைத்தவை இன்ரலெக்சுவல் கோஸ்டியை நோக்கியே இருந்தது. இவர்கள் எந்த அதிகாரத்தினதும் மையப்புள்ளிகள் அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் வாலி, வைரமுத்து கூட அதிகார மையத்தின் மையப் புள்ளிகள் அல்ல. காதலர்ககள் துணைவர்கள் எறும்புவிட்டதற்கும் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் ஜெயபாலன் கேள்வி எழுப்பினார். கே பாலச்சந்திரிலும் மணிரத்தினத்தைக் காட்டிலும் அதே காலகட்டத்தில் சிறந்த படங்களைத் தந்தவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டுமே ஒழிய இன்றைய சூழலோடு அதனை ஒப்புநோக்க முடியாது என்றும் குமுதம் சஞ்சிகை ஒன்றும் பெண்ணடிமைத் தனத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரான புரட்சிகரமான சஞ்சிகையுமல்ல என்பதையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்தவர் என்பதற்காக தமிழ் தேசியத்திற்காக நின்றவர் என்பதற்காக அவருடைய மறுபக்கத்தை நோக்காமல் தவிர்க்க முடியாது என்றும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.

திரைப்பட விமர்சகர் தயா அவர்களும் கே பாலச்சந்தர் மணிரத்தினம் தொடர்பில் வைத்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். அந்தந்த காலகட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை அந்தந்த காலகட்டத்துடனேயே ஒப்பு நோக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட ஒரு படைப்பை வைத்து கலைஞர்களை முத்திரை குத்திவிட முடியாது என்பதையும் தயா சுட்டிக்காட்டினார். மேலும் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்க பாமரன் கையில் எடுத்த ஓணம் பண்டிகை கூட ஒரு மளுப்பல் அரசியலே என்பதையும் தாயா தெளிவுபடுத்தினார். கருணாநிதியையும் திமுகா வையும் விமர்சிப்பதில் இருந்த தயக்கமே அதற்குக் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான அருட்குமாரின் விமர்சனம் பாமரனின் அரசியல் நிலைப்பாடு சார்ந்ததாக அமைந்தது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் தமிழர்களைக் கைவிட்ட திமுக அரசு சார்ந்து பாமரன் இயங்குவதை அவர் தனது உரையில் கடுமையாகச் சாடி இருந்தார்.

ஊடகவிளலாளர் சுகி ரத்தினம் பாமரன் 300 வரையான நூல்களை எழுதியுள்ளார் அதில் ஒன்றை இரண்டை வாசித்துவிட்டு தன்னால் முழுமையான விமர்சனத்தை வைக்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனாலும் ‘பாமரன்’ என்ற புனைப்பெயர் ஒரு அரசியல் சார்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். குணா கவியழகன் குறிப்பிட்டது போல் பாமரன் ஒரு அரசியல் செயற்பாட்டாளர் அல்ல அவர் ஒரு சமூக செயற்பாட்டளரே என்றார் சுகி. பாமரனின் இரு நண்பர்களும் அங்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் பாமரன் எப்போதும் சமூக நீதிக்காக குரல் எழுப்பிய ஒருவர் என்பதை அழுத்தி தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

மியன்மாரில் பாரிய பாரிய மனித உரிமை மீறல்கள் – ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி !

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கலாம் என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார்.

மியன்மார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வருடாந்த ஆய்வறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மியன்மாரின் இராணுவ அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற நிலையில் தற்போது நாடு உள்நாட்டுப் போரின் நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஆயிரக்கணக்கான படையினரும் பாரிய கனரக ஆயுதங்களும் மியன்மாரின் வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள பகுதிகளுக்கு நகர்த்தப்படுவது குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றதிலிருந்து இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 8 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்ககூடாது – சீனாவில் புதியசட்டம் !

கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக சிறு குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்ய முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளார்கள்.

அவர்கள் விளையாடுவதற்கு, மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கு போதிய நேரம் இல்லை. இதுசம்பந்தமாக பெற்றோர்கள் அரசிடம் முறையிட்டனர். இதுபற்றிய விவரங்களை அரசு ஆலோசித்து இருக்கிறது.

அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என்று முடிவு எடுத்தனர். இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. இப்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லண்டன் பழைய மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் பழைய மாணவர்களுக்கு இலவச ‘டிரொக்ஸ் புரோகிராம்’ ஒன்றை ஆரம்பியுங்கள்!!!

ஞாயிறு 23/10/2021 யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் லண்டன் ஹரோவில் மாலை மூன்று மணிக்கு கூடுகின்றனர். இந்தச் சந்திப்பில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் மட்டுமல்ல ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர்களும் மதுவுக்கும் போதைவஸ்துக்கும் அடிமையான தங்கள் நண்பர்களை மீட்பதற்கான கூட்டுத் திட்டம் ஒன்றை முன் வைக்க வேண்டும். இந்தப் பழைய மாணவர்களின் குடியும் போதைப் பொருள் பாவனையும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்து வருகின்றது. இதனால் மற்றுமொரு தலைமுறைச் சிறார்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த பழைய மாணவர் சங்கங்கள் தலையீடுகள் மற்றும் இவர்களின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தினதோ வடக்கினதோ கல்விநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையில் கல்வியில் பின் தங்கிய மாகாணமாகவோ மாவட்டமாகவும் தமிழ் பிரதேசங்களே உள்ளன. இந்த பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை அதிபர்களை சோம்பேறிகளாகவும் அவர்களை மோசடி செய்யத் தூண்டுபவர்களாகவுமே உள்ளனர். இந்த பழைய மாணவர்கள் ஊருக்குப் போகும் போது கிலுகிலுப்பு காட்டி வருவதைவிட அங்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. இவ்வாறான அரசு செய்ய வேண்டிய வேலைகளை பழைய மாணவர் சங்கங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை என முன்னாள் கல்விச்செயலாளர் ரவீந்திரன் லண்டன் வந்திருந்த போது மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருந்தார்.

இன்று யாழ் இந்துவின் மைந்தர்கள் மட்டுமல்ல மானிப்பாய் இந்துக் கல்லூரி, சென்ஜோன்ஸ், சென்ரல் கொலீஜ், மகாஜனாக் கொலீஜ் என்று பழைய மாணவர் சங்கம் நடத்துபவர்கள் இங்குள்ள தங்கள் உறுப்பினர்களுக்கு ‘டிரொக்ஸ் புரோகிராம்’ செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பல பழைய மாணவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி பல பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றனர். இவர்கள் மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையானதால் இவர்களின் பிள்ளைகளின் வாழ்வும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. இந்த இந்துக் கல்லூரிகளினதும் கிறிஸ்தவ கல்லூரிகளினதும் மைந்தர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு டிரொக்ஸ் புரோகிராம் ஒன்றை முன்வைத்து செயற்பட்டால் அழிந்துகொண்டிருக்கின்ற பலரின் வாழ்வைச் சீர்செய்ய முடியும். கோட்டும் ரையும் கட்டி கனவான்களாக வலம் வருவதைவிட்டுவிட்டு முதலில் எம் பெண்கள் சமூகத்தை, குழந்தைகளை இந்த குடிக்கு அடிமையானவர்களிடம் இருந்து காக்க முயற்சிக்கவும்.

கற்க கசடறக் கற்ககற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக!

இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஸ்தாபித்தது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் !

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்டிய காலக்கெடுவையும் வழங்கியது.

48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும் 51 ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அத்தோடு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகதிற்கு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்தது.

மேலும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் 2.8 மில்லியன் டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க, இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு என ஜெனிவாவை தளமாக கொண்ட ஒரு புதிய விசேட இலங்கைப் பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

நிர்வாணமாக புகைப்படமெடுத்துக்கொண்ட 200 பேர் – காரணம் என்ன ?

காலநிலை மாற்றத்தால் சுருங்கிய ‘டெட் சீ’ என்ற உப்பு கடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 200 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருப்பதுதான் ‘டெட் சீ’. இதை உப்பு கடல் என்றும் அழைக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் இந்த டெட் சீ அதன் அளவில் சுறுங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்த 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக்கி நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்ற புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆடையில்லாத 200 பெண்கள், ஆண்கள் மீது வெள்ளை நிறம் பூசப்பட்டு ‘டெட் சீ’-யின் நிலப்பரப்பில் நிற்கவைக்கப்பட்டனர். இவரது முயற்சிக்கு மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும்போது இந்த கடல் பரப்பளவு பெரிதாக இருந்தது. தற்போது அதன் அளவு சுருங்கிவிட்டது’ என்று ஸ்பென்சர் ட்யூநிக் தெரிவித்துள்ளார்.

“தாய்வானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம்.” – ஜோபைடன்

தாய்வானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது, “ நாங்கள் இதில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தாய்வானை  தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.

தாய்வான் -சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன ஜனாதிபதி ஜி-ஜின்-பிங் தீவிரமாக இருக்கிறார். சீனா அமைதியான முறையில் தாவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது என்று கடந்த வாரம் சீன அதிபர்  தெரிவித்தார்.

”தாவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி. சமீபத்தில் தாய்வான் ஜலசந்திக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன. இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளன  என்று சீனா தெரிவித்தது.

முன்னதாக ,சீனா  கனவு காண்கிறது. தலிபான்கள் வழியைப் பின்பற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் தாய்வான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பானது, அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.