2021

2021

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் பெண் கல்வி உரிமை போராளி மலாலா !

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.

பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி,  2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

திருமண பந்தத்தில் இணைந்தாா் அமைதிக்கான நோபல் வெற்றியாளா் “மலாலா“ - தமிழ்வின்
தனது திருமண நிகழ்வு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

வருடா வருடம் வெள்ளக்காடாகும் யாழ்ப்பாணம் – நிவாரணப்பொருட்கள் கையளிப்பதுடன் முடிந்து போகும் பெருஞ்சோகம் !

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. இந்த தடவை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளே கடந்த வருடமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். கடல் பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் கூட வெள்ளப்பெருக்கை முறையாக கட்டுப்படுத்தி அனர்த்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்கின்ற நிலையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் வருடா வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பக்கத்தில் குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை வாய்க்கால்களிலும் வடிகால்களிலும் கொட்டி மூடிவிடுகின்றமையால் வடிகாலமைப்பு தொகுதிகள் முழுமையாக குப்பைகளால் நிறைந்து போயுள்ளன. நீர் போகவழியில்லாது பெரிது பெரிதாக எழுப்பப்ட்டுள்ள சுவர்கள் என இந்த வெள்ளப்பெருக்குக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் அனைவரும் மட்டுமே.

மாநகரசபைகளும் – பிரதேசசபைகளும் மழைக்காலத்தில் மட்டுமே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களை பாதுமுகாக்கும் நோக்கமுடையாராயின் வெள்ளம் வருவதற்கு முன்பே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வந்த பிறகே வெள்ளம் பற்றியும் சிந்திக்கிறார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த வெள்ள காலகட்டங்களில் மேற்கொள்ளும்  பணிகள் அளப்பரியன. பாராட்டுதற்குரியன. ஆனால் பொருட்களை கொடுப்பதற்கு அப்பால் கடந்த வருடமும் வெள்ள காலத்தில் மக்கள் இடர்பட்ட அதே பகுதிகள் இந்த வருடமும் இடர்படுகின்றன. ஏன் இவ்வாறு குறித்த பகுதிகள் மட்டும் அனர்த்தத்துக்குள்ளாகின்றன..? அதற்கான தீர்வு திட்டங்கள் போன்றன தொடர்பில் அறிக்கைகளை தயாரித்து சம்பந்த தரப்பினரிடம் சேர்க்க வழி செய்வதுடன் அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் தன்னார்வ அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ன என்ன பதில்களையெல்லாம் கூறப்போகிறார்கள் என !

 

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் பலியான நூற்றுக்கணக்கான குழந்தைகள் – யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை !

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுனிசெப் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி ,
கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.  தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார்.
பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப்  கூறி உள்ளது. வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வாங் யாபிங் !

சீனா தனியாக தியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

Astronaut Wang Yaping becomes first Chinese woman to walk in space -  SCIENCE Newsவாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

3 நாட்களில் 8 மில். அமெ.டொலர் நஷ்டஈடு: தவறினால் சட்ட நடவடிக்கை – சீன நிறுவனம் எச்சரிக்கை

8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈட்டை கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம் கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டு கோரிக்கைக் கடிதத்தில் QingdaoSeawin நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மீறும் வகையில், சோதனை அறிக்கைகளை வௌியிடும் தரப்பிற்கும் பரிசோதனை அறிக்கைளை உண்மைக்கு புறம்பான விதத்தில் பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உள்ளது தெரிவித்துள்ளது.

இலங்கையானது, உடன்படிக்கைகளுக்கு கௌரமளிக்காமை மற்றும் அங்குள்ள மக்களை தவறாக வழி நடாத்திச் செல்கின்ற விடயம் தொடர்பில் தம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. சீனாவின் நிறுவனமொன்று இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றுமதி செய்ததாக கூறப்படும் பொய்யான அறிக்கை, அது தொடர்பில் உண்மை தெரியாத பலரையும் நுகர்வோரையும் தவறான திசைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகத்திற்கு பாரிய இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்திற்கு அமைய, குறித்த உற்பத்தியில் Erwinia பக்டீரியா காணப்படுவதாக தெரிவிக்கப்படும் அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை. 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 20 நிமிடங்களுக்கு கிருமி நீக்கம் செய்யப்படும் இந்த சேதன பசளையில், ஒருபோதும் Erwinia பக்டீரியா இருக்க முடியாது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஷிலின் கொரோனா பட்ஜெட்டுக்கு 102 தரப்பினரிடமிருந்து பரிந்துரைகள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக 102 தரப்பினரிடம்பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய நிறுவனங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் வரவு – செலவுத் திட்டத்துக்கான பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட அரசியல் அதிகாரிகள், வெவ்வேறு தொழிற்சங்கள், வர்த்தக அமைப்புக்கள், இறக்குமதியாளர்கள், இளம் அமைப்புக்கள், தேயிலை, தேங்காய், ஆடை, மரக்கறி, பழங்கள், உணவு, மீன் உள்ளிட்ட தொழிற்துறைச் சார்ந்தவர்கள், தகவல் தொழிநுட்பம், இரத்தினம் மற்றும் தங்க ஆபரணத் தொழிற்துறை நிபுணர்கள், உள்ளிட்ட 102 தரப்பினரிடம் இவ்வாறு பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பட்டினியால் எவரும் சாகவில்லை: விலையேற்றம் பெரிய விடயமல்ல – பெரமுன எம்.பி ரஞ்சித் பண்டார

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7 ) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது,மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிடவில்லை. மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடாக வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது. அதன் காரணமாக தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கமைய விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கும் சூழல் காணப்படுகிறது. வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு சந்தையில் போட்டித்தன்மையான சூழல் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்டால் கடந்த 2 வருட காலமாக முழு உலகமும் உற்பத்தி துறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் போலியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது பயனற்றது. பொருட்களின் விலையை நிர்ணயித்தால், சந்தையில் பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும். எதிர்பார்க்காத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை.சீனி,அரிசி,சீமெந்து ஆகியவை பெரும் பிரச்சினையல்ல அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தற்கு அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.

தடுப்பூசிகளால் கிடைக்கும் பாதுகாப்பு 6 மாதங்களில் கடும் வீழ்ச்சி! – ஆய்வில் தகவல்

கொரோனாவுக்கு எதிரான பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய 3 தடுப்பூசிகளினாலும் ஏற்படும் பாதுகாப்பானது கடந்த 6 மாதங்களில் சடுதியாகக் குறைவடைந்துள்ளது என ஆய்வினூடாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமொன்று முன்னெடுத்த ஆய்விலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளினாலும் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் குறித்த அமெரிக்க நிறுவனத்தினால் சுமார் 8 இலட்சம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் உடலில் வைரசுக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு காணப்படுகிறது என்பது இந்த ஆய்வில் பரிசீலிக்கப்பட்டது.

அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் 86.9 சதவீதமாகக் காணப்பட்ட பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 43 சதவீதமாகவும், 89 சதவீதமாகக் காணப்பட்ட மொடர்ணா தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 58 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் 86.4 சதவீதமாகக் காணப்பட்ட ஜொன்சன் அன்ட் ஜொன்சன் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த 3 தடுப்பூசிகளாலும் கொவிட் வைரசுக்கு எதிராக கிடைக்கப் பெறும் பாதுகாப்பானது 86 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கருத்துத்தெரிவிக்கையில்,

தடுப்பூசிகளால் பெற்றுக் கொள்ளப்படும் பாதுகாப்பு குறைவடைகிறது என்று கிடைத்துள்ள அறிவித்தல் சிறந்ததொன்றல்ல.

பைசர் மற்றும் மொடர்ணா ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் கனிசமாளவானோருக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் என்பவற்றை ஆய்வை முன்னெடுத்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாரதூரமாக எச்சரிக்கின்றோம். உலகில்
காணப்படுகின்ற முன்அனுபவம் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம் என்றார்.

“கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு ஒரு கண் துடைப்பு மாநாடு..” – சிறுமி கிரெட்டா துன்பர்க் ஆதங்கம் !

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது.

உலக அளவில் கார்பன் உமிழ்வு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 5 அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 6-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாநாடு பெருந்தோல்வி என சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஒரு வார காலமாக உலகத் தலைவர்கள் வெற்றுப் பேச்சை பேசியுள்ளனர். இந்த மாநாடு படுதோல்வி என்பதை யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. இது ஒரு கண் துடைப்பு மாநாடு. விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் ரீதியாக முன்வைக்கும் உண்மைகளை உலகத் தலைவர்கள் புறந்தள்ள முடியாது. அதுபோலத் தான் அவர்கள் எங்களையும் புறக்கணிக்க முடியாது. உண்மையில் தலைவர்கள் வழிநடத்துபவர்களாக இல்லை. இப்படித்தான் தலைமை இருக்கிறது என்பது வேதனை.” எனவும் இவ்வாறு அவர் பேசினார்.

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) இவர் சுவீடன் நாட்டைச் சார்ந்த உலகின் பருவநிலை காக்க போராடும் 15 வயதேயான பெண் ஆவார். இவர் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றது. இவர் டைம்ஸ் பத்திரிக்கையின் “உலகின் நபர் 2019” என தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எதிர்வரும் 19 ஆம் திகதி !

எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன்போது, நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்க பிராந்தியத்துக்கு  இந்தச் சந்திர கிரகணம் தென்படும் என்றும்,  2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்றதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

எதிர்வரும் எட்டு தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சராசரியாக ஒரு வருடத்திற்கு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில், அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.