27

27

இலங்கையில் வேகமடையும் கொரோனா வைரஸ் பரவல் – நோயாளர் எண்ணிக்கை இன்று சடுதியான அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,706 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  4,646 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27  கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 445பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவர்களுள் 03 பேர் இன்று மட்டுமே மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாட்டில் இன்றுவரை 460455 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்து சீன தூதரகம் அறிக்கை வெளியீடு !

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ இன்று (27.10.2020) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அவரின் இலங்கை விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் அந்த அறிக்கையில் சீனா தனது அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க கொள்கை மட்ட பிரதி உதவிச்செயலர் டீன் தொம்ஸன் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் நேரடியாகவே தலையீடு செய்திருப்பதுடன், இலங்கை அதன் வெளியுறவுக்கொள்கைகள் குறித்து அவசியமானதும் கடினமானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது இராஜதந்திர நடைமுறைகளை முற்றிலும் மீறும் வகையிலான செயற்பாடாகும். மறுநாள் அதற்கான பிரதிபலிப்பை வெளிப்படுத்திய சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், அமெரிக்க உயரதிகாரியின் கருத்து அவர்களின் ‘பனிப்போருக்கான’ மனநிலையையும்  பிற நாடுகளின்  விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையீடு செய்யும் அதன் போக்கையும் சிறிய நாடுகள் எந்த பக்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வற்புறுத்திக்கூறும் தன்மையையும்  வெளிப்படுத்துகின்றது என்று கடுந்தொனியில் தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுமார் 2000 வருடகாலமாக நட்புடன் கூடிய வரலாறொன்று காணப்படுகின்றது. எம்மிரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கையாளக்கூடிய தெளிவு எமக்கு இருக்கும் அதேவேளை அதில் மூன்றாம் தரப்பொன்று கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 1950 ஆம் ஆண்டளவில் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் விரிவாக்கப்படுவதற்கு முன்னதாகவே நாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தை முன்னெடுத்து வந்தோம்.

இலங்கையின் உண்மையான நட்புறவு நாடு என்ற அடிப்படையில் அது ஏனைய நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான தொடர்புகளைப் பேணிவருவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் தலையீடு செய்வதற்கும் அதுகுறித்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயத்தைப் பயன்படுத்திக்கொள்வதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு அமெரிக்கா ‘அவசியமானதும் கடினமானதுமான தீர்மானங்களை’ எடுப்பதுடன், ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களின் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு உண்மையான நண்பனொருவன் தன்னை மற்றையவரின் நிலையிலிருத்திப் பார்ப்பது அவசியமாகும் என்ற ஆலோசனையை அமெரிக்காவிற்கு வழங்க விரும்புகிறோம்.  கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து இலங்கை மிகப்பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான சக்தி அதனிடம் இல்லை. அமெரிக்காவில் சுமார் 8.8 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் அதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 230 ஆயிரமாக இருக்கும் நிலையில், அந்நாடு இலங்கைக்கு விரிவானதொரு பிரதிநிதிகள் குழுவை அனுப்புகின்றது.

இது உண்மையிலேயே அந்நாட்டின் மீதான உங்களின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகின்றதா? இது உண்மையில் இலங்கை மக்கள் மீதான அக்கறையின் விளைவா? என்ற கேள்விகளை மக்கள் தொடர்ச்சியாக எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. எனினும் அது கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதார மீளெழுச்சி ஆகியவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதை முன்னிறுத்திச் சென்றிருந்தது.

அத்தோடு இலங்கைக்கு தேவையற்ற தொந்தரவை வழங்கக்கூடாது என்பதற்காக அந்நாட்டுக்குள்ளான விஜயங்களைப் பெருமளவிற்கு மட்டுப்படுத்தியிருந்ததோடு, தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியது. எனவே இதுகுறித்தும் சிறிய நாடுகளுடனான தொடர்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

“பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை கைவிடாது. நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை” – பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி !

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (வயது47).  இவர் கடந்த 5-ம் திகதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் தொடர்பான வகுப்பு நடந்த விவாதத்தில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியுள்ளார்.
அப்போது அந்த வகுப்பில் படித்துவந்த ஒரு மாணவனின் பெற்றோர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டக்கூடாது என சாமுவேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாமுவேலுக்கு பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கையும் வந்துள்ளது. இதற்கிடையில், பள்ளிக்கூடம் அருகே கடந்த 16-ம் திகதி மாலை நடந்து சென்று கொண்டிருந்த சாமுவேல் பெடியை பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாமுவேலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வரும் 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், இந்த தாக்குதல் ‘இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்’ என கூறினார். மேலும், ’ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் துணைநின்று பாதுகாக்கும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.
அதன் பின் பேசிய இம்மானுவேல், ‘ பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை கைவிடாது. கேலிச்சித்திரங்கள் (நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள்) வெளியிடுவதை கைவிடப்போவதில்லை. இஸ்லாமிய மதவாதிகளுக்கு நமது எதிர்காலம் வேண்டும் என்பதால் சாமுவேல் கொல்லப்பட்டார். அவர்களுக்கு நமது எதிர்காலம் ஒருபோதும் கிடைக்காது’ என தெரிவித்தார்.
பிரான்ஸ் நாடு கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை - அதிபர்  மெக்ரான் - lifeberrys.com Tamil இந்தி
இம்மானுவேல் மெக்ரானின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், ‘மெக்ரான் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஏற்கனவே, கீரிஸ்-துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால், எர்டோகனின் கருத்தையடுத்து துருக்கியில் உள்ள தனது தூதரை பிரான்ஸ் திரும்பப்பெற்றுக்கொண்டது. பிரான்ஸ் அதிபர் மீதான துருக்கி அதிபர் எட்ரோகனின் கருத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இம்மானுவேலின் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் கருத்து ‘இஸ்லாம் மீதான தாக்குதல்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அந்த பத்திரிக்கை கட்டிட வளாகத்திற்கு வெளியே கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. அந்த கொடூர தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆசிரியர் சாமுவேல் தலைதுண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய வகையிலான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படமாட்டாது” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல !

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் தொடர்பாக எதிக்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ஜே.வி.பி கட்சியினரும் ஐக்கியமக்கள் சக்தி கட்சியினரும் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் “நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய வகையிலான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படமாட்டாது” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதியாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் கருத்து தெரிவித்த அவர் ,  இலங்கையிடமிருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடாக அமெரிக்கா தொடர்ந்தும் திகழ்கின்றது. இதனால் நாட்டுக்கு நன்மை அளிக்கக்கூடிய உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நாட்டின் இறைமையை பாதிக்கும் எவ்வித உடன்படிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிறுவர் மதப்பாடசாலையில் பயங்கர குண்டுவெடிப்பு – 07 சிறுவர்கள் பலி. 70 சிறுவர்கள் படுகாயம் !

பாகிஸ்தானில் மத பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலுமு் தெரியவருவதாவது,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மத கருத்துக்களை கற்றுகொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மத கல்வி கற்று வந்தனர்.
At least 7 killed, 70 injured in blast at seminary in Peshawar's Dir  Colony: Pakistan Media || பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
இந்நிலையில், அந்த மதபாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மதகல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தன சிறுவர்கள் மசூதி கட்டிடத்தை விட்டு வெளியே தப்பியோடினர். ஆனாலும், இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர்” – நாசா உறுதி !

இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.
இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா
சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும். சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது. நிலவின் தென் அரை கோளத்தில் அமைந்துள்ள, பூமியில் இருந்து கண்ணுக்கு புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி நீண்டகாலமாக சூரிய ஒளி படாத பனித்திட்டுகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்து உள்ளன. முந்தைய ஆய்வின்படி அல்லாமல் நிலவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறும்போது, “புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் இரசாயன ஆதாரம் கிடைத்துள்ளது.
தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால் அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரி பொருளாக பயன்படுத்தலாம்” என்றார்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப் பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.

“நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது”- ஜே.வி.பியின் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு !

நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அதன்காரணமாகவே உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கொழும்பில் போராட்டம் நடத்தியதாகவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளி கட்சியின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தின் தலைவராக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ இருக்கும் நிலையில் அவரது வருகை எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழி வகுக்கும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில் நாட்டினதும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து அரசாங்கம் விவாதங்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க மக்கள் விடுதலை முன்னணி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” – இரா.சாணக்கியன்

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக வாக்களிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஜனநாயக விரோதமான செயல், இந்த நாட்டை பின்கொண்டுசெல்லும் செயல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக வாக்களித்திருந்தோம். இதன்போது, இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். அது தொடர்பாக பல கருத்துகளை பலரும் கூறிவருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள், தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நான் கருதுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வியாழேந்திரன் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர், அதனால் அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். ஆனால் பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஒரு தனிக்கட்சியாகும் அவர்கள் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்தார்களா? என்ற கேள்வி எங்கள் மனதில் இருக்கின்றது.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினையை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்று, அதனை நிறுத்தச்சொல்வதை விட 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தருவதாகயிருந்தால் இந்த பிரச்சினையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும்.

மேலும், கல்முனை- வடக்கு பிரதேச தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம் அல்லது அரசியல் கைதிகள் 62பேர் இன்னும் உள்ளனர் அவர்களை விடுதலைசெய்தால் ஆதரிப்போம் என்றிருக்கலாம், தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரியிருக்க முடியும் இவ்வாறு பல நிபந்தனை முன்வைத்து வாக்களித்திருக்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம்பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும். அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்ததாக தெரியாது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை வெளியில் விடுவதற்கான ஒப்பந்தமோ? அல்லது அக்கட்சியின் தலைவர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தங்களை செய்தார்களா?மக்களுடைய நலனைக்கொண்டா? அல்லது தங்களது நலனைக்கொண்டா? ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் பதவி ஆசை காரணமாக மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறிய அரசு நாட்டை அடிபாதாளத்திற்குள் தள்ளிவிட்டது” – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதன் மூலம் நாட்டை அடிபாதாளத்திற்குள்  தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டு இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாடு இக்கட்டான நிலையில் உள்ளதாகவும், இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரை தெரிவிக்க தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடு கடும் பின்னடைவை சந்தித்துள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்வதை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது என நாராஹேன்பிட்டிய அபேராமய விஹாராதிபதி முரித்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

´சுகாதார அதிகாரிகள் தற்போதைய நிலைமை குறித்து ஏற்கனவே சிந்தித்து செயற்படவில்லை. அதனால் தற்போது கொவிட் 19 பரவல் நாட்டில் வியாபித்துள்ளது. அதற்கான பொறுப்பை ஏற்பார் இல்லை. அரச வைத்திய பரிசோதனை நிலையத்தின் செயற்பாடு பூச்சியமாக காணப்படுகின்றது. அந்த நிலையத்தை தனியாருக்கு வழங்குவதில் பிரச்சினையுள்ளது என்றார்.

கொரோனாத் தொற்றால் இலங்கையில் மேலும் இருவர் பலி !

கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி,இலங்கையின் கொரோனா மரணம் 19 ஆக அதிகரித்துள்ளது.

ஐடிஏச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது மற்றும் 75 வயதுடைய நபர்களே சற்றுமுன் உயிரிழந்துள்ளனர்.

இதே நேரம் இன்று மட்டுமே கொரோனாத்தொற்றால் மூவர் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.