November

November

‘வடக்கு, கிழக்கில் இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் – ஜனாதிபதி

MR_Sworn_in_2nd_termவடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகக் கட்டிட முன்றலில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள், மதத் தலைவர்கள், ராஜதந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த நாட்டை விட சிறந்த நாடொன்றிலேயே தற்போது நீங்கள் வாழ்கின்aர்கள் என்பது உண்மை.

வழங்கப்பட்ட பொறுப்பினை நிறை வேற்றி முன்பிருந்ததை விட சிறப்பான நாட்டைக் கட்டியெழுப்பிய பின் மக்கள் முன் உரையாற்றும் தலைவன் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 2005 நவம்பர் 19ம் திகதி நான் பதவியேற்று நாட்டைப் பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இரவு பகல் எனப் பாராமல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நான் செயற்பட்டமை சகலரும் அறிந்ததே.அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே 19ம் திகதி பயங்கரவாதத்தை வென்று உலகின் பாராட்டைப் பெற்றுக்கொண்டதுடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.

இன்று நவம்பர் 19ம் திகதி எமது தாய் நாட்டை உலகின் முன்னிலையில் இலங் கையை உன்னத நாடாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புடனேயே பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள் கைத் திட்டத்தை முன்வைத்து அதன் மூலம் நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம். இன்று முதல் மஹிந்த சிந்தனையின் எதிர் காலத் திட்டம் ஆரம்பமாவதுடன் அதன் மூலம் உலகின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. 2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு பலம் தன்னம்பிக்கையுடனேயே இம்முறை நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நம்மில் பெரும்பாலானோர் தெற்கில் இரண்டு கிளர்ச்சியையும் வடக்கில் 30 வருட பிரிவினைவாதத்தையும் கண்டுணர்ந் தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே கிளர்ச்சியின் மூலமும் நமது தாய்நாடு உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு வீழ்ச்சி யுற்றமையை நாம் கண்டுள்ளோம். இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் நாடு மீண்டும் இரத்த ஆற்றில் மிதப்பதைத் தடுக்கவும் உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக எழுந்து நிற்கவும் வழிவகை செய்வதே எமது முதன்மையான நடவடிக்கையாகவேண்டும்.

அதற்காக எமது தாய் நாட்டில் இனங் களுக்கிடையிலான சமத்துவம் சமாதானம் நிலைப்பதற்கு வழி செய்வது அவசியம். அதனால்தான் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.இதனால் கொழும்பிற்கு வெளியே நகரங்கள் கிராமங்களில் கவிழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டதும் இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுவது உறுதி.

பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது இன்னும் பல நகரங்கள் கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம் வேலை வாய்ப்புத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். பயங்கரவாதத் திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதிக்குள் இருளிலிருந்து மீட்கப்பட்ட நாடாக ஒளிபெறும். அது மட்டுமன்றி எமது மின்சாரத் திட்டங்களின் மூலம் நாட்டின் சகல குடும்பங்களும் ஒளிபெறுவதும் உறுதி எம்முன் உள்ள எதிர்காலமானது நாட்டிற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான மீட்டுவதாகவும் நாட்டை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.

எமக்கு எமது இளைய தலைமுறை யினரின் மீது அதீத நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து உலகம் பாராட்டும் வெற்றியை ஈட்டித் தந்தமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.எமது எதிர்கால சந்ததியினர் முன்மொழி யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப ரீதியில் 75 வீதமாக முன்னேற்றமடைவதையே நாம் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக் கும்போதுஅவர்கள் அத்தகைய நிலையை எட்ட முடியும் என்பதே எமது நம்பிக்கை.

எமது நாட்டின் பிரச்சினைகளை இனங்காணவும் அதனைத் தீர்க்கவும் போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் ஒரு மாதிரி அல்ல. எந்தவொரு கருத்தை தெரிவிப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் உரித்துடையவர்கள். எமது நாட்டுக்குச் சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும் மக்களுடைய எதிர்பார்ப்பும் ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயற் திட்டங்களை நாம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகல அபிவிருத்திகளும் பயங்கரவாதத்திற்கான வழிகளை இல்லாதொழிப்பது உறுதி. வறுமையை ஒழிப்பதும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும் அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும் என்பதே எனது நம்பிக்கை.வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்காலத்தின் உள்ளூராட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கைகளிலேயே அதிகாரங்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கையானது பிளவுபடாத கொள்கையாகும். கடந்த யுகத்தில் தேசிய பாதுகாப்புக்காக நாம் பல நாடுகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டோம். தற்போது உருவாகியுள்ள அபிவிருத்தி யுகத்தில் அதற்காக 1திlழி ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டுவோம். சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை. அதனால் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கஷ்டமான விடயங்கள் என கைவிடுவது எமது கலாசாரமல்ல. நாட்டை மீட்பது மட்டுமன்றி தற்காலத்தில் இந்த சமூகம் மீள முடியாது என சிலர் நினைக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை. கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலிலும் தொகுதி வாரியாக வேறு எந்த நாடும் எட்ட முடியாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற சட்டவிரோத செயல்களற்ற, கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்கால வெற்றிகளின் முக்கிய பங்காளிகளாக இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் திகழவேண்டும் என்பதே எமது அவா. அதற்காக இன, மத, குல, அரசியல், கட்சி பேதமின்றி எம்முடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். இந்நாட்டை உயர்ந்த இடத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு வேறு இடமில்லை. எனது தாய்நாடு அன்றி உயர்ந்தது என்று எனக்கு எதுவுமில்லை.

நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

முன்னாள் ஜரிவி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்!

Sundar_Journalistஇவ்வாரம் இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் கார்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) கொழும்பில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் இலங்கைப் புலனாய்ப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை (நவம்பர் 18 2010) விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

சுந்தர் ஈரிபிசி வானொலியில் பணியாற்றி வந்தவர். அதன்பின் தீபம் தொலைக்காட்சியில் சிறிதுகாலம் பணியாற்றியவர். மார்ச் 19 2008ல் சுந்தரை வேலை நீக்கும் கடிதத்தை தீபம் தொலைக்காட்சி வழங்கியது. இதற்கு முன்னர் தீபம் தொலைக்காட்சிக்கும் சுந்தருக்கும் இடையே குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தமை லண்டன் குரல் இதழ் 23 (மார்ச் – ஏப்ரல் 2008) ல் வெளிவந்திருந்தது.

அதன்பின்னர் சுந்தர் ரிரிஎன் – ஜரிவி தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். தற்போது ஜிரிவி இன் முக்கிய நிகழச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குனராகவும் உள்ள தினேஸ்குமாரும் தீபம் தொலைக்காட்சியில் இருந்தே ரிரிஎன் – ஜிரிவி தொலைக்காட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிரிவி இலும் சுந்தர் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜிரிவி இல் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் சிலர் அத்தொலைக்காட்சியில் இருந்து விலகிய போது சுந்தரும் அதன் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வடக்கின் வசந்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஹொட்டல் கட்டிவருகின்ற ஆணிவேர் படத் தயாரிப்பாளர் திலகராஜாவின் உணவகம் ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.

இலங்கைக்கு தனது தாயை பார்க்க சென்ற பொழுதே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜிரிவி இல் பணியாற்றியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இருப்பினும் இவர் நீண்ட காலத்திற்கு முன்னரேயே ஜிரிவி யை விட்டு வெளியேறியதும் மற்றும் அரசுசார்பானவர்கள் மத்தியில் இருந்து வந்த வேண்டுகோள்களை அடுத்தும் இவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு

Wikramabahu KNSSP கட்சியின் பொதுச் செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆரம்பம் முதல் நீதியான, தெளிவான, ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுவரும் கலாநிதி விக்கிரமபாகு, தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவாக இருக்கட்டும், அல்லது முன்னயை அரசுத் தலைவர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு எதிராக கொழும்பில் இருந்தவாறு துணிந்து குரல் கொடுக்கும் சிங்கள கட்சியின் தலைவராக இவர் இருந்து வருகின்றார்.

ஏனைய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் மகிந்த அரசுக்கு அடிபணிந்துள்ள போதிலும், கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ் மக்களிற்காகவும், சிங்கள தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவுடன் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள பிரித்தானிய தமிழர் பேரவை சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதியான கருத்துக்களைக் கொண்டு செல்ல இதனை ஒரு சந்தர்ப்பமாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை நேரஞ்சல் செய்வதற்கும், ஊடகங்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அவரது கருத்தைப் பெறும் தளமாக இந்த சந்திப்பை பயன்படுத்துமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் நாள் வியாழக்கிழமை வட மேற்கு லண்டனிலுள்ள சவுத் ஹறோ பகுதியில் மாலை 7:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணிவரை இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இடம் – Harrow Borough Football Club Hall, Earlsmead, Carlyon Avenue, South Harrow HA2 8SS

நேரம் – மாலை 7:00 மணி

அருகிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் – Central Line NORTHOLT , Piccadilly Line SOUTH HARROW

பேரூந்துகள் – சவுத் ஹரோ தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து (சம்பல் சொப் முன்பாக) 140, 395, 398, 487 போன்ற நோத்ஹோல்ட் செல்லும் பேரூந்துகளில் ஏறி இரண்டாவது தரிப்பிடம்.

நோத்ஹோல்ட் தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து 282 என்ற மவுன்ட் வேனன் மருத்துவமனைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினால் இரண்டாவது தரிப்பிடம்.

மேலதிக விபரங்களுக்கு:
020 8808 0465
079 5850 7009

நேர்டோ நிறுவனத்தினால் நிவாரண கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நிவாரண கிராமங்களில் இருந்த மாணவர்கள் கீழ்வரும் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தனர். தற்போது நலன்புரி முகாம்களில் இருந்து கா.பொ.தா சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிற்கு அவசரமாக கீழ்வரும் பொருட்கள் தேவைப்படுகிறது.

பாடசாலை சீருடை முதல் கணித பாட உபகரணங்கள் வரையான தேவைகளிற்கு உடன் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவ மாணவிகளின் விபரங்கள்:

கதிர்காமர் முகாம் : 30 ஆண்கள் 40 பெண்கள் மொத்தம் 70.

ஆனந்தக்குமாரசாமி :38 ஆண்கள் 62 பெண்கள் மொத்தம் 100

இந்த வேண்டுகோளை புலம்பெயர் சொந்தங்களின் உதவியுடன் நேர்டோ உடன் தீர்த்து வைத்தது!

மேற்படி நிகழ்வானது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் நேர்டோ நிறுவனத்தினால் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 17.11.2010 அன்று காலை 9.30 தொடக்கம் மாலை 2.00 மணிவரை நிவாரணக் கிராமங்களாகிய அருணாச்சலம், ஆனந்தகுமாரசாமி, கதிர்காமம் போன்ற கிராமங்களை சேர்ந்த க.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றவுள்ள ஆண், பெண் இருபாலரும் உள்ளடங்களாக 322 மாணவர்களுக்கான சீருடை, பாதணிகள், உபகரணங்கள், என்பன வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக வட மாகண கல்விப் பணிப்பாளர் வ அரியரட்ணம், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் S. கிருஸ்ணகுமார், ஆசிரிய ஆலோசகர் தேவதாஸ் ஆகியோர் மாணவர்களுக்கான பொருட்களை வழங்கி அவர்களின் எதிர்கால கல்வி செயற்பாட்டிற்கு உதவினர் .

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றது.

MR_Sworn_in_2nd_termஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக் காலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்ற நிலையில் கொழும்பில் இந்நிகழ்வையொட்டிய வைபவங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன. கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சுமார் 150 வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கு கொள்கின்றனர். மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்

MR_Sworn_in_2nd_termஇன்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து ஆரம்பிக்கின்றார். இப்பதவியேற்பு வைபவத்தையொட்டி காலிமுகத்திடலில் முப்படையினரின் அணிவகுப்பு மற்றும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வுகளுக்காக கொழும்பு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை கொழும்பு கோட்டை, காலிமுகத்திடல் ஆகியவற்றிற்கான பாதைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த இரண்டாவது பதவியேற்பு வைபவம் பெருந்தொகை அரச நிதியை செலவு செய்து நடத்தப்படுவதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி விமர்சித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி இந்த இரண்டாவது பதவிக்காலத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் அவர் ஆற்றுகின்ற உரை நாளை சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு யாழ்.குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

India_Flagபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு மற்றும், வறுமை ஒழிப்பு அமைச்சின் நிர்வாக்தின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் பிறீபப் என்ற நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மரணம்.

Motorbike_Accidentயாழ். உரும்பிராய் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிபஸ் ஒன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.

சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (வயது 30) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவரோடு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த எஸ்.கோபு (வயது30) என்ற இளைஞர் படுகாயமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 100 பேர் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேர் எதிர்வரும் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவையிலுள்ள சேனபுர என்ற தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் படுகாயம்.

Landmine_Hello_Trust_Employeeயாழ்ப் பாணத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்தார். நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பொன்னாலை பாண்டவெட்டை என்ற இடத்தில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ ட்றஸட்’ நிறுவனத்தில் பணியாற்றும் குருநகரைச் சேர்ந்த நிசாந்தன் எட்மன் பீரிஸ் என்ற 22 வயது இளைஞரே படுகாயமடைந்தவராவார். இவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ டறஸ்ட்’ இல் போரினாலும் வறுமை நிலையினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளே அதிகளவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

David_Burgess_SoniaDavid_Burgessடேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வு நேற்று (நவம்பர் 17, 2010) சென் மார்டின் இன் தி பீல்ட் இல் நடைபெற்றது. முற்போக்குத் தன்மைக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயம் சென் மார்ட்டின் இன் தி பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேவாலயம் தற்பால் உறவுகளை அங்கீகரிக்கின்ற தேவாலம். இங்கு டேவிட் பேர்ஜஸ், சோனியா என்ற பெயரில் சேவையில் ஈடுபட்டு இருந்தவர். இங்கு ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் உடலை வைத்து பாடல்களுடன் அவரது இறுதி அஞ்சலி இடம்பெற்றது. மனித உரிமை அமைப்புகள், மெடிக்கல் பவுண்டேசன், சட்ட நிறுவனங்கள், தற்பால் சமூகத்தினர், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சமூக அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகைளச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலியில் டேவிட் பேர்ஜஸ் இன் பிள்ளைகள் தங்கள் இறுதி அஞ்சலியை அவர்களின் தந்தைக்குச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இக்கட்டுரை சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் உடன் அரசியல் தஞ்ச வழக்குகளில் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அவரின் நண்பர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் வழங்கும் ஒரு அஞ்சலிக் குறிப்பு. கவுன்சிலர் சத்தியநேசன் ஒலிப்பதிவாக வழங்கிய அஞ்லியை ரி சோதிலிங்கம் கணணிப்படுத்தி உள்ளார்.

._._._._._.

‘அப்போது தமிழ் அகதிகள் லண்டனில் பெருமளவு வந்திறங்கிய காலம். தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பிய பல தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாது இருந்த காலம். தம்மால் ஆன எந்த உதவிகளைச் செய்தும் ஏதும் பலன் இல்லை என்றிருந்த காலம்.’ லண்டன் ஏஞ்சலில் உள்ள JCWIல் பணியாற்றிய Jane Coker இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அப்போது உதவி வந்தவர். அவர், அகதிகள் திருப்பி அனுப்பப்படவதற்கு எதிரான அதாவது தஞ்சம் கோருவோரை மீண்டும் நாட்டுக்கு அனுப்புகின்ற பிரித்தானிய உள்நாட்டு அமைச்சின் கொள்கைகளை எதிர்த்து, உயர்நீதிமன்றில் சட்டப்படி சவால்விடுக்க, டேவிட் பேர்ஜஸ் ஜ TRAG (Tamil Refugee Action Group – Co-Ordinator Mr V Varathakumar) க்கு அறிமுகப்படுத்தினார். இன்று இந்த Jane coker ஒரு பிரித்தானிய நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

”1985 காலப்பகுதிகளில் பிரித்தானிய உள்நாட்டமைச்சு இலங்கைத்தமிழ் அகதிகளை உனடியாகவே திருப்பி அனுப்பவதில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இரவு, பகல் பாராது அகதிகளை ஏற்றிச்செல்லும் பொலீஸ் வாகனங்களுக்கு பின்னால் கலைத்து திரிந்தும், ஓடித்திரிந்தும் பொலிசார் அகதிகளை ஒளித்து வைத்திருக்கும் இடங்களுக்கு இரகசியமாக சென்று, அவர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்தும் அந்த அகதிகளை நாடுகடத்த விடாமல் செய்த பணிகளில் டேவிட் பேர்ஜஸ் இன் பணி அளப்பரியது. பொலீசார் டேவிட் பேர்ஜஸ் இவர்களுடைய வழக்குகளில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும், அகதிகளை Holiday Inn போன்ற ஹோட்டல்களில் ஒளித்து வைத்தபோதும் அகதிகளை ஹோட்டல்களின் வாசல்களில் சந்தித்து வாக்கு மூலங்களை பதிவு செய்து அந்த அகதிகளை திருப்பி அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியவர் டேவிட் பேர்ஜஸ். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அவர்களுக்கு நன்றிக் கடமை உடையவர்கள்.” என்று TRAG – தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவின் முன்னாள் இணைப்பாளர் திரு வி வரதகுமார் குறிப்பிடுகின்றார்.

1985 காலப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்ற இனக்குரோத நடவடிக்ககைளில் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் தமிழர்கள், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவையாற்றியவர் திரு டேவிட் பேர்ஜஸ்.

இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான வன்முறை வடிவம் எடுக்க ஆரம்பித்த காலங்களில் 1985ம் ஆண்டு பிரித்தானியா தனது குடிவரவுச் சட்டத்தில் கொமன்வெல்த் நாடுகளில் இருந்து வருபவர்களில் முதலாவதாக இலங்கையருக்கு விசா முறையை அமுல்ப்படுத்துகின்றனர். இதன்படி விசா இல்லாமல் வரும் அகதிகள் உடனடியாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு பாரிய பாதிப்புக்களை கொடுத்திருந்தது.

யூலை 11 1986 உள்நாட்டு அமைச்சராக இருந்த டக்ளஸ் ஹேட், இலங்கைத் தமிழர்க்கு Exceptional Leave to Remain தரப்படும் என தெரிவிக்கிறார். இது இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் இலங்கையில் இனரீதியாக பாதிப்படைந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாது அகதிகளின் தனிப்பட்ட நிலைமைகளை ஆராய்ந்தே அவர்களுக்கு தங்குமிட அனுமதி வழங்குவது என்ற சட்டமாகும். இது தமிழர்கள் பாதிக்கப்பட்ட இனம் என்று பிரித்தானிய அரச ஏற்கவில்லை என்பதேயாகும்.

1987 ஹீத்துரோ விமான நிலையம் Terminal 3 அல்லது Terminal 4ல் தமிழர்கள் தமது உடுப்புக்களை கழற்றி எறிந்துவிட்டு தம்மை நாடு கடத்த வேண்டாம் எனப் போராட்டம் நடாத்திய நேரம். போராட்டம் நடத்தியவர்களை Ford House Hotelல் தடுத்து வைத்திருந்தனர். Winstanly Burgrs சட்ட நிறுவனம் சட்டத்தரணிகள் டேவிட் பேர்ஜஸ், Chris Landel ஆகிய இருவரும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுக்க முன்வந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல UNHCR அன்றைய உதவி உயர் ஸ்தானிகர் Irin Khan இன்றைய IOM Secretary General இதற்கான பின்புல உதவிகளை செய்ய முன்வந்திருந்தார்.

இந்த வழக்கில் டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்று தமிழர்கள் நாடு கடத்தலை தடுத்து நிறுத்தினார். இந்த வழக்கின் வெற்றியில் இன்று வரையில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்ல பல்வேறுபட்ட நாட்டு அகதிகளும் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி இலங்கைத் தமிழ் மக்களால் அகதிகள் சமூகத்திற்கு வழங்கிய பெரிய விடயமாகும்.

1987 கீத்துரோ விமான நிலையத்தில் நாடுகடத்த முற்பட்ட வேளை தம்மை நாடு கடத்த வேண்டாம் என போராட்டம் நடாத்தியவர்களை Ford House Hotel ல் இருந்து தடுப்புக்காவல் முகாமிற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இவர்கள் படிப்படியாக நாட்டுக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஆறு எகிப்தியர்களை நாடுகடத்தப்பட இருந்ததும் அவர்களும் இந்த தமிழ் அகதிகளின் நீதிமன்றின் வெற்றியினால் பலன் பெற்றனர். இந்தக் காலகட்டத்தில் சனல் 4 இந்த விடயங்களை Black Back Series என்ற தொடரில் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

நீதிமன்றில் பெற்ற வெற்றியின் பின்னர் டேவிட் பேர்ஜஸ் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட ஆரம்பித்தார். இதன் காரணமாகத் தான் இலங்கைக்குச் சென்று நிலமைகளை ஆய்வுசெய்து வந்தும், வேறு சில சட்டத்தரணிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்தும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்திருந்தார். பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் முன்னர் எப்போதும் இப்படியான ஒரு சட்டச் சவாலை எதிர்கொள்வில்லை. பிற்காலங்களில் அகதிகளை ஏற்றி வரும் விமான நிறுவனங்களுக்கு 2000 பவுண்ஸ் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகளை உருவாக்கி இருந்த காலத்திலும், டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பலருக்கு நின்மதி அளித்திருந்தது.

பிரித்தானிய சட்டத்துறைக்கும் பிரித்தானிய அரசுக்கும் அதன் சட்டவாக்க கொள்கை வகுப்புக்களுக்கு டேவிட் பேர்ஜஸ் இன் நீதிமன்ற வெற்றி உதவியது. இது பிரித்தானியாவின் சட்டத்துறையில் மாற்றங்களை உருவாக்கியது. டேவிட் பேர்ஜஸ் ஒவ்வொரு அகதியையும் தனது முழுமையான அர்ப்பணிப்புடனும் உத்தியோக சிறப்புடனும் அணுகினார். அகதிகளிடம் வாக்கு மூலம்பெறுவதற்கும் இலங்கை பற்றி அறிவதற்கும் மிகுந்த நேரத்தைச் செலவிட்டார். டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பின் பயனை தனிப்பட்ட அகதிகள் மட்டுமல்லாமல், அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளும் கூட வெற்றியின் பயனைப்பெற்றனர். இந்தக் காலத்தில் லண்டனில் இருந்த பல தமிழ் சட்டத்தரணிகளில் அனுபவம், சட்டத்தேர்ச்சி பெற்றவர்கள் ஒருசிலரே. பல சட்டத்தரணிகள் தமது தொழில் ரீதியாக தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை டேவிட் பேர்ஜஸ் உருவாக்கி இருந்தார்.
டேவிட் பேர்ஜஸ் உடைய வழக்கு வெற்றியினை ஆதாரமாகக் கொண்டு தமது வழக்குகளை வெல்ல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதனை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள், தங்களுக்கு பெரும் பணமீட்டும் உழைப்பாக்கிக் கொண்டனர். அதிலும் சாதாரணமாக உள்ளுராட்சி திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் கிடைக்கக்கூடிய Exceptional Leave to Reamin ஜ கூட பல நூறு பவுண் பணங்களை வாங்கிக் கொண்டே தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வோர் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் அகதிகள் பெருமளவு பிரித்தானியாவுக்கு வந்த காலத்தில் அகதிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த British Refuge Council, UKIAS, AI, UNHCR போன்ற பல அமைப்புக்களுக்கும் இந்த டேவிட் பேர்ஜஸ் இன் வெற்றி உதவிக்கரமாக இருந்தது.

மேலும் பல தமிழ்அகதிகள் அமைப்புக்கள் அரசிடமிருந்து நிதி உதவிகளையும் பெற்று மேலும் பல அகதிகளுக்கு உதவும் வாய்ப்பும் கிட்டியது. இந்தப் பரீட்சார்த்த வழக்கு வெற்றிகளினால் வேறு பல நாட்டு அகதிகளின் வழக்குகளும் வெற்றி வாகை சூடிக்கொண்டது. பங்களாதேஸில் இருந்த வந்திருந்த அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு டேவிட் பேர்ஜஸ் இனால் கிடைத்த சட்ட வெற்றியைப் பயன்படுத்தி, அடுத்த தொகுதி பங்களாதேஸ் அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் தடுக்க இந்த வழக்கு வெற்றி உதவியது. இன்று பிரித்தானியாவில் தமிழ் சமூகம் வல்லமையும் ஆளுமையும் கொண்ட சமூகமாக இருப்பதற்கு டேவிட் பேர்ஜஸ் செய்த உதவிகள் முக்கியமானவை.

டேவிட் பேர்ஜஸ் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தனது சேவையினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். டேவிட் பேர்ஜஸ் தமிழ் மக்களுக்கும் ஏனைய அகதி மக்களுக்கும் ஒரு பாதுகாக்கும் கரமாக இருந்துள்ளார். இன்று பிரித்தானியாவில் தமிழர்களும் மற்றைய நாட்டவர்களும் அகதிகளாக வந்து பயனை அடைந்திட டேவிட் பேர்ஜஸ் ன் பங்களிப்பு அளப்பரியது.

பாதிக்கப்பட்ட இனமான தமிழ் இனம் சர்வதேச அகதிகளுக்கான மனித உரிமைகளுக்கான சட்டங்களான 1951 Convetion, 1967 Protocol ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு தரப்படவில்லையானாலும் பிரித்தானிய சட்டதிட்டங்களில் மாற்றங்களை உருவாக்கி தமக்கான சட்டப் பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்கள் பெற்றுள்ளனர். டேவிட் பேர்ஜஸ் பணத்தையும் பெருமையயும் முதன்மைப்படுத்தாமல் பிரித்தானிய உள்நாட்டு சட்டத்துக்கு சவாலாகவும் பாதிக்கப்பட்ட இனத்திற்காக உதவி செய்வதையும் முதன்மைப்படுத்தி தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதனுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

டேவிட் பேர்ஜஸ் தொடர்பான முன்னைய பதிவுகள்:

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!