23

23

வடக்கில் சேதமடைந்த அரச அலுவலகங்களை நிர்மாணிக்க ரூ.89 கோடி

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல அரச அலுவலகங்களையும் மீள நிர்மாணிப்பதற்கான இரண்டு வருட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென முதற்கட்டமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 89 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் உட்பட யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல அரச நிர்வாகச் கட்டிடங்களும் இதன் மூலம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் 200 மில்லியன் ரூபா செலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் 60 மில்லியன் ரூபா செலவிலும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களும் இப்பிரதேசங்களிலுள்ள கிராம சேவையாளர் காரியாலயங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சகல அரச அலுவலகங்களும் தற்போது செயற்படுகின்றன.

புதுக்குடியிருப்பு மற்றும் மருதங்கேனி போன்ற பிரதேச செயலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வருவதுடன் ஏனைய சகல அரச அலுவலகங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயலகங்களுக்கான தளபாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பல செயலகங்கள் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 175 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் அதில் 152 மில்லியன் ருபா செலவிடப்பட்டு பெரும்பாலான கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் இரண்டு வருடத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் சகல அரச கட்டிடங்களும் முழுமையாக மீள்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மா விலை ரூபா 10.50ஆல் அதிகரிப்பு

கோதுமை தானியம் இறக்குமதிக்கான வரிச் சலுகையை நீக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியதை அடுத்து கோதுமை மா நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 10.50 ஆல் அதிகரித்துள்ளன.

கோதுமை தானிய இறக்குமதிக்கென வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க நிதி அமைச்சு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய கோதுமை தானிய இறக்குமதிக்கான வரி 15 சதவீதத்தால் அல்லது கிலோவொன்றுக்கு 10 ரூபாவால் அதிகரிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோவொன்றின் விலையை ரூபா 10.50 ஆல் அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் தனது முகவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.

கோதுமை மா கிலோவொன்றின் விலை ரூபா 10.50 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிறிமா நிறுவனமும் செரண்டிப் நிறுவனமும் தங்களுக்கு அறிவித்திருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை 63 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோவொன்றின் விற்பனை விலை அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகை நீக்கத்தால் ரூபா 73.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிப்பதை இரு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம்

cadar.jpgபாராளு மன்றத்திற்கு எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்றால், ஜனாதிபதி பதவிக்கு ஏன் போட்டியிட முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதை இரண்டு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதென்றும் காதர் எம். பி. தெரிவித்தார்.

மக்கள் ஆணை கிடைக்கும் வரை ஜனாதிபதியாக இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மீண்டும் போட்டியிடும் நிலை உருவாகும்’ என்று சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பவர்கள் தமது அரசியல் சுயலாபத்திற்காக மக்களைக் குழப்புகிறார்களென்றும், இரண்டு தடவையாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சரத்தை அரசியலமைப்பில் நீக்க வேண்டுமென்று மங்கள சமரவீர எம். பியும் முன்பு ஒரு தடவை வலியுறுத்தியிருந்தாரென்றும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. எம்.பி. ரங்கே பண்டார ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நேற்று முன்தினம் தனது பாரியார் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவருடன் இடம்பெற்ற மோதலில் பலத்த காயங்களுக்குள்ளாகிய ரங்கே பண்டார ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

ஆஸ்பத்திரியில் அவருக்கான சிகிச்சையை துரிதப்படுத்துவதற்கும் அதற்கான டாக்டர்களை ஏற்பாடு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான சிகிச்சைகளையடுத்து ரங்கே பண்டார விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஜனாதிபதியின் மேற்படி உதவிக்கு நன்றி கூறும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார அலரி மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.

செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கு வரவேற்பு இல்லை.

தமிழகத்தில் நாளை (June 23 2010) நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்தில் 14 பேராளர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான அழைப்பிதழ்கள் செம்மொழி மாநாட்டுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நெறிப்படுத்தலில்  தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் எம். இராசேந்திரன் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்களில் பேராசிரியர் அ.சண்முகதாசன், பேராசிரியர் சி. சிவலிங்கராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ் ஜெபநெசன், கலாநிதி இ. விசாகரூபன், கலாநிதி சி. செல்வரஞ்சிதம் ஈ. குமரன், ஆசிரிய கலாசாரல் நிலைய விரிவரையாளர் அ, லலிசன், பேராசிரியர் மு.புஸ்பரட்ணம், செல்வி. செல்வாம்பிகை நடராசா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் த.அஜந்தகுமார், செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. பத்மநாதன், ஆகியோர் உள்ளங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றிங்கும் அழப்பு கிடைக்கப்பெறவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கே.பியை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். – செல்வம் அடைக்கலநாதன் M.P. (TNA)

Selvam Adaikalanathan TNA_TELOதற்போது அரசாங்கத்திடம் இருக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தின் பின்னான மக்களின் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளளார்.

யுத்தத்தின் பின்னரான மக்கள் பணிகளில் கே.பி பங்களிப்புச் செய்ய பலர் முன்வருவதை வரவேற்கலாம் என்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவருக்கு உதவப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்து குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஒன்பது புலி உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள் எனவே, அவரது கருத்துக்களுக்கு இணங்கி புலம்பெயர் மக்கள் செயல்பட மாட்டார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.