கோதுமை தானியம் இறக்குமதிக்கான வரிச் சலுகையை நீக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியதை அடுத்து கோதுமை மா நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 10.50 ஆல் அதிகரித்துள்ளன.
கோதுமை தானிய இறக்குமதிக்கென வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க நிதி அமைச்சு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய கோதுமை தானிய இறக்குமதிக்கான வரி 15 சதவீதத்தால் அல்லது கிலோவொன்றுக்கு 10 ரூபாவால் அதிகரிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோவொன்றின் விலையை ரூபா 10.50 ஆல் அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் தனது முகவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.
கோதுமை மா கிலோவொன்றின் விலை ரூபா 10.50 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிறிமா நிறுவனமும் செரண்டிப் நிறுவனமும் தங்களுக்கு அறிவித்திருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை 63 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோவொன்றின் விற்பனை விலை அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகை நீக்கத்தால் ரூபா 73.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.