27

27

மட்டு. மாவட்டத்தில் மேலும் மூன்று இடங்களில் அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள்

kalmunai.jpgஅனர்த்தங்கள் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மூன்று கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன.

இக்கோபுரங்களின் செயற்பாடுகளை விளக்குவதற்கான ஒரு கூட்டம் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவையாளர்கள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். கலாநிதி புத்திக வீரங்சிக தலைமையிலான குழுவினரால் கருத்துரையும் விளக்கமும் அளிக்கப்பட்டன

1 இலட்சம் படையினரை மேலும் திரட்டுவதற்கு இராணுவம் தீர்மானம் -ஜெனரல் சரத் பொன்சேகா

fonseka-000.jpgஉள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் மற்றொரு கிளர்ச்சி ஏதாவது மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேலும் 1 இலட்சம் படையினரை திரட்டவுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலுள்ள புலி உறுப்பினர்கள் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் முயற்சிப்பர் என்பதால், படையினரை கட்டியெழுப்பவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாக ஏ.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் வணக்க நிகழ்வுகள்

வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய இனப்படுகொலையில் பலியான மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன

பிரெஞ்ச் ஓபன்-முதல் சுற்றில் சானியா தோல்வி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார். நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. பெண்களுக்கான ஓற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானை சேர்ந்த கலினா வஸ்கோபோயேவாவை எதிர்கொண்டார்.

போதுமான பயிற்சியில் இல்லாமல் இந்த போட்டியில் பங்கேற்ற சானியா துவக்கத்தில் தவறு மேல் தவறு செய்தார். இதையடுத்து அவர் முதல் செட்டை 4-6 என பறிகொடுத்தார். அடுத்த செட்டில் சானியா வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், இவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 6-7 என இழந்தார். இறுதியில் 4-6, 6-7 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சானியா அடுத்ததாக பெண்கள் இரட்டையரில் சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங்குடன் இணைந்து விளையாடுகிறார்

இலங்கையின் தீர்மானத்திற்கு இந்தோனேஷியா ஆதரவு

இலங்கை தொடர்பாக மேற்கு நாடுகள் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக இந்தோனேஷியா குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இறுதிக் கட்ட நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான முயற்சிகளில் மேற்கு நாடுகள் ஈடுபட்டிருப்பது தொடர்பாகவே இந்தோனேஷியா இக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு தமது உரிமை மீறல் விசா ரணைகளில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் கொண்டிருப்பதாக இந்தோனேஷியா சாடியுள்ளது.

“இதனை (உரிமைகள் மீறல் விசாரணைக்கான அழைப்பு) நாம் அரசியல் ரீதியானதாக பார்க்கிறோம். காஸாவில் இஸ்ரேலின் உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை முயற்சி தொடர்பாக அவர்கள் ஏன் ஆர்வமின்றி செயற்படாமல் அவர்கள் (மேற்கு நாடுகள்) நிராகரித்தன? என்று இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெகு பைசாசியாவை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்படவிருந்த கொழும்பின் தீர்மான வரைபுக்கு இந்தோனேஷியா ஆதரவளிக்கும் என்று அப்பேச்சாளர் கூறியுள்ளார்

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் மகள் மரணம்

27-mike.jpgகுத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் நான்கு வயது மகள் வீட்டில் இருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசனிற்கு பல மனைவிமார். அவர்களின் மூலம் இவருக்கு ஜெனா (வயது 20), மைக்கே (வயது 18), ராய்னா (வயது 13), அமிர் (வயது 11), மைகுல் (வயது 7) மற்றும் எக்சோடஸ் (வயது 4) என ஆறு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது டைசன் பீனிக்ஸ் நகரில் மைகுல் மற்றும் எக்சோடஸ் ஆகிய என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதாக தெரிகிறது. இந் நிலையில் நேற்று முன்தினம் மைக் டைசனின் கடைசி குழந்தையான எக்சோடஸ் வீட்டில் இருந்த உடற்பயிற்சி அறைக்குள் சென்று விளையாடி கொண்டிருந்த சமயம் அங்கிருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிள் அந்த சிறுமியின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் குழந்தை அந்த இடத்திலே மயங்கமுற்றுள்ளார்.

கழுத்தில் கேபிள் இறுகி அவள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த அவளது சகோதரன் மைகுல் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து ஓடிச் சென்று சிறுமியை மீட்ட தாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவி்ட்டனர் 

போர்க் குற்ற விசாரணைக்கு எதிராக அரசுடன் கைகோர்த்து செயற்பட ஐ.தே.க. தயார்- தயாசிறி ஜயசேகர எம்.பி.

dayasiri-jayasekara-000.jpgபயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் நன்றி கூறிக்கொள்வதுடன் அவ்விருவருக்கும் எதிராக சர்வதேசத்தினால் மேற்கொள்ளவிருக்கின்ற போர்க் குற்ற விசாரணைகளுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்துச் செயற்பட ஐ.தே.க. தயார் என்று அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் – சிங்கள உறவை கட்டியெழுப்புவது அடுத்த கட்ட பணியாக இருக்க வேண்டும்

rupawahini-repo.jpgயுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, தமிழ் – சிங்கள உறவைக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்று, வன்னிக் களமுனையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையைச் சேர்ந்த சமன் குமார ராமவிக்ரம தெரிவித்தார்.

இந்தப் பணியை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது கடந்த ஒன்றரை வருட காலமாக, களமுனையில் நின்று ரூபவாஹினிக்காக செய்தி சேகரித்த சமன்குமார ராம விக்ரமவுக்கும், அமல் சமந்தவுக்கும் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வளவில் திறந்த வெளிக் கலையகத்தில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், துணிச்சல் மிக்க இரண்டு செய்தியாளர்களுக்கும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நேரடியாக ஒளிபரப்பாகிய இந்தப் பாராட்டு விழா நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இரண்டு செய்தியாளர்களும், களமுனையில் தாம் பெற்ற அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

“ஒரு நாள் முன்னேறிச் செல்லும் படையினருடன் சென்றபோது, புதுக்குடியிருப்பில் வைத்து தீவிர மோதல் நடந்தது. நான் செய்வதறியாது, என்னவானாலும் நடக்கட்டும் என்று கண்களை மூடிக் கொண்டேன்.  எந்தக் கஷ்டமானாலும், நாட்டு மக்களுக்கு போர்ச் செய்திகளைத் திரட்டி உடனுக்குடன் ஒளிபரப்ப வாய்ப்பு கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். இறுதி வரை, களத்தில் நின்று வெற்றி வாகை சூடியதன் பங்காளியாக ரூபவாஹினியும் இணைந்து கொண்டுள்ளதில் மகிழ்ச்சி. இனி, நாம் தமிழ் – சிங்கள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது அடுத்த கட்ட போராட்டம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்” என்றார் ராமவிக்ரம.

தவறுதலான வேட்டு; அதிரடிப் படை வீரர் பலி

அம்பாறை, சியம்பலாண்டுவ பகுதியில் பதுங்கியிருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படைவீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக வேட்டு தீர்க்கப்ப ட்டதனால் அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றொரு வீரர் உயிரிழந்துள்ளார்.

சிம்பலாண்டுவ, மூன்றாம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அறுகம்பை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த கே. ஜி. துஷாரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொய்யான தகவல்கள் – எம்.பி, டொக்டர்கள் பற்றிய உண்மைத்தகவல்கள் விரைவில்

yappa.jpgபாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான பொய்யான தகவல்களை வெளியிட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் போன்றோர் தொடர்பான உண்மையான தகவல்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்.

இவர்களை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனரென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர்.

இவர்களில் சிலர் இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களில் இவர்கள் தொடர்பான தகவல்கள் அம்பலப்படுத்தப்படும். அவர்களாகவே உண்மையை வெளிப்படுத்துவார்கள்.

கடந்த காலங்களில் 9100 புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்களில் 1600 பேர் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 14 தற்கொலை குண்டுதாரிகள் வெளியில் உள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சரணடைந்தவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழே விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட மாட்டாது. சமாதானம் நிலைநாட்டப்பட்டால் இந்த சட்டங்கள் தேவைப்படாது.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துள்ள போதும், பயங்கரவாதம் முற்றுப் பெறவில்லை. சர்வதேச ரீதியில் புலி முக்கியஸ்தர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர். இவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) ஒத்துழைப்பை கோரியுள்ளோம். இதேவேளை, புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களையும் இலங்கை பிரஜைகளையும் தாக்கி வருகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சர்வதேச நாடுகளை கோரியுள்ளோம்.