22

22

ஐ.நா விசேட பிரதிநிதி நம்பியார் நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்

menikfarm_nambiyar.jpgஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விஷேட பிரதிநிதி கே.டி. நம்பியார் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் வசிக்கும் மக்களை சந்தித்து தற்போது அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்பு அங்கு கருத்துரைத்த நம்பியார் கூறுகையில்:

இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன் தனது இன்றைய விஜயம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு தற்போதைய நிலவரம் குறித்து அறிவிப்பதாகவே அமைந்துள்ளது எனவும் கூறினார்.

இங்கு வருகை தந்த விஷேட பிரதிநிதியை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றதுடன் இடைத்தங்கல், நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம் உட்பட தற்போதைய நிவா ரணப் பணிகள் குறித்தும் அமைச்சர் நம்பியாருக்கு சுட்டிக்காட்டினார்.

பாடசாலை அதிபர்களுக்கு பதவி உயர்வு

susil_prem_minister.jpg நாட்டிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி கடந்த 13 வருடங்களாகப் பதவி உயர்வு கிடைக்காமையினால் பாதிக்கப்பட்ட அதிபர் பிரிவு 2-2 இலுள்ள 1743 அதிபர்கள் அதிபர் பிரிவு 2-1 க்கும், அதிபர் பிரிவு 2-1 இல் இருந்த 2582 அதிபர்கள் அதிபர் பிரிவு 1 க்கும் தரமுயர்த்தப்படவுள்ளனர்.

அரச சேவை ஆணைக் குழு நியமிக்கப்படும்வரை இவர்களுக்கான பதவி உயர்வை வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் -பூகற்பவியலாளர் எச்சரிக்கை

earth-slip.jpg தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற் படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய நேற்றுத் தெரிவித்தார். இப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறும் காலங்களில் மலையகப் பிரதேசங்களிலும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், கம்பஹா, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் இம்மழை வீழ்ச்சி காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் இப்பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ள பல இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மே மாதம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையும் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு தொடர்பாக ஆய்வு செய்யவென நேரில் சென்று திரும்பிய பூகற்பவியலாளர் சமந்தா போகபிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேநேரம், நோட்டன் பிரிஜ், விதுளபுர மண்சரிவு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மண் சரிவுக்கு உள்ளான பிரதேசத்திற்கு மேலாக அமைந்திருக்கும் வீதியில் சேருகின்ற தண்ணீரை, இப்பிரதேசத்திற்கு அருகில் கீழாக ஓடிக்கொண்டிருக்கின்ற களனி கங்கையுடன் ஒழுங்கு முறையாக சேர்வதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தால் இந்த அனர்த்தத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இம்மண் சரிவு ஏற்பட்ட பிரதேசத்திற்கு இரு பக்கத்திலும் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஒரே விதமான மண் அமைப்பே காணப்படுகின்றது. அதன் காரணத்தினால் இப்பிரதேசத்திலுள்ள ஐந்து வீடுகளில் வாழுகின்ற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கும் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

விதுலிபுர மண்சரிவுக்கு மேலதிகமாக வேறு வேறு இடங்களிலும் சிறுசிறு மண் சரிவுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

அதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண் சரிவுகள் மேலும் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றும் அவர் கூறினார்.

கல்முனை மாநகரசபை உருவாக்கப்பட்டதால் தமிழ், முஸ்லிம் நல்லுறவு மேம்பட்டுள்ளது

kalmunai.jpgகல்முனை மாநகரசபை உருவாகியதையடுத்து, கடந்த 3 வருடங்களில் தமிழ், முஸ்லிம் நல்லுறவு மேலோங்கி வருகின்றது. இந்த நிலைமையை மாநகரசபையின் செயற்பாடுகள் மூலம் மேலும் கட்டிவளர்க்க வேண்டும். இவ்வாறு கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் கூறினார். மாநகர முதல்வர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சபா மண்டபத்தில் அமர்வு நடைபெற்றது. உறுப்பினர் அமிர்தலிங்கம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

” இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக தமிழ், முஸ்லிம் மக்கள் இன ஒற்றுமையுடனும் அந்நியோன்னியத்துடனுமே வாழ்ந்து வந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் தனியாக உருவாகுவதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ் பாணமைப்பற்றாக இருந்த காலகட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், 1964 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தான் இப் பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிறு சிறு பிணக்குகள் முளைவிடத் தொடங்கி இன முறுகல் நிலைமைகள் அவ்வப்போது ஏற்பட்டுவந்தன. ஆனால், கல்முனை மாநகரசபை உருவாகி மக்கள் பிரதிநிதிகளாக இரு இனத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கிய பின்னர் நல்லுறவுமிக்க சௌஜன்ய நிலைமை தோற்றுவிக்கப்பட்டு அது வளர்ச்சி கண்டு வருகின்றது.

அமைதி, சமாதானம் மிளிரும் பிரதேசமாக இன்று இந்த மண் திகழ்கின்றது. இன்று பல்வேறு துறைகளிலும் கல்முனை மாநகர சபைப் பிரிவிலுள்ள தமிழ்க் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் வளரக்கூடாது.

குறிப்பாக, கரைவாகு மேற்கைச் சேர்ந்த சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, துரவந்தியமேடு போன்ற கிராமங்களின் அபிவிருத்தியில் சபை முழு அக்கறை காட்டவேண்டும். வீணான சந்தேகங்கள் எழுவதற்கு இடமளிக்காது சபைச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். நற்பிட்டிமுனை வேம்படி வீதிக்கு கிரவலிட்டுத் தருமாறு நான் கோரியிருந்தேன். இதற்கும் ஆவனசெய்ய சபை முன்வர வேண்டும் என்றார்.

டோக்கியோவில் பன்றிக்காய்ச்சல் பாதித்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

japanese_school_getty.jpgஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முதன்முறையாக பன்றிக்காய்ச்சல் பாதித்துள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டோக்கியோ மிகவும் ஜனநெருக்கடியான இடமாகும். நியூயார்க் நகரத்தில் இருந்து திரும்பிய இரண்டு பள்ளிக்கூட மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜப்பானில் சுமார் 250 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

1050 மில்லியன் ரூபா செலவில் 30 பாடசாலைகள் அபிவிருத்தி

susil_prem_minister.jpg“வடக்கின் வசந்தம்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள 30 பாடசாலைகள் 1050 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட வுள்ளன.

ஆசிய அபிவிருத்தித் வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப் படுத்தப்படவுள்ள பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் முதற்கட்டமாக வடக்கிலும், கிழக்கிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் பெயர்களையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் வெளியிட்டுள்ளார். வடக்கில், வவுனியா தெற்கு சைவப் பிரகாச மகளிர் வித்தியாலயம், ஓமந்தை, புத்துக்குளம் மகா வித்தியாலயம், வலிகாமம் கிழக்கு புத்தூர் சோமாஸ்கந்த வித்தியாலயம், வலிகாமம் வடக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயம் வித்தியாலயம், கரவெட்டி வடக்கு கரவெட்டி விக்னேஸ்வரா வித்தியாலயம், தென்மராட்சி வரணி மகா வித்தியாலயம், வலிகாமம் மேற்கு யாழ். விக்டோரியா வித்தியாலயம், மன்னார் புனித அன்னம்மாள் மத்திய மகா வித்தியாலயம், மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் போன்றவையும்,

கிழக்கில் அம்பாறை தெஹியத்தகண்டிய மெதகம மகா வித்தியாலயம்,

திருக்கோவில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், திருகோணமலை கம்பலாகமுவ சிராஜ் முஸ்லிம் மகா வித்தியாலயம், பதவி ஸ்ரீபுர பலுகஹ வங்குவ மகா வித்தியாலயம், கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலயம், மட்டக்களப்பு கோரளைப்பற்று விக்னேஸ்வரா வித்தியாலயம், மண்முனை தெற்கு மற்றும் மேற்கு முதலைக்குடா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு கோறளைப்பற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயம் ஆகியன முதற்கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

கொழும்பு நகரின் போக்குவரத்து அபிவிருத்திக்கு ஆலோசனை பெறல்

dinesh_gunewardane.jpgகொழும்பு நகரின் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை புனித பூமி அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்திருந்தார்.
இதற்கிணங்க ஜப்பானின் வரையறுக்கப்பட்ட ஒரியன்டல் கன்ஸ்டல்டன்ட் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட க்றீன்டெக் கன்ஸ்டல்டன்ட் தனியார் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 201.6 மில்லியன் ஜப்பானிய யென்னும் 145 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் வழங்கிய 3 டாக்டர்கள் மீது விசாரணை

புலிகளின் பிடியிலிருந்தபோது ஊடகங்களுக்குத் தவறான தகவல்களை தெரிவித்த மூன்று டாக்டர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்குச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது. புலிகளின் பிடியிலிருந்த டாக்டர்களான சண்முகராஜா, சத்தியமூர்த்தி, வரதராஜா ஆகியோர் உள்ளூர் வெளியூர் ஊடகங்களுக்குத் தவறான தகவல்களைத் தெரிவித்தமை குறித்தே விசாரணைகள் நடாத்தப்படவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த விசாரணைகளுக்கான ஒழுங்குகளை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹவத்த லியனகே மேற்கொண்டிருக்கிறார். தற்போது இந்த மூன்று டாக்டர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் ஸ்ரீஜயவாதனபுர கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

students1.jpgகொழும்பு மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுபற்றி கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் எமது இணையத்துக்குத் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டெடுத்த படைவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தை முன்னிட்டே இப்பாடசாலைகள் மூடப்படவுள்ளன எனக் கூறினார்.

பாகிஸ்தானில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ சர்வதேச நிதியுதவி தேவை: பாகிஸ்தான் பிரதமர்

raza_gilani.jpgபாகிஸ் தானில், தாலிபான் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது போரின் காரணமாக இடம் பெயர்ந்துள்ள பெருமளவிலான பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமக்கு அவசரமாக 600 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தமக்கு நிதியுதவி தேவைப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடமேற்கே தாலிபான் ஆயுததாரிகளை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக 15 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது மிகவும் அவசியமானது என்று நிதியுதவி வழங்குவோரின் சர்வதேச மாநாட்டிலேயே பாகிஸ்தானிய பிரதமர் கீலானி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் அமைதியும் வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 240 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான நிதி உதவி வழங்க கொடையாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.