ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விஷேட பிரதிநிதி கே.டி. நம்பியார் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் வசிக்கும் மக்களை சந்தித்து தற்போது அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின்பு அங்கு கருத்துரைத்த நம்பியார் கூறுகையில்:
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன் தனது இன்றைய விஜயம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு தற்போதைய நிலவரம் குறித்து அறிவிப்பதாகவே அமைந்துள்ளது எனவும் கூறினார்.
இங்கு வருகை தந்த விஷேட பிரதிநிதியை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றதுடன் இடைத்தங்கல், நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களின் கல்வி, சுகாதாரம் உட்பட தற்போதைய நிவா ரணப் பணிகள் குறித்தும் அமைச்சர் நம்பியாருக்கு சுட்டிக்காட்டினார்.