18

18

பிரபாரனின் மகன் சால்ஸ் அந்தோனியின் சடலம் கிடைத்துள்ளதாக அறிவிப்பு

charles_anthony.jpgஇன்று அதிகாலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார சற்று முன்பதாக அறிவித்திருந்தார்.

 அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் காலமானார்.

alu.jpgமுன்னாள் அமைச்சரும், சிரேஸ்ட அரசியல்வாதியுமான மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எலிக் அலுவிகார நேற்று (17) கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

82வயது நிரம்பிய இவர் நான்கு மகன், ஒரு மகளின் தந்தையாவார். இவரின் மகன்மார்களுள் ரன்ஜித் அலுவிகார தற்போதைய மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், வசந்த அலுவிகார மாகாணசபை உறுப்பினராகவும், சல்ஜித் அலுவிகார மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், சகத் அலுவிகார தோட்ட அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றனர்.  

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

parliament.jpgநேற்று (17) இரவுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உள்ளடக்கிய வர்த்தமானி நேற்று நல்லிரவு அச்சாகுவதற்கு இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (19) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின் உரையுடன் பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்.

தமிழருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படாதவரை போர் முடிவடைந்ததாகக் கருதிவிட முடியாது -ஜோன் ஹோம்ஸ்

waroooo.jpgஅரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர் களுக்குச் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் போர் முடிவடைந்து விட்டதாகக் கருதமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததவை  வருமாறு: இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என அரசுஅறிவித்துள்ள போதிலும் அவர்களின் கெரில்லா தாக்குதல் தொடரக் கூடும். சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர் காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் யுத்தம் முடிவடைந்ததாகக் கருத முடியாது. அரசுயுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்பதே ஐக்கிய நாடுகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது  என்றார்.

இன்று கப்பல் சேவை

ship.jpgகாங்கேசன் துறைக்கும் திருகோண மலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் மேமாத  4 ஆவது கப்பலிற்கான அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொண்டவர்களையும் அவசர  தேவையின் நிமித்தம் செல்வதற்கு செயலகத்தில் பதிவினை மேற்கொண்டவர்களையும்  இன்று திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு யாழ். ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் அறிவித்துள்ளார்.             

தேசியக் கொடிகளை ஏந்தி நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

he_2009-05-17.jpgதீவிர வாதத்தின் பிடியிலிருந்து முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து நாடு பூராவும் மக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

சுமார் மூன்று தசாப்த காலம் இந்நாடும், இந்நாட்டு மக்களும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் சொல்லும் தரமற்றவை. அழிவுகளும், இழப்புக்களும், சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல.

இவ்வாறான கோர பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுவிக்கப்பட்டு அவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையொட்டியே மக்கள் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மகிழ்ச்சி ஆரவாரங்களைத் தெரிவித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் பிரபாகரனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு துண்டாடப்பட்டிருந்த நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்து, நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் மக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், ஆசிகளையும் தெரிவித்தனர். ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து அரச மற்றும் தனியார் கட்டடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் மக்கள் தேசியக் கொடிகளைப் பறக்கவிட்டனர். வீதிகளில் இறங்கி ஆடி, பாடி மகிழ்ந்தனர். நகரங்களில் மகிழ்ச்சி ஊர்வலங்களில் ஈடுபட்டனர்.

இதேவேளை நாட்டின் பல பிரதேசங்களில் ‘ரபான்’ அடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களை வெளிப்படுத்தினர். பாற்சோறும் வழங்கப்பட்டது.

புதுமாத்தளன் பகுதியில் கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கண்டெடுப்பு

SL_Army_in_Final_Phaseபுதுமாத் தளன் பிரதேசத்திலிருந்து புலிகளின் இரண்டு கனரக கவச வாகனங்கள், மூன்று விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பிரதேசங்களில் படையினர் நடத்திவரும் பாரிய தேடுதலின் போதே நேற்றுக் காலை இந்த கனரக ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பெடல் துப்பாக்கி ரக ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது சுமார் ஒரு நிமிடத்திற்கு 600 ரவைகள் செல்லக் கூடியது.

இதிலுள்ள மற்றுமொரு கனரக ஆயுதம் 5 தொடக் கம் 7 அடி நீளமானது. இது 8000 மீற்றர் தூரம் செல்லக்கூடியதாகும். தொடர்ந்தும் படையினர் கனரக ஆயுதங்களை மீட்டெடுத்த வண்ணம் உள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகத்தில் கைதான இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி

gun.jpgமட்டக் களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரதேசத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று நண்பகல் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லபட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கீர்த்தி எனப்படும் 27 வயதான ஐயாத்துரை கணேசமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ள இந்நபர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிஸ்டல் குழுவின் தலைவர் என தங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரில் மாதம் 8 ஆம் திகதி தங்களால் கைது செய்யப்பட்ட இந்நபர் கொடுத்த தகவலையடுத்து விமானம் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகள் உட்பட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சவுக்கடி மயானத்தில் ஆயுதங்கள் புதைக்கப்படடிருந்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக நேற்று நண்பகல் இந்நபர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மூலம் பொலிஸாரை தாக்க முற்பட்ட வேளை மேற்கொள்ளப்பட்ட பதில் நடவடிக்கையிலேயே இவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.பொலிஸ் தகவல்களின் படி அந்த இடத்தில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி வினோபா இந்திரன் மரண விசாரணையின் நிமித்தம் சடலத்தையும் சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.பிரேத பரிசோதனையின் பின்பு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் 

எப்படி முடியும் இந்த யுத்தம்!!! : த ஜெயபாலன்

Erik_Solheim & Pirabaharan_V”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்”  என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ரொய்டர் செய்தி ஸ்தாபனத்திற்குத் தெரிவித்து உள்ளார். சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்ற எல்ரிரிஈ இன் இறுதி வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது. எல்ரிரிஈ ஆயுதங்களை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க அனுமதிக்க மாட்டாது என்பதை இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 18 2009) அதிகாலை எல்ரிரிஈ வசம் உள்ள 250 சதுர மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்பிற்குள் இராணுவம் ஊடுருவ ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையின் யுத்தம் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. உத்தியோக பூர்வமான அறிக்கைகளே மிகுந்த குழப்பத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு அப்பால் இன்னும் பல ஊகங்களும் செய்திகளாகின்றன. எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் எங்கே என்பது பல்வேறு ஊகங்களுக்கும் வதந்திகளுக்குமான பேசுபொருளாகி உள்ளது.
நேற்று (மே 17 2009) மதியம் குறிப்பிடப்படாத ஒரு பகுதியில் இருந்து எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இச்செவ்வி அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் தொலைக்காட்சியிலும் பிரித்தானிய செய்தி நிறுவனமான சனல் 4 இலும் காண்பிக்கப்பட்டது. அதில் எல்ரிரிஈ இன் தலைவர் வே பிரபாகரன் இன்னமும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் ஆயுதங்களைக் கீழே போடத் தாயாராக இருப்பதாகவும் ஆனால் சரணடையப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என இச்செவ்வி வெளியானதன் பிற்பாடு நேற்று (மே 17 2009) மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். நேற்று தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்:
”எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதான செயன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளது. முல்லைத்தீவுப் பகுதியில் எங்களிடம் இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் உடன்பட்டு உள்ளோம். ஒவ்வொரு மணித்தியாலமும் நூறு பேர்வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்கள் பொதுமக்கள்.

யுத்த நிறுத்தத்திற்கு பிரபாகரன் உடன்பட்டு உள்ளார். நான் அவருடன் நான்கு மணிநேரம் உரையாடினேன். அதில் நாங்கள் அதற்கு உடன்பட்டோம். நாங்கள் இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒருவரும் பதில் தரவில்லை. யுத்தமும் நிறுத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னமும் இந்த யுத்தப் பகுதியிலேயே இருக்கின்றார். சுற்றி வளைக்கப்பட்ட இந்தப் பகுதியில் இருக்கும் போதே நான் அவருடன் கதைத்தேன். நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடவே உடன்பட்டோம். சரணடையவல்ல.

நாங்கள் பொதுமக்களை ஒரு போதும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பொது மக்கள் எங்களுடைய உறவுகள் அல்லது எங்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தை நம்பவில்லை. அதனால் அவர்கள் எங்களுடனேயே இருந்தனர். அவர்கள் முகாம்களுக்கு செல்ல விரும்பவில்லை. இந்த முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெறுகிறது. பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகிறது. அந்த மக்கள் இலங்கை இராணுவத்திடம் செல்ல விரும்பவில்லை என்பதே நிச்சயமானது. நாங்கள் ஒரு போதும் மக்களைச் சுடவில்லை. சில சமயங்களில் இருபகுதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயப்பட்டு இருக்கலாம். நாங்கள் ஏன் எங்களது மக்களைக் கொல்ல வேண்டும்.”

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்னதாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நேற்று (மே 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோளில் ”நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை.” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் இந்தியத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது உறுதியானதும் மே 16 2009ல் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் ”எதுவும் செய்யத் தயார்” எனத் தெரிவித்து இருந்தார். அது ஆயுதங்களை ஒப்படைப்பது என்பதை மிகத் தெளிவாக நேற்று (மே 17 2009) புலிகள் அறிவித்து உள்ளனர். ”இந்த மோதல் ஒரு கசப்பான முடிவுக்கு வந்துள்ளது” என்று இந்த யுத்தத்தில் தங்கள் தோல்வியை எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்தார். ‘நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்க முடிவு செய்துள்ளோம். உயிரிந்தவர்களுக்காக மட்டும் நாங்கள் வேதனை அடைகின்றோம். இதற்கு மேல் எங்களால் நிற்க முடியவில்லை.’ என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் சுற்றி வளைக்கப்பட்ட சிறு நிலப்பரப்பொன்றினுள் புலிகள் உள்ளனர். அவர்களின் தலைமை அங்குள்ளனரா அல்லது வெளியேறி விட்டனரா என்பது இன்னமும் விடைகாணப்படாத வினாவாகவே உள்ளது.

மேலும் பெரும் தொகையான காயப்பட்டோர் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருக்கலாம் எனவும் அவர்கள் மிகக் கடினமான ஒரு உயிர்ப் போராட்டத்தில் உள்ளதாகவும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 72 மணிநேரத்தில் 70 000 பேர்வரை அப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெளியேறியவர்கள், காயப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் என வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பகுதிகளுக்கு அரசு மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்காமல் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கி வருகின்றது.

ஏற்கனவே வெளியேறிய 200 000 வரையான மக்கள் 20க்கும் உட்பட்ட முகாம்களில் நெருக்கடியில் உள்ள நிலையில் மேலும் 70 000 வரையானோர் அம்முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இது முகாம்களில் மிகுந்த நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்காததனால் இலங்கை இராணுவத்திடம் சரணடைய மறுக்கும் புலிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளுவார்கள் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அண்மைய நாட்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேதனையுடன் கழிகின்றது. இவ்வாறான ஒரு கசப்பான மிக வேதனையான சூழலுக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது.

தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகளின் தான்தோண்றித் தனமான முடிவுகளுக்கும் குறுகிய அரசியல் லாபங்களுக்கும் மிகப் பாரிய விலையை இலங்கைச் சமூகம் கொடுத்து உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனிதப் பேரவலம் சர்வதேசத்தையும் தொட்டுள்ளது. மறுமுனையில் இந்த யுத்தத்தில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை அரசு வெற்றிகரமாக மூடி மறைத்து உள்ளது. இந்த யுத்தம் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்திய ரணங்கள் அவ்வளவு இலகுவில் மாறிவிடாது.

இந்த கால்நூற்றாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெற்கில் கொண்டாடப்படுவது குறைநிலையானது. எல்ரிரிஈ மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதனாலேயே அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பினை வழங்க அரசு தவறும்பட்சத்தில் புலிகள் மீளவும் தங்களைக் கட்டமைத்து தாக்குதல்களை நடத்தக் கூடிய வலுவுடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பல நூற்றுக்கணக்கான புலிகள் ஏற்கனவே யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர்களால் ஒரு மரபுரீதியான இராணுவமாக இயங்க முடியாமலிருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் ஒரு இராணுவ முகாமை தாக்கி அழித்துவிட்டுச் செல்லும் பலம் அவர்களிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மேலும் அவர்களுடைய சர்வதேச வலைப்பின்னலில் எவ்வித குழப்பமும் இல்லை. இந்நிலையில் அவர்களையும் உள்ளகப்படுத்திய ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு செல்வதன் மூலம் நிரந்தரமான ஒரு சமாதானத்தை நோக்கி இலங்கையை நகர்த்த முடியும்.

குவைத்தில் முதன்முதலாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

kuwait.jpgகுவைத் தில் முதன்முதலாக பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு பெண்களில் மூவர் பேராசிரியர்கள், ஒருவர் பொருளாதார நிபுணர். நாட்டின் வளர்ச்சியில் பெண்களும் பங்கேற்க வாக்களித்த வாக்காளர்களை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ரோலா டஷ்தி என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

குவைத்தில் 2005 ம் ஆண்டு வரையில் பெண்கள் தேர்தலில் பங்கேற்கவோ, வாக்களிக்கவோ அனுமதியில்லை. குவைத் மன்னரின் உறவினர் பிரதமராக இருந்த போது, நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க நாடாளுமன்றம் முனைந்தது. இதனை தொடர்ந்து மன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தார்.