11

11

பிரிட்டிஷ் செய்தியாளர்களை இலங்கை திருப்பி அனுப்பியமை குறித்து பிரிட்டன் ஏமாற்றம்

channel-4news.jpg
இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர் குழு ஒன்றை திருப்பி அனுப்பியது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை படையினரின் அந்தஸ்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர்களை, இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தப்பி முககாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் மோசமாக நடத்தப்படுவது, மற்றும் அவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவது ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற இவர்கள் மூவரும் பிரிட்டனின் ”சனல் 4” தொலைக்காட்சியை சேர்ந்தவர்களாவர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தாம் சில தவறுகளை செய்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டதாக, இலங்கை பாதுகாப்பு தகவல் மையத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் ஹுலுகல்ல அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மை தேவை என்ற நிலைமை இருக்கின்ற நிலையில், இவர்களை திருப்பி அனுப்புவதற்காக இலங்கை எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

sri-lankan-schools.jpgமட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவார காலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடைவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பியது. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுச்சிகா (8 வயது) பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவததையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே நிலவிய அச்ச நிலை காரணமாகவும்,மாணவியின் படுகொலையைக் கண்டித்து அனுஷ்டிக்கப்படட பாடசாலை பகிஷ்கரிப்பு காரணமாகவும் நகர பிரதேச பாடசாலைகளில் கடந்த 30 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஒரு வார காலத்தின் பின்பு பாடசாலைகளில் வழமை போல் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெற்றாலும் மாணவர் வரவு குறிப்பாக ஆரம்ப பிரிவுகளில் வழமை நாட்களை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.

அரசாங்கத் தடையை மீறி வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்ற 900 பேர் கைது

vesak.jpgஅரசாங்கத் தடையை மீறி வெசாக் பண்டிகையின் போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 900 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்தது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8ஆம் 9ஆம் திகதிகளில் மதுபானக்கடைகள் மூடப்ப்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டதுடன்  மதுபானம் விற்பனையை மேற்கொள்வதும்  தடை செய்யப்பட்டிருந்தது.

வெசாக் பண்டிகையின் போது நடத்தப்பட்ட சுமார் 850 சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைதானதாக கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவர்கள் மற்றும் மதுபானம் அருந்தியவர்கள் போன்றோரும்  இதில் அடங்குவர். நாடு பூராவும் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது. 

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக் கூட்டம் – கொழும்பில் நாளை ஆரம்பம்

european-union.jpgஐரோப்பிய நாடுகளுக்கும்  இலங்கைக்குமிடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது தொடர்பான இருநாள் உயர்மட்டக் கூட்டமொன்று நாளை 12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இக் கூட்டத்தின் போது இருபக்க நல்லுறவை மேலும் மேம்படுத்துவது, வர்த்தக உறவுகள்,  இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கள்,  அரசியல் நிலைமை என்பன தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவரின் பிரதிநிதியாக செக் குடியரசின் பிரதி-வெளிவிவகார அமைச்சர் ஹெலோனா பம்பசேவா தலைமையிலான குழுவினர்,  கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்புக்கு வந்து சேர்வர் என்றும் அவர் கூறினார். அதேநேரம் இக்கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்படவிருக்கும் சுவீடன் நாட்டவரின் பிரதிநிதியாக அந்நாட்டு வெளி விவகார அமைச்சுப் பணிப்பாளர் நாயகம் கார்ல்ஹெம்ரிக் எரிங்க்குளோனா,  ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் வெளிஉறவுகளுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ரீட் ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். இவர்களும் இன்று கொழும்புக்கு வந்து சேரவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது, நாளை முதல் இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகளும் பங்குபற்றவிருக்கின்றனர். 

ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

election-commission.jpgஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று மாலை 5.00 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரயுமான ராஜேஷ் லக்காணி தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் 13ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளன்று நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,

தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் வழிகாட்டும் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு கட்சி சின்னம், கொடி, போஸ்டர் போன்றவைகளை வைத்திருக்க கூடாது. உணவு பண்டங்கள் எதையும் வழங்கக் கூடாது. அங்கு 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூட்டமாக இருக்க அனுமதி இல்லை. முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்படும் நபர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். அந்த நபர்கள் குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது.

வேட்பாளராகவோ அல்லது வாக்களிக்க செல்லும் வாக்காளராகவோ இல்லாத பட்சத்தில் எந்த ஒரு அமைச்சரும் வாக்குச்சாவடிக்குள் செல்லக் கூடாது. அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்ட நபர் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பு அலுவலருடன் செல்லலாம். ஆனால், தொகுதி முழுவதும் பாதுகாப்பு அலுவலருடன் சுற்றி வரக்கூடாது.

அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு பெற்ற நபர்கள் வாக்களிக்க பாதுகாவலருடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகளை அரசியல் கட்சிகள் எப்படி பின்பற்றுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டைரக்டர் பாரதிராஜாவை விடுதலை செய்ய வேண்டும்: தா.பாண்டியன்

bharathi-raja.jpgடைரக்டர் பாரதிராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, ஓவியர் சந்தானம், திரைப்பட நடிகர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் சோனியா காந்திக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய அளவில் இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுள்ள சூழலில் அதைக் கண்டிக்கும் முயற்சியாகத்தான் இந்தக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த நியாயமான கோரிக்கையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் தண்டிக்க முயற்சி செய்யும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் எந்தவொரு சம்பவத்தையும் துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக மாறவேண்டும்

“கோழைத் தனத்தை எங்கள் மத்தியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நேர்மையாக எவருக்கும் சோடை போகாத நிகழ்வுகளைத் துணிவாக வெளிப்படுத்தக்கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் மாறவேண்டும்’  இவ்வாறு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் சமூகம் ஊடகத்துறையில் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எனும் விடயம் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; ஒவ்வொருவரினதும் கலாசாரத்தினையும் அந்தந்த கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு விழிப்புணர்வு அல்லது எழுச்சிக் கூட்டங்களை நடத்தி அதனைப் பாதுகாப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது எங்கள் மத்தியில் உள்ள சூழல் எங்களின் கலாசாரம், விழுமியங்கள், சுதந்திரங்கள், உரிமைகள் அழிந்துவிடுமா? அல்லது அழியப்போகின்றதா? அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று முயற்சி செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதையுமே வியாபாரமாக பார்க்கின்ற இக்காலத்தில் எல்லாமே இன்று வியாபாரமாகி விட்டது. சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதனால்தான் அதற்குரிய பதிலை உரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றைப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டால் எமது சமூகம் முன்னேறுவதற்கு இதுவொன்றே போதுமாகும். எமது பிரதேசத்தில் இருக்கின்ற சில ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகள் அல்லது அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிக்கொண்டுவருவதற்கு பயந்து ஒதுங்குகின்றார்கள்.

பிரான்ஸ், பிரித்தானிய அமைச்சர்கள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பர்

pr-con.jpgஇலங்கைக்கு கடந்த வாரம் மேற்கொண்ட பயணம் தொடர்பான தகவல்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்குரிய உணவு சமைக்கும் பணியை நிவாரணக் கிராம மக்கள் ஆரம்பித்தனர்

risard-badi.jpgவவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று (10) முதல் தாங்களாக சமைக்கத் தொடங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அவர்கள் தாமாக சமைத்து சாப்பிட சமையல் உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள் அடங்கலான சகல நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று (10) வவுனியா அரச அதிபர் பணிமனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த மாநாட்டில் வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், மேஜர் ஜெனரல் சந்ரசிரி, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் 4 நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகளே இவ்வளவு காலமும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தினூடாக அரிசி, மா, பருப்பு, சீனி என்பன வழங்கப்படுவதோடு ஏனைய உலர் உணவுப் பொருட்கள் சமையல் உபகரணங்கள் என்பனவற்றை அராசங்கமும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

மக்கள் மீள்குடியேற்றப்படும் வரை மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து உலர் உணவுப் பொருட்கள், மலிகைச் சாமான்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, மக்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்குவதற்கென வவுனியாவில் களஞ்சியமொன்றை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார். இனிமேல் வவுனியா அரச அதிபரினூடாக மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்க விரும்புபவர்கள் வவுனியா அரச அதிபரிடம் தமது உதவிகளை கையளிக்குமாறும் அவர் கோரினார்.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கான சேமநல திட்டங்களை துரிதப்படுத்துமாறு பணித்தார்.

குடிநீர் மற்றும் மலசலகூட வசதியற்றவர்களுக்கு உடனடியாக உரிய வசதிகள் அளிக்குமாறும் அவர் தெரிவித்தார். மலசல மற்றும் குடிநீர் வசதியற்றவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள சில பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விரைவில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். ஆண்டியபுளியங்குளம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 1346 பேர் இன்று (11) வலயம் 2 இல் தங்கவைக்கப்பட உள்ளனர். அருவித்தோட்டம் சிவானந்த கல்லூரியில் உள்ள மக்களும் விரைவில் நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறியவர் முதல் பெரியவர் வரை சகலரையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவுரைகளை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 910 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அனைவரும் இன, மத, பேதங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் எனவும் கோரினார். அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகக் கூறிய அவர், பருப்பு, கடலை, நெத்தலி, மீன் மற்றும் மலிகைச் சாமான்களே அதிகமாகத் தேவைப்படுவதாகவும் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெனரல் சந்ரசிரி இராணுவத்தினரின், அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவி வருவதாகக் கூறினார்.

முதியவர்களை தமது உறவினர்களுடன் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதித்து வருவதாகக் கூறிய அவர் பிரிந்த குடும்பத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக வீடமைப்பு, மலசலகூடம், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டது. வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கப்படும் நிவாரணப் பொருட்களை வவுனியாவில் களஞ்சியப்படுத்த மூன்று நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

378 பேர் கொல்லப்பட்டதாக செய்தி : தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்கிறது இலங்கை அரசு – பீபீஸி தமிழோசை பேட்டி

gotabaya-rajapakasa.jpgஇலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரை பீபீஸி தமிழோசை பேட்டி கண்டிருந்தது. பீபீஸி இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அப்பேட்டியின் விபரம் வருமாறு:

பீபீஸி தமிழோசை: இன்று (நேற்று 10ஆம் திகதி) 106 சிறுவர்கள் உட்பட 378 கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது, வான்வழித் தாக்குதல்கள் இடம் பெறமாட்டாது என்று அரசாங்கம் கூறியிருந்தும் இத்தகைய செய்தி வந்துள்ளது, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கோத்தாபய ராஜபக்ஷ: புலிகளின் கடைசிக் கட்டம் இது. தாங்கள் தப்ப எந்தத் தில்லுமுல்லுகளையும் அவர்கள் இந்த நேரத்தில் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது உள்ள ஒரே வழி, அரசாங்கத்தின் மீது அவதூறைச் சுமத்துவது அல்லது சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவது, அவ்வளவுதான். அதனால் தான் அவர்களின் பிரச்சார இயத்திரம் இப்படியான புரளிகளைக் கிளப்பி 350, 200, 2000 என்று கதை கட்டி விட்டுள்ளது. எனவே இது விடுதலைப் புலிகளின் ஒரு பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பீபீஸி தமிழோசை: 378 பேரின் சடலங்கள் வந்துள்ளன, அதில் 106 சிறுவர்கள், 1122 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவரே தெரிவித்துள்ளாரே?

கோத்தாபாய: அவர் அரசாங்க மருத்துவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பது புலிகளின் தலைமைப்பீடமும், போராளிகளும், ஆயுதங்களும் செறிந்துள்ள மூன்றரை சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய மிகச் சிறிய இடம். இதற்குள் இருந்து கொண்டு அவரால் முற்று முழுக்க உண்மையைப் பேசிவிட முடியும் என்று புத்தியுள்ள எவராலும் நம்ப முடியாது.

பீபீஸி தமிழோசை: நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். புலிகள் ஒன்று சொல்கிறார்கள். இருவரும் சொல்வதை விட, தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்த்து உண்மையைச் சொல்ல செய்தியாளர்களை நீங்கள் அங்கு அனுமதிப்பது தானே? ஏன் தடுக்கிறீர்கள்.

கோத்தாபாய: செய்தியாளர்கள் உண்மையைச் சொல்ல நாங்கள் ஒன்றும் தடுக்கவில்லை. புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குப் போய்த் தனிப்பட்ட முறையில் செய்திகளை அறிய வழிவிட்டிருக்கிறோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிற இடத்தை விட்டு, சிறிதளவு பேர் இருக்கிற இடத்தில் போய் உண்மையை அறியப் போகிறேன் என்கிறார்கள்.

பீபீஸி தமிழோசை: அந்த முகாம்களுக்குக் கூடப் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் தானே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுதந்திரமாகப் போக அனுமதிக்கப்படுவதில்லையே.

கோத்தாபய: ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கே என்ன திருவிழாவா நடக்கிறது? வேடிக்கை பார்க்க? அங்கே முக்கியமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அவை பாதிப்படைய அனுமதிக்க முடியாது. அங்கு இயங்கும் சர்வதேச உதவி அமைப்புகள் கூட குழப்பம் வேண்டாம், அனைத்தையும் ஒழுங்கு செய்யுங்கள் என்கின்றன. அதனால் தான் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம். முகாமுக்குப் போனவுடன் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கிறோம் என்று கூறியிருந்தார்.