ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது தொடர்பான இருநாள் உயர்மட்டக் கூட்டமொன்று நாளை 12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இக் கூட்டத்தின் போது இருபக்க நல்லுறவை மேலும் மேம்படுத்துவது, வர்த்தக உறவுகள், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கள், அரசியல் நிலைமை என்பன தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவரின் பிரதிநிதியாக செக் குடியரசின் பிரதி-வெளிவிவகார அமைச்சர் ஹெலோனா பம்பசேவா தலைமையிலான குழுவினர், கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்புக்கு வந்து சேர்வர் என்றும் அவர் கூறினார். அதேநேரம் இக்கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்படவிருக்கும் சுவீடன் நாட்டவரின் பிரதிநிதியாக அந்நாட்டு வெளி விவகார அமைச்சுப் பணிப்பாளர் நாயகம் கார்ல்ஹெம்ரிக் எரிங்க்குளோனா, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் வெளிஉறவுகளுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ரீட் ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். இவர்களும் இன்று கொழும்புக்கு வந்து சேரவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது, நாளை முதல் இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகளும் பங்குபற்றவிருக்கின்றனர்.