“கோழைத் தனத்தை எங்கள் மத்தியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நேர்மையாக எவருக்கும் சோடை போகாத நிகழ்வுகளைத் துணிவாக வெளிப்படுத்தக்கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் மாறவேண்டும்’ இவ்வாறு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் சமூகம் ஊடகத்துறையில் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எனும் விடயம் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; ஒவ்வொருவரினதும் கலாசாரத்தினையும் அந்தந்த கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு விழிப்புணர்வு அல்லது எழுச்சிக் கூட்டங்களை நடத்தி அதனைப் பாதுகாப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது எங்கள் மத்தியில் உள்ள சூழல் எங்களின் கலாசாரம், விழுமியங்கள், சுதந்திரங்கள், உரிமைகள் அழிந்துவிடுமா? அல்லது அழியப்போகின்றதா? அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று முயற்சி செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எதையுமே வியாபாரமாக பார்க்கின்ற இக்காலத்தில் எல்லாமே இன்று வியாபாரமாகி விட்டது. சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதனால்தான் அதற்குரிய பதிலை உரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றைப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டால் எமது சமூகம் முன்னேறுவதற்கு இதுவொன்றே போதுமாகும். எமது பிரதேசத்தில் இருக்கின்ற சில ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகள் அல்லது அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிக்கொண்டுவருவதற்கு பயந்து ஒதுங்குகின்றார்கள்.