05

05

மாணவி தினுஷிக்கா கொலை: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் பலி

thinu.jpgமட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு,கப்பம் கோரப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இம்மாணவியின் சடலம் கடத்தப்பட்டு 5 நாட்களின் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இந்நபர்களைக் கைது செய்திருந்தனர் .

மாணவியின் பாடசாலை புத்தகப்பை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டித் தருவதாகக் கூறி இன்று அதிகாலை பாரதிபுரத்திலுள்ள முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் அவர்கள் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட போது, பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாவும் சம்பவம் தொடர்பான பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் 4 ஆவது நாளாக மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டம்

uk-stu.jpg
பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாணவர்கள் 4 வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது. பிரித்தானியா தமிழ் மக்களின் 29 நாள் தொடர் போராட்டத்தாலும், பரமேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் பிரித்தானியா சிறப்பு பிரதிநிதி உட்பட ஜந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீலங்காவிற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று நாடாளுமன்ற சதுக்கதில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவப்பு மஞ்சள் ஆடை அணிந்து தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்- ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை

sri_sri_ravi_shanka.jpg இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தா பகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடேசன் ரவிசங்கர் குருஜியிடம் தமது தொலைபேசி உரையாடலின் போது எடுத்துரைத்தார்.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.அதன்பின் 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

பிரித்தானிய பாராளுமன்றக் குழு இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

browne_.jpgநலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் போன்றவர்களுடனும் இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் வவுனியாவிலுள்ள, இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் பல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்ற இந்த குழுவில் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஷ் பிரவுணும் இடம்பெறுகிறார்.

இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக இவரை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை முன்னதாகவே ஏற்க மறுத்து விட்டது. தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாத்திரந்தான் அவர் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்.

‘அடங்காப்பற்று’ மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

adangappattu-2.jpg கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது. எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது ‘அடங்காப்பற்று’.

‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும். உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

vesak.jpg
நாடெங்கிலுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களையும் இறைச்சி கடைகள் மற்றும் மிருகங்களை அறுக்கும் நிலையங்களையும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 8ம்,  9ம் திகதிகளில் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இத்தினங்களில் உல்லாச ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்வதையும்,  சுப்பர் மார்கெட்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இத்தினங்களில் குதிரைப் பந்தய நிலையங்கள்,  கெஸினோ கிளப்கள்,  இரவு களியாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடிவிடுவதற்கும் அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கனடிய அமைச்சரின் போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

can-srila.jpgகனடிய அமைச்சரினால் விடுக்கப்பட்ட போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்து விட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே போர்நிறுத்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏ.எப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஒடா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கனடிய அமைச்சர் போர்நிறுத்தம் குறித்து விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த மாதம் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மோதல் தவிர்ப்பு தோல்வியில் முடிவடைந்ததாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கனடிய அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

கனேடிய அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

canada_min.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பெவர்லி ஜே ஒடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, மஹிந்த சமரசிங்க, ஆறுமுகம் தொண்டமான்,  டக்ளஸ் தேவானந்தா,  விநாயகமூர்த்தி முரளிதரன், புத்ரசிகாமணி,  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  வெளிவிவகார அமைச்சின் செயலளார் கலாநிதி பாலித கொஹன மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அன்ஜெலா பொக்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

தேசிய வெசாக் வைபவம் மாத்தறை ரஜமகா விகாரையில்

vesak.jpgதேசிய வெசாக் வைபவம் மாத்தறை வெஹெரஹேன ரஜமகா விகாரையில் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இவ்வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை,  தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு தபால் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. முத்திரை வெளியீட்டு வைபவம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதில் தபால் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ்வைபவத்தில் களனி பல்கலைக்கழக வேந்தர் வெலமிடியாவே குசலதம்ம, ஊவா பல்கலைக்கழக வேந்தர் அலுத்வௌ கோரத தேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன,  டளஸ் அழகப்பெரும,  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சந்திரசிரி கஜதீர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு இதுவரை 30 லொறி மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

medical_lorry.jpg வவுனியாவுக்கு வந்துள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்பிவைக்கப் படடுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
 
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக நேற்றைய தினமும்  3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று கப்பல்  மூலம் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார். புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன.