மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு,கப்பம் கோரப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இம்மாணவியின் சடலம் கடத்தப்பட்டு 5 நாட்களின் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இந்நபர்களைக் கைது செய்திருந்தனர் .
மாணவியின் பாடசாலை புத்தகப்பை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டித் தருவதாகக் கூறி இன்று அதிகாலை பாரதிபுரத்திலுள்ள முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் அவர்கள் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட போது, பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாவும் சம்பவம் தொடர்பான பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.