நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் போன்றவர்களுடனும் இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் வவுனியாவிலுள்ள, இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனின் பல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்ற இந்த குழுவில் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஷ் பிரவுணும் இடம்பெறுகிறார்.
இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக இவரை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை முன்னதாகவே ஏற்க மறுத்து விட்டது. தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாத்திரந்தான் அவர் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்.