“இலங்கை நிலவரத்தை நேரில் வந்து ஆராய்வதற்காக சர்வதேச நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எமது நாட்டின் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்குச் செல்ல பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சர்வதேசத்திற்கு அரசு விடுக்கும் செய்தி என்ன என்றே நாம் அரசிடம் கேள்வி எழுப்புகிறோம்” என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது “எமது பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடு தேவை இல்லை; எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என அன்று சிலர் கூறினர். இன்று இலங்கை நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதே போன்று இந்தியாவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கும், இலங்கை நிலைமையை நேரில் வந்து ஆராய அழைப்பு விடுக்கப்பட்டது.இலங்கை நிலையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுக்க ஒரு நாட்டுத் தலைவர் என்ற வகையில் உரிமை உள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று இலங்கை வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலைகளை ஆராய்ந்து சில கோரிக்கைகளை முன் வைத்தால், அதை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதா என நாம் கேட்கிறோம்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசு வவுனியா முகாம்களுக்குச் செல்ல அனுமதி அளித்தது. எமது நாட்டு பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்கோ மன்னாருக்கோ செல்ல அனுமதி தர பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கின்றது. இது குறித்துக் கேட்டால், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் செயற்படுகிறது என்றும் சர்வதேசத்திற்கு இலங்கை நிலைகுறித்து பல பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறது என்றும் எம்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. நாம் ஆட்சியில் இருக்கும் போதும் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் பயங்கரவாதத்தை எதிர்த்தே வந்துள்ளோம்.
யுத்தத்தினால் மட்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியாது. அரசியல் ரீதியான தீர்வே தேவை. அன்று வன்னியில் கட்டளை இடும் தளபதியாக இருந்த டென்சில் கொப்பெகடுவவும் இதனையே தெரிவித்திருந்தார். இன்று அவ்வகையான ஒரு தீர்வைக் கையாளவேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.யுத்தத்தினால் அல்லலுறும் மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்று கொடுத்து நாட்டில் சமாதானத்தை உருவாக்க அரசியல் தீர்வு ஒன்றினாலேயே முடியும் என அன்றும் ஐ.தே.க. தெரிவித்தது. இன்றும் அதனையே வலியுறுத்துகின்றது.” இவ்வாறு ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.