May

May

லண்டன் ‘சனல் – 4’ தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் நேற்று திருமலையில் கைது.

channel-4news.jpg வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்த பிரித்தானியாவைச் சேர்ந்த ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் திருகோணமலையில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர நேற்று சனிக்கிழமை இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை ‘சனல் – 4’ தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

செய்தியாளர் சபேரியின் மேல்முறையீடு மீது விசாரணை

rokchana.jpgஇரானில் சிறை வைக்கப்பட்டுள்ள இராக்கிய அமெரிக்க செய்தியாளரான ரோக்சானா சபேரியின் மேல்முறையீட்டு மனு ஞாயிறன்று விசாரணைக்கு வரவுள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தி இவருக்கு கடந்த மாதம் எட்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின் போது தங்கள் தரப்பு கால அவகாசம் கோரவிருப்பதாக சபேரியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம்

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகின்றது. சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் தவிப்பு

teliphone.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தொலைபேசி வசதிகளை அரசு பல மாதமாக துண்டித்து விட்டது. போர் உக்கிரமடைந்ததுவிட்டதன் காரணமாக புலிகளின் அனுசரணையுடன் நடத்தப்படும் செய்மதி தொலைபேசி வழியாக வன்னியில் இருப்பவர்கள் தமது உறவினர்களை தொடர்பு கொள்வதும் குறைந்து விட்டது. மற்றொரு புறம் வவுனியா முகாம்களில் இருப்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாத நிலையும் உள்ளது.

இதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் வசதிக்காக தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள் ஏற்கனவே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்கள் இருக்கும் பகுதியில் வங்கிக் கிளைகள் திறக்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வவுனியா முகாம்களுக்கு ஏராளமானோர் வந்துள்ள நிலையில் வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்

பாக். – அமெரிக்கா கூட்டு இராணுவ நடவடிக்கை

w_news.jpgபாகிஸ்தான் வடமேற்கிலிருந்து 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு பாகிஸ்தானின் வடமேற்கில் இருந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேறியுள்ளதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெ ரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சிவிலியன்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சீ. என். என். ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிலைமை எப்படி இருந்தாலும் தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடருமென பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடியினர் வாழும் பகுதியில் தலிபான் தீவி ரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. தலிபான்கள் மீது அமெ ரிக்க இராணுவம் ஏவுகணைகளை வீசியும் பீரங்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு வசிக்கும் மக்களை கேடயமாக வைத்து தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதில் 170 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ தாக்குதல் காரணமாக வட மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அகதிகளாக மலைகளிலும் காடுகளிலும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

ஆனால், மக்களை வெளியேற விடாமல் தீவிரவாதிகள் தடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இராணுவ நடவடிக்கை காரணமாக 2 இலட்சம் மக்கள் வெளியேறி விட்டனர். தற்போது மேலும் 3 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி வருவதாக ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நீடிக்கும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி அறிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் 45 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியையும் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியையும் குடும்பத்தோடு கொல்லப்போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தொலைபேசி மூலம் பேசிய தலிபான்களின் பேச்சாளரொருவர், “முஸ்லிம்கள் என்ற வகையில் போராட்டத்திற்கு உதவுவார்களென எதிர்பார்த்தோம். முடியவில்லை. இவர்களை பழிவாங்கியே தீருவோம்” எனக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையிலிருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

karunanithi.jpgஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதி முதல்வருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கூடமே முதுகு வலியும், தொண்டை வலியும் ஏற்படவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்தியாவின் மேற்குக் கரையூடாக நுழைய விடுதலைப்புலிகள் முயற்சிக்கலாம்: தீவிர கண்காணிப்பு.

indiannavyship.jpg இந்தியாவின் மேற்குக் கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழைவதற்கு புலிகள் முயற் சிப்பதாக இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய கடற்படைக் கொமடோர் வைஸ் அட் மிரல் எஸ். கே.டம்லே தெரிவித்துள்ளார். அதனால் மேற்குக் கடற்பிராந்தியத்தில் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்திய மேற்குக்கரையின் சகல பகுதிகள் ஊடாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவ இலங்கையர்களும் விடுதலைப்புலிகளும் முயற்சித்து வருகிறார்கள் என்று பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு முகவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் எப்படி இருந்தாலும் இந்தப் பிரச்சனை இன்று உருவானதல்ல. இந்தியாவுக்குள் ஊடுருவும் சாத்தியங்கள் எப்போதும் இருந்து வருகின்றன.

சட்டவிரோதமாக நுழையும் எந்த ஒரு முயற்சியையும் முறியடிக்கும் விதத்தில் நாங்கள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளோம். இந்தியக் கடற்பரப்பில் புலிகளின் எந்தவொரு கப்பலையும் நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை  என்றும் அந்த சிரேஷ்ட கடற்படை அதிகாரி  மேலும் கூறினார்.

இலங்கைக் கடற்படையினர் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தென்பிராந்திய கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் நேரடியான இடைத் தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் எஸ்.கே.டம்லே மேலும் சொன்னார். பனாஜியில் இந்தியக் கடற்படையின் “மண்டோவி” என்ற கப்பலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே வைஷ்அட்மிரல் டம்லே மேற்கண்டவாறு கூறினார்.

இனவாதிகளின் எதிர்ப்பால் இறக்குவானை இந்து கலாசார மண்டபமும் திறக்கப்படவில்லை

hinduism.jpgஇறக்குவானை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை “சித்திரா பௌர்ணமி’ தினத்தில் இந்து கலாசார மண்டபம் திறக்கப்படவிருந்த போதும் இனவாதிகளின் கடும் எதிர்ப்பால் அதுவும் திறக்கப்படவில்லை.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், அந்த உற்சவம் இப்பகுதி பெரும்பான்மையினத்தவர்களின் எதிர்ப்புக் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. “வெசாக் தினம்’ என்பதனால் அதனை நிறுத்துமாறு பெரும்பான்மையினத்தவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். வெசாக்தினம், சித்திரா பௌர்ணமி தினமாகும். இத்தினம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாள் என்பதனால் அதனை வழமை போல் கொண்டாட வேண்டுமென இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் வெசாக் தினத்தில் தேர்த்திருவிழா, வருடாந்த உற்சவம் நடைபெற்றால் பாரிய பின் விளைவு ஏற்படுமென பெரும்பான்மையினத்தவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆலய நிர்வாகிகளைத் தனது அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடி அவர்களின் வேண்டுகோளுக்கமைய சித்திரா பௌர்ணமியில் (வெசாக் தினத்தில்) கோயிலில் விசேட பூஜை நடத்துவதுடன் இறக்குவானையில் அமைக்கப்பட்ட இந்து கலாசார மண்டபம் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கலாசார மண்டபமும் திறக்கப்படக்கூடாதெனப் பெரும்பான்மையினரால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த அமைச்சர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்து இந்து மற்றும் பௌத்த அமைப்பினரை ஒரே நேரத்தில் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை இறக்குவானை கஸ்தூரி மண்டபத்தில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், மாகாண அமைச்சர் ரஞ்சித் டி சொய்சா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி.இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இந்து அமைப்புகளும் கோயில் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர். இதன்போது சகலரின் கருத்துகளையும் செவிமடுத்த அமைச்சர்கள் கலாசார மண்டப திறப்புவிழாவை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

நாட்டில் சமாதானம் ஏற்படும் இவ்வேளையில் சிறு சிறு விடயங்களுக்காக குழப்பங்கள் ஏற்பட அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர்கள் தமது குறுகிய சுயநலப்போக்கினைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டனர்.

இதன்மூலம் காலாகாலமாக நடைபெற்று வந்த வருடாந்த உற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் கலாசார மண்டபத் திறப்புக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

இலங்கையின் வடக்கில் இருந்து 2 லட்சம் பேர் இடம்பெயர்வு – ஐ.நா

_mullai_1.jpgஇலங்கை யின் வடக்கே மோதல் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இதுவரையில் சுமார் 2 இலட்சம் பேர் இடம்யெபர்ந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் இவர்களில் 1741 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் எனவும் கூறியிருக்கின்றது.

வவுனியா மனிக்பாம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கென அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் 300 கூடாரங்கள் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவ உதவி நிறுவனம் இந்தப் பகுதியில் சுகாதார அமைச்சின் அனுமதியோடு வெளிக்கள மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் தெரிவித்திருக்கின்றது.

இந்திய நிவாரணங்கள் வவுனியா அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கையளிப்பு

chals_.jpgஇந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இந்திய அதிகாரிகளால் வவுனியாவில் கையளிக்கப்பட்டன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் செட்டிக்குளத்தில் வைத்து இதனைப் பெற்றுக் கொண்டார்.

ஏழுலொறிகளில் எடுத்தி வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் உணவு வகைகள், உடுபுடவைகள், சமையல் பாத்திரங்கள் அடங்கியிருந்ததென அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கக்கூடிய வகையில் நிவாரணப் பொருட்கள் பொதி செய்யப்பட் டிருந்தன.