இலங்கை யின் வடக்கே மோதல் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இதுவரையில் சுமார் 2 இலட்சம் பேர் இடம்யெபர்ந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் இவர்களில் 1741 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் எனவும் கூறியிருக்கின்றது.
வவுனியா மனிக்பாம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கென அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் 300 கூடாரங்கள் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவ உதவி நிறுவனம் இந்தப் பகுதியில் சுகாதார அமைச்சின் அனுமதியோடு வெளிக்கள மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் தெரிவித்திருக்கின்றது.