May

May

ஐ.பி.எல்:டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்

ipl-2009-01.jpg
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) இரவு நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த மாதம் 18 ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய 2 வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்று நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த முறை 7 வது இடம் பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கடைசி (8 வது) இடம் பெற்ற ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் மோதியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்னுடனும், ஹாரிஸ் 5 பந்துகளில் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய, அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அமர்வு இன்று ஜெனீவாவில் – அமைச்சர் மஹிந்த சமரசிங்க பங்கேற்பு

mahinda_samarasinghe.jpgஇலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசேட அமர்வில் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (25) கலந்துகொள்கின்றனர்.

ஜெனீவாவில் நடைபெறும் இவ்விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனீவா புறப்பட்டுச் சென்றனர். ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்கவும் இந்த அமர்வில் கலந்துகொள்ளவிருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்புரிமை நாடுகளுக்கு விளக்கமளிப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக இவ்வமர்வு அமைந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 48 உறுப்புரிமை நாடுகளுள் விசேட அமர்வொன்றைக் கூட்டுவதற்கு மூன்றில் ஒன்று அதாவது ஆகக் குறைந்தது 16 நாடுகளின் கையொப்பங்கள் தேவை. கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஆர்ஜன்டீனா, பொஸ்னியா, சிலி, பிரான்ஸ், நெதர்லாந்து, மெக்சிகோ, மொரீஷியஸ், சுவிற்சர்லாந்து, உருகுவே உள்ளிட்ட 17 நாடுகள் கேட்டுக்கொண்டதற்கமைய ஜெனீவாவில் இன்று (25) இலங்கை விவகாரம் தொடர்பிலான விசேட அமர்வு நடத்தப்படுகிறது.

இந்த அமர்வில் பங்குபற்ற எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நாம் சாதகமாக பயன்படுத்துவோம். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளுக்கும் விளக்கிக் கூறுவதன் மூலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீளக்குடியமர்த்துவதற்கும் மோதல் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அந்நாடுகளின் உதவிகளை பெறுவோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

ஐ.நா.தலைமைச் செயலரை சந்திக்க அனுமதி மறுப்பு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

sureshpremachandran.gifஇலங்கை வந்திருந்த ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களைச் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  முன்னர் குறித்த நேரத்தில் ஐ.நா. தலைமைச் செயலரை சந்திக்க அவரது பயண ஏற்பாடுகள் இடம்தராது போனதால், அவர் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் அவரைச் சந்திக்க வெளியுறவு அமைச்சு மூலம் தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்ததை அடுத்து தாங்கள் சந்திக்க முடியாமல் போனது என்றும் திமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.தலைமைச் செயலரைச் சந்திப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தது, அந்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டதன் பின்பு விமான நிலையத்தில் தலைமைச் செயலரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்று இலங்கை பாதுகாப்புதுறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கடும்காற்று; கடல் சீற்றம்; எச்சரிக்கை

rain.jpgவங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த தாழமுக்கம் நேற்று முதல் இலங்கைக்கு அப்பால் நகர்ந்துசெல்ல ஆரம்பித்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி.டி. ஆனந்த பெரேரா நேற்று தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி என்பன காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்களில் இலங்கையைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடனும், மிகுந்த அவதானத்துடனும் நடந்துகொள்ளுவது அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையை விட்டகன்று நகர்ந்துகொண்டிருக்கும் இத் தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது என்றும், அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இத்தாழமுக்கம் நிலப் பகுதியைச் சென்றடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :

வங்காள விரிகுடாவில் சில தினங்களுக்கு முன்னர் உருவான தாழமுக்கம் நேற்று முதல் இலங்கைக்கு அப்பால் தூரே நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. என்றாலும் இத்தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். தற்போதைய நிலையில் இத்தாழமுக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய கட்டத்தில் இல்லை என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு 50 கோடி ரூபா மருத்துவ உதவி

medicine.jpgஇலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 கோடி ரூபா மதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை அமெரிக்காவின் “டிரக்ட் ரிலீப் இன்டர்நேஷனல்’ தன்னார்வ அமைப்பின் மூலம் அனுப்ப ஸ்ரீ நாராயணி பீடம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

“ஸ்ரீநாராயணி பீடத்தின் சார்பில் ஆன்மிகப் பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பீடத்துக்கு உலக நாடுகள் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் இந்த பணிகளுக்கு உதவி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து டிரக்ட் ரிலீப் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச திட்ட அமைப்பாளர் மேட் மெக்காலா பீடத்துக்கு தரிசனத்துக்காக வந்தார்.

பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யும் பணியை இந்த சேவை நிறுவனம் செய்து வருகிறது.  அவரிடம் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கோரினோம். அவர் முறைப்படி அந்த நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பக்கோரிக்கேட்டுக் கொண்டார்.  அதன்படி நாங்கள் கடிதம் அனுப்பியதும் உடனடியாக ஒரு இலட்சம் பேருக்கான அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

சுமார் 50 கோடி ரூபா மதிப்பிலான இந்த மருந்துகளை இலங்கையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்ய இலங்கையில் உள்ள சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபாலஹேரத், சமுதாய மேம்பாட்டு கட்டுமானத்துறை பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டோம்.

இதில் முத்துசிவலிங்கம் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசி ஒப்புதல் பெற்றுள்ளார். இதற்கான முறையான நடைமுறை உத்தரவுகள் கிடைத்ததும் முதல் கட்டமாக 25 ஆயிரம் பேருக்கான மருந்துகள் அமெரிக்காவிலிருந்து நேரடியாக விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும். 75 ஆயிரம் பேருக்கான மருந்துகள் கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை நேரடியாக ஒப்படைக்க நாம் இலங்கைக்கு செல்ல உள்ளோம். இலங்கை அரசு அனுமதி கிடைத்த ஓரிரு நாட்களில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் ஆசியும் வழங்கி திரும்புவோம்.

கொடுக்கப்படும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்க டாக்டர்கள் தேவை என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டால், ஸ்ரீநாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம் மூலம் தேவையான டாக்டர்களை அனுப்பி வைக்கவும் தயாராக உள்ளோம். உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு சில அடிப்படை விதிகள் உள்ளன. அதனடிப்படையில் உதவக்கூடிய பல அமைப்புகளை தொடர்பு கொண்டு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ உதவி முதலில் அந்த மக்களுக்கு கிடைக்கட்டும், பின்னர் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை செய்யலாம்’.

எரித்திரியாவை தடை செய்யுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

somaliaauforce.jpg எரித்திரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தண்டனைத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தனது உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

சோமாலியாவின் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எரித்ரியா ஆயுதங்கள் வழங்கிவருவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. சோமாலியாவில் இடைகால அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆப்பிரிக்க ஒன்றியம் நான்காயிரம் துருப்பினரை பணியமர்த்தியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை எரித்ரியா மறுத்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் ”திறனற்ற மற்றும் வலிமையற்ற ஓர் அமைப்பு” என்று கூறி அதனைப் புறக்கணித்துள்ள எரித்ரிய தகவல் தொடர்பு அமைச்சர் அலி அப்து, எரித்ரியா அவ்வமைப்பிலிருந்து தனது உறுப்புரிமையை இடைநிறுத்திக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சோனியாவுக்கு விசேஷ கைத்தறி சேலை; மம்தா பானர்ஜி வழங்கினார்

mamta-banerjee.jpg டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு மேற்கு வங்காளத்தின் பிரசித்தி பெற்ற டோனேகாலி கைத்தறி சேலை ஒன்றை பரிசாக வழங்கினார்.

வெளிறிய நிறம் கொண்ட இந்த கைத்தறி சேலையை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் நாளன்று அணிந்து கொண்டு வருமாறும் சோனியாவிடம் அப்போது மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்துக்கு இந்த கைத்தறி சேலையை சோனியா அணிந்து வந்தால் டோனேகாலி ரக சேலைகள் மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதி பெண்களையும் ஈர்க்கும். இதன் மூலம் நலிவடைந்துள்ள மேற்கு வங்க கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் வீரமரணச் செய்தியை அடுத்து புலிகளுக்குள் பிளவு! : த ஜெயபாலன்

LTTE LOGOPirabakaran_Vபுலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?

இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.

ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.

இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

வவுனியா செயலகத்தில் இன்று உயர்மட்ட மாநாடு

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்களுடைய தேவைகள் குறித்த உயர்மட்ட மாநாடு இன்று திங்கட்கிழமை காலை வவுனியா செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட சகல திணைக்களங்களின் முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு படையினர் இந்த மகாநாட்டில் கலந்து கொள்வர்.

காலை 11 மணிக்கு மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் குறைபாடுகள், இன்னும் பல விடயங்கள் இந்த மகாநாட்டில் ஆராயப்படுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறி வர்த்தகர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்

telephone.jpgதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளரான காலம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறும் ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தொலைபேசிமூலம் பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகர்கள் முக்கியஸ்தர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் இந்நபர் தான் அமிர்தலிங்கத்தின் மகன் எனவும் தான் லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி பணம் தரவேண்டுமென அச்சுறுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை லண்டனிலிருந்து தொடர்பு கொண்ட அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையர்க்கரசி தனது இருமகன்களும் லண்டனிலேயே இருப்பதாகவும் அவர்களுக்கும் இந்த பணம் கேட்கும் சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தனது மகனெனக் கூறி வேறு எவரோ பணம்பெற முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.