
புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.
இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.
புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.
தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?
இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.
ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.
இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”
இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.
இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.