வங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த தாழமுக்கம் நேற்று முதல் இலங்கைக்கு அப்பால் நகர்ந்துசெல்ல ஆரம்பித்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி.டி. ஆனந்த பெரேரா நேற்று தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி என்பன காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்களில் இலங்கையைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடனும், மிகுந்த அவதானத்துடனும் நடந்துகொள்ளுவது அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையை விட்டகன்று நகர்ந்துகொண்டிருக்கும் இத் தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது என்றும், அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இத்தாழமுக்கம் நிலப் பகுதியைச் சென்றடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :
வங்காள விரிகுடாவில் சில தினங்களுக்கு முன்னர் உருவான தாழமுக்கம் நேற்று முதல் இலங்கைக்கு அப்பால் தூரே நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. என்றாலும் இத்தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். தற்போதைய நிலையில் இத்தாழமுக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய கட்டத்தில் இல்லை என்றும் கூறினார்.