புலிகள் ஒரு புரட்சிகர அமைப்பாக இல்லை எனவும் இவர்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க முடியாதவர்கள் அல்லது சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றும் பலர் கருத்துக்களை முன்வைக்கிறனர். கடந்த காலங்களில் எப்படி அறப்போர் செய்த அமைப்புக்கள் அதனைத் தொடர்ந்து முன்னேற்ற முடியாமல் போய் அந்த அமைப்புக்கள் இயற்க்கை எய்தியதோ அதேபோல் புலிகளினால் தொடரப்பட்ட 30 வருட ஆயுதப் போரும் தொடர்ந்து முன்னேற முடியாத நிலைக்கு வந்தள்ளது. இதனை உணர்ந்து அடுத்த சந்ததியினர் தொடரும் புதிய பாதைளை திறக்கும் வழிமுறைக்கு இடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமைகளை புலிகள் உணர்ந்து செயற்ப்பட வேண்டும். அது புலிக்கொடியை அவர்களிடம் கொடுத்துச் செல்வது என்று அர்த்தமாகாது.
கடந்த கால தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை புலிகள் செய்துள்ள போதிலும் மிகவும் பாரதூரமானதும் தமிழர்களின் போராட்டத்தை அஸ்த்தமிக்கும் நிலைமைக்கு கொண்டுவரக் கூடிய தவறுகளையும் புலிகள் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல அப்படியாக புலிகளினால் செய்யப்பட்ட தவறுகளுக்கு இன்று வரையில் எந்தவித பிராயச்சித்தங்களும் மேற்கொள்ளப்படாததும் தவறாகிவிட்டது.
இத் தவறுகள் தமிழ்பேசும் மக்களை இன, பிரதேச, சாதிய, இயக்க, அரசியல் வேறுபாடுகளை முனைப்புப்படுத்தி தமிழர்கள் தமிழ்பேசும் மக்களை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. வெவ்வேறு அரசியல் முகாம்களுக்குள் தள்ளியுள்ளது. எதிரியை பலப்படுத்தி உள்ளது.
இன்றுள்ள தோல்வி நிலைமைகளில் இருந்து தமிழ்பேசும் தமது பாரம்பரிய பிரதேசங்களில் தொடர்ந்து நிம்மதியாக வாழவும் புதிய சந்ததியினர் தொடர்ச்சியாக தமது புதிய பாதையை தெரிவு செய்து சுயநிர்ணயப் போராட்டத்தை தொடரவும் இன்று புலிகள் மிக முக்கியமான அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
புலிகளின் கடந்த கால சகோதர இயக்க அழிப்பு, இலங்கை-இந்திய ஒப்பந்த எதிர்பு, இந்திய விரோதப் போக்கு, ஏகபோக பிரதிநிதித்துவம் போன்ற அரசியல் விவேகமற்ற தன்மைகளே புலிகளின் இன்றய நிலைமைகளுக்கு காரணமாகியுள்ளது. கிடைக்கப் பெற்ற பல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, கட்டம் கட்டமாக சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நோக்கி கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் புலிகளின் விவேகமற்ற இராணுவ நடவடிக்கைகளும் அரசியலற்ற சுத்த இராணுவப் போக்கும் அவர்களுக்கு இன்று வினையாகி உள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டதோ அதே போன்று அந்த மக்களுக்காக அந்த மக்களின் நலனுக்காக இன்று அந்த மக்களுக்கு இந்த ஆயுதங்கள் அழிவை ஏற்படுத்தும் போது அந்த ஆயுதங்களை கீழே போடவும் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். ஆயுதங்கள் தேவைப்படும் போது பாவிப்பதற்கே அன்றி ஆயுதங்கள் இன்றி போராட முடியாது அல்லது வாழ முடியாது என்ற நிலை உருவாகக் கூடாது. ஆயுதங்கள் அல்ல முக்கியம். மக்களே பிரதானமானவர்கள். அந்த போராடும் மக்கள் ஆயுத வன்முறையால் தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து வன்முறையாக வெளியேற்றப்படுவதும் அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதம் மக்களின் விருப்பத்திற்கு முரணாக விரோதமாக செயற்படுவதும் மக்களுக்கான போராட்டமல்ல. மாறாக இது பயங்கரவாதமே. இதை யார் செய்தாலும் வரலாறு மன்னிக்காது.
மக்களின் போராட்டத்தை வென்றெடுப்பதை மையமாக கொண்டு செயற்ப்பட்டிருக்க வேண்டியவர்கள் தமது இயக்கத்தையும், தலைமையையும், இராணுவ நடவடிக்கைகளையும் முதன்மைப்படுத்தி செயல்ப்பட்டதினால் தற்போது தங்களுக்கு இருந்த மக்கள் பலத்தை கோட்டை விட்டுள்ளதாகவே எண்ணத் தோண்றுகின்றது. தங்களை மறுசீரமைக்க இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.
வன்னி மக்கள் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. புலிகளின் ஆயுதங்களும் மக்கள் தப்பிப் போய் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. இப்படியாக தப்பிப் போனவர்கள் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் ஊனமுற்று உள்ளனர். இந்தப் புலிகளின் ஆயுதங்கள் தமிழர்க்கு எதிராக மீண்டும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. எந்த மக்களின் உரிமைக்காக போராட ஆரம்பித்தனரோ? எந்த மக்களின் உழைப்பில் இயக்கம் உருவானதோ? எந்த மக்களின் உழைப்பில் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனரோ? அந்த மக்ளையே புலிகள் கொலை செய்ததை, இந்த கேவலமான நடத்தையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
மக்களுக்காக ஆயுதங்களை ஏந்தினோம் என்று சொன்ன புலிகள் அந்த மக்களை சுட்டுக்கொன்று விட்டு எப்படி இனிமேல் இந்த ஆயுதங்களுடன் அந்த மக்களுக்காக போராட முடியும். புலிகள் யாருக்காகப் போராடினர் என்பதே இப்போது கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதுடன் புலிகளிடம் உள்ள இந்த ஆயுதங்கள் மக்களுக்கு எதிரானவைகள் என்பதையும் நிரூபித்துள்ளது.
விடுதலைப் போரட்டம் புலிகள் இயக்கத்தினரால் மட்டும் முன்னெடுக்கப்பட்டதென்றோ அல்லது தொடர்ந்தும் அவர்களின் தலைமையில் தான் நடாத்தப்பட வேண்டும் என்றோ நினைப்பது அல்லது அதற்காக செயற்படுவது அர்த்தமற்றது. எப்போது சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு காலத்தால் செயல் இழந்து போனதோ, பின்னர் எப்படி ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டதோ அதேபோல இன்று இந்த ஆயுதப் போரட்டம் வேறு ஒருவடிவத்திற்கு போக வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. புதிய பாதையை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இங்கு சிந்தித்து செயற்ப்பட வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியுள்ளது.
பிராந்திய நலனின் ஈடுபாடு கருதியும் பிராந்தியத்தில் பெருந்தொகையான தமிழர்கள் உள்ள இந்தியாவின் – இந்திய சார்பு நிலை தவிர்க்க முடியாததும் இயற்கையானதுமாகும். எந்தவொரு நாடும் இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும். நோர்வேயை எதிர்கால நடவடிக்கைகளில் இருந்து மிகச் சாதுரியமாக இந்தியா ஓரம்கட்டியுள்ளது. மேலும் புலிகள் ஒன்றும் புரட்சிகர அமைப்பு அல்ல. அதனால் அவர்களிடம் இந்தியாவையோ வல்லரசுகளையோ அரசியல் ரீதியாக கையாளும் அரசியலும் இவர்களிடம் இல்லை. புலிகள் அமெரிக்கா உட்பட எந்த அரசுடனும் உறவுகளைப் பேண விரும்புகின்ற அமைப்பு. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறி இந்தப் பின்னடைவைச் சந்தித்தற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இருக்க முடியும்.
புலிகளும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் பிராந்தியத்தை முதன்மைப்படுத்தி பிராந்தியத்தின் பங்காளிகளாக மாற முயற்ச்சிக்க வேண்டும். இதன் ஆரம்பப் படியாக ரிஎன்ஏ யினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவுடனான பேச்சுக்களில் இருந்து இதை ஆரம்பிப்பதும் பொருத்தமானதாக இருக்கும்.
புலம் பெயர்நாடுகளில் மக்களுக்காகவென நடாத்தப்படும் போராட்டங்கள் மக்ளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை இராணுவத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மையமாக வைத்து நடாத்தப்பட வேண்டியது அவசியம். தனி மனிதர்களையும் இராணுவ இயக்கத்தையும் முதன்மைப்படுத்தி போராட்டங்கள் செய்வது கடந்த கால தவறிப்போன போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும். புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் போராட்டங்கள் புலிகளுக்காக அல்லாது தமிழ்பேசும் மக்களுக்கானதும் சிறுபான்மையினருக்குமான போரட்டமாக மாற்றம் பெற வேண்டும்.
சர்வதேசங்களில் உள்ள சிறுபான்மையினர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பததன் மூலமும் அந்த சர்வதேச போரட்டங்களின் பகுதியாக எமது உரிமைப் போராட்டம் நிரந்தரமாக வென்றெடுக்க முடியும்.