14

14

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஒளிக்கதிர்கள் நாடெங்கும் வீசட்டும் – பிரதமர்

pm-srianka.jpgமக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி சமாதானத்தின் ஒளிக்கதிர்களை நாடுமுழுவதிலும் பரவச் செய்து பிறக்கும் சிங்கள, தமிழ் புத்தான்டினை ஏனைய காலங்களை விடவும் இம்முறை மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிய பயங்கரவாதமானது நிரந்தரமாக இல்லாதொழிவதைக் காண்பதே அனைத்து இலங்கைவாழ் மக்களினதும் பிரார்த்தனையாக அமைந்தது. உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இவ்வாறு கொண்டாடுவதற்கு வழியமைத்துத் தந்தவர்ள் எமது வீரமிக்க இராணுவத்தினரே. இவர்களின் உயிர்தியாகத்துடன் கூடிய பணியை சிறிதும் மறந்துவிட முடியாது. வீரமிக்க இராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்பிவிட்டு உறுதியற்ற அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள், இராணுவத்தினரின் மனைவி, மக்கள் அச்சமின்றி மன அமைதியுடன் இருப்பதற்குக் கிடைத்துள்ளமையானது இம்முறை புத்தாண்டின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.

பயங்கரவாதிகள் காட்டிய போலியான எல்லைகளில் சிக்குண்டு காணப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை உண்மையான முறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் பேதங்களின்றி அனைத்து மக்களும் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறந்ததொரு எதிர்காலத்தை அடைவதற்கான வழி பிறந்துள்ளது.

கிழக்கிலே பயிரிடப்பட்ட நிலங்களிலிருந்து சிறந்த அறுவடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பயிரிடாதுள்ள வடக்குப் பிரதேச நிலங்கள் நாளை பயிரிடும் நிலங்களாக மாறும். அப்போது மிகவும் செழிப்புள்ள நாடொன்றை வருங்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது சகலருக்கும் சமாதானம், மகிழ்ச்சி பொருந்திய இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

சுபீட்சம், புத்தெழுச்சி கொண்டுவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்

mahinda-rajapaksha.jpgநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான புதியதோர் உதயத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் எமது மக்களுக்கு சுபீட்சத்தையும் புத்தெழுச்சியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புது வருடத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மகிழ்ச்சிபொங்கும் இன்றைய தினத்தில் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் உள்ள எமது மக்கள் தேசம் முழுவதற்குமான ஒரு புதுவசந்தத்தை முன்னறிவிப்புச் செய்யும் புத்தாண்டின் மரபுகளை கடைபிடிக்கின்றனர். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுபட்டு சுதந்திரத்தை அனுபவிக்கும் கிழக்கு வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் சுதந்திர உணர்வோடும் சேர்த்து பால்பொங்கவைக்கும் தமது பாரம்பரிய மரபுடன் இப்புதுவருடத்தை வரவேற்கின்றனர். அதேபோன்று வடபகுதி மக்களும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சத்திற்கும் சுதற்திரத்திற்குமான சாதகமான அடையாளங்களை இப்புதுவருடத்தில் காண்பர்.

இப் புதுவருடம் எமது மக்களிடடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் மேலும் பலப்படுத்தி புதிய நம்பிக்கைகளை கொண்டுவரும் அர்த்தம் நிறைந்த பெருநாளாக இருக்கும். இது எமது அரசாங்கமும் எமது மக்களும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சமாதானத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அர்ப்பணிப்புகளின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது.

புலரும் புத்தாண்டு எமது தேசத்திற்கு சமாதானத்திற்கான புதியதோர் உதயத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதோடு உலகின் கெளரவத்தையும் நன்மதிப்பையும் எமது நாட்டுக்குக்கொண்டுவரும். எமது மக்கள் புதுவருடத்தின் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பேணுவதன் மூலம் ஏற்படுகின்ற ஐக்கியம், சகோதரத்துவம் என்பன நாட்டின் சுபீட்சத்திற்கு வழியமைக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பை மதித்து இம்முறை புதுவருடத்தை சம்பிரதாயபூர்வமாக பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய விடுமுறை தினமான இந்த புதுவருட பண்டிகைத் தினத்தில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினர். பொலிஸார் மற்றும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்!

சீனாவில் மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம்

சீனாவில் முதல் முறையாக அந்நாட்டின் அமைச்சரவை மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது இருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வலுப்படுத்தி மேலும் விரிவுபடுத்தவும், இனரீதியான் சிறுபான்மையினர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்களுக்கான இவ்வகையான உரிமைகள் கூடுதலாக கிடைக்கவும், இந்த இரண்டு ஆண்டு கால செயற்திட்டம் உறுதி பூண்டுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டத்தின்படி, அரசின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்கிற பயமில்லாமல், உள்ளளூர் அரச அமைப்புகளை விமர்சிக்க மேலோங்கிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. மேலும் காவல்துறையின் சித்திரவதை மற்றும் அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த செயற்திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகவே சீனாவின் கம்யூனிஸ அரசு அடிப்படை மனித உரிமைகளை விட, பொருளாதார சீர்திருத்தத்தையே முக்கியமாக கருதி முன்னெடுத்து வந்துள்ளது என்று சீனாவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வந்துள்ளனர்.

சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: அத்வானி

advanil000.jpgகேரளாவில் பிரசாரம் செய்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி காங்கிரஸ் தலைவர் சோனியா ‌தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். அத்வானி சோனியாவின் விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக ஜார்கண்டில் ‌பேசிய சோனியா, வெளியில் இருந்து வரும் பயங்கரவாதிகளை விட, உள்நாட்டில் இருக்கும் சில மதவாத சக்திகள் மிகவும் அபாயகரமானவை என கூறியிருந்தார்.

சோனியா யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் , அது பா.ஜ., வை குறிவைத்து பேசப்பட்டது என அத்வானி குற்றம் சாட்டினார். சோனியா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரது கருத்து குறித்து பொது விவாதத்துக்கு தயாராக வேண்டும் என கூறினார் அத்வானி . நான்காவது அணி குறித்து பேசிய அத்வானி அது சந்தர்ப்பவாத கூட்டணி என சாடினார்.

அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி

karuna1.jpgபிறக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டில் அனைத்தின மக்களிடையேயும் இன, ஜக்கியம் இனஒருமைப்பாடு என்பவற்றை ஏற்படுத்தி நிலையான சமாதானமும் சகோதரத்துவமும் ஏற்ப்பட்டு எம் இலங்கைத் திருநாட்டில் புதியதோர் மாறுதலை உண்டு பண்ண வழிவிடட்டும். வன்னிப் போரின் அவலநிலை காரணமாக அகதிகளாக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள என் இனிய உறவுகள் கூடிய விரைவில் தங்களுடைய வாழ்விடங்களுக்குச் சென்று நிம்மதியான வாழ்வை நாடத்த மலரும் புத்தாண்டு வழிசமைக்கும் என்பதில் திடமான உறுதி கொண்டுள்ளேன்.

நாட்டில் தடம்புரண்டு நிலைகுலைந்து கிடந்த இனஜக்கியம் ஒருமைப்பாடு புரிந்துனர்வு என்பவற்றை மீண்டும் ஓர் எழுச்சி நிலைக்கு இட்டு செல்ல என்குகோர் சந்தர்ப்பத்தினை அளித்த கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு இம் மலரும் புத்தாண்டில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எமது நாட்டில் புரையோடிப் போயுள்ள அனைத்து இனமுரன்பாடுகளும் அனைத்து மக்களையும் சாதி மத பேதமின்றி வெகுவாக பாதித்துள்ள நிலை தளர்ந்து புதியதோர் பேதம் அற்ற சமூகத்தினை தோற்றுவிக்க மலரும் புத்தாண்டு வழி விடட்டும்.

எம் தேச மக்களுக்கு மலரும் புத்தாண்டு அமைதி, சமாதானம், அபிவிருத்தி எனும் உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்க வழியமைத்துக் கொடுக்கும் என்பதில் அனைத்து மக்களும் உறுதி பூணுவோம். சிதைந்து போய் கிடக்கும் எமது நாட்டை கடடியெழுப்பும் வேலைத்திட்டத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற கரம் நீட்டி எழுவோம்.