05

05

பாடசாலைகளில் தவக்கால வழிபாடு: கல்வி அமைச்சு சுற்று நிருபம்

பரிசுத்த வாரத்தில் பாடசாலைகளில் தவக்கால வழிபாடுகளை மேற் கொள்ள கல்வியமைச்சு அங்கீகாரமளித்துள்ளது. கத்தோலிக்க மாணவர்கள் 15 பேர் இருப்பார்களானால் அங்கு இவ் வழிபாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க மக்கள் அனுஷ்டிக்கும் தவக்காலத்தின் பரிசுத்த வாரம் இன்று குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகிறது. இதனையொட்டி மேற்படி அங்கீகாரத்தை கல்வியமைச்சின் செயலாளர் எம். எம். என். டீ. பண்டார வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சின் கத்தோலிக்க சமய ஆலோசனைச் சபையின் அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணங்கவே இவ் வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2009/08 ஆம் இலக்கமுடைய சுற்று நிருபத்தினையும் இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

நிவாரண கிராமங்களுக்கு தொலைபேசி வசதி: ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி நன்றி தெரிவிப்பு

ஈ. பி. டி. பி.யின் கோரிக்கைக்கு அமைய வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் 26 கோரிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியா இணைப்பாளர், தேசநிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இந்த நிலையில் தனது கோரிக்கையை ஏற்று நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்தமைக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதே போல, ஏனைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி செயற்படுத்துவாரென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று தன்னைச் சந்தித்த பொதுமக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

நேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளர் டென்மார்க் பிரதமர்

nato_hq.jpgநேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளராக டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்முஸன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ளார்.

இவருடைய நியமனத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. டென்மார்கில் நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியானது மற்றும் டென்மார்கில் குர்து இன ஆதரவு தொலைக்காட்சி நிலையம் செயற்படுவது போன்ற விடயங்களில் இவர் மீது துருக்கிக்கு அதிருப்தி உள்ளது.

எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து துருக்கியின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தற்போதைய நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.