Multiple Page/Post

தொழிற் சங்கங்கள் அசமந்தம் அடுத்த வாரம் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சங்கங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மூழ்கிவிட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய அமைப்புகள் கைச்சாத்திட்டு வருகின்றன.

இந்தச் சங்கங்கள் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை உயிர்ப்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் 261 வாகனங்கள் நேற்று மடு பிரதேசத்தினுள் பிரவேசம்

madu_church.jpgமடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ரயில் சேவைகள் நேற்றுக் காலை முதல் ஆரம்பமாகின. முதலாவது ரயில் நேற்றுக் காலை 7.45க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதேவேளை நேற்று மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒருமணி நேரத்துள்ளேயே 261 வாகனங்கள் மடு தேவாலய பகுதிக்குள் சென்றதாக தேவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகள் அமைச்சர் சரத் குமார குணரட்ண அவரது பாரியார் சகிதம் மடு புறப்பட்டுச் செல்லும் முதலாவது ரயிலில் பயணித்தனர். நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை புறப்பட்டுச் செல்லும் யாத்திரிகர்களுக்கும், ரயிலுக்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டதுடன் மடு மாதா மீதான துதிப்பாடல்களும் பாடப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்தும் நேற்று விசேட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. நாளை காலை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45க்கும், 6.05க்கும், 8.45க்கும் பகல் 1.45க்கும் மாலை 4.20க்கும் இரவு 10.00 மணிக்கும் விசேட ரயில்கள் புறப்படுகின்றன.

குடாநாட்டிற்கு 6 மாதத்துக்கு தேவையான சீமெந்து தயாரிக்கக்கூடியளவுக்கு கிளிங்கர்

காங்கேசன்துறை லங்கா சீமெந்துத் தொழிற்சாலையில் தற்போது சுமார் 38 ஆயிரம் மெற்றிக்தொன் கிளிங்கர் இருப்பதாகவும் இதனை அரைக்கும் பட்சத்தில் சுமார் 6 மாத காலத்துக்கு யாழ்.மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமெனவும் லங்கா சீமெந்து நிறுவனப் பொறுப்பதிகாரி பி.விமலநாதன் தெரிவித்துள்ளார்.  சீமெந்துத் தொழிற்சாலையில் 19 வருடங்களுக்கு மேலாக இருப்பில் இருந்த கிளிங்கரின் மாதிரி பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டபோது அவை பாவிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்கும் பட்சத்தில் சுமார் 7 1/2 லட்சம் சீமெந்துப் பைக்கற்றுகள் பொதி செய்யலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சீமெந்து நிறுவனத்தை அடுத்த வருட முற் பகுதியில் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் இந்த கிளிங்கர் அங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணக் கிராமங்களில் 4500 அரசாங்க ஊழியர்கள் பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் மீளச் சேவையில் இணைக்க முடிவு -சரத் அமுனுகம

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும்போது பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடனேயே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

மேற்படி ஊழியர்களில் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறுமட்டத்தினர் உள்ளனர். அவர்கள் வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்தவர்கள் என்பதால் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் அவர்கள் விசாரணை செய்யப்பட்டு அதன் அங்கீகாரத்துடனேயே மீள சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 4500 அரச ஊழியர்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.

வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை யின் கீழ் இவர்கள் மீள அவர்கள் வகித்த பதவியில் நியமிக்கப்படுவர். எனினும், அவர்கள் பாதுகாப்பமைச்சினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவ்வமைச்சின் சான்று ப்படுத்தலுடனேயே மீளச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவற்றுள் சிலர் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி காலமானார்

nalin.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜி. டி. ஜி. நளின் செனவிரத்ன தனது 78 வது வயதில் நேற்றுக்காலை காலமானார். இலங்கை இராணுவத்தின் 10 வது தளபதியாக கடமையாற்றிய இவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

1953 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம்திகதி இரண்டாவது லெப்டினன்டாக இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் (1958) கெப்டன், (1963) மேஜர், (1971) லெப்டினன்ட் கேர்ணல், (1977) கேர்ணல், (1981) பிரிகேடியர், (1985) மேஜர் ஜெனரல் என்று தரமுயர்த்தப்பட்டார்.

இராணுவத்தின் பல முக்கிய பதவிகளை வகித்த இவர் 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தின் 54 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருக்கும் காலத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு பெப்ரவரி 11ம் திகதி இராணுவத்தின் 10 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் செனவிரத்ன 1986 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

2007 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

“அகதிகளாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதிதிகளாகச் சென்று குடியேறவேண்டும்’

அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் செல்வதற்கான வாய்ப்பை யாழ்.மாநகர சபைக்கு ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளதாக யாழ்.மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.எம்.றமீஸ் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது கூறினார். இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் யாழ்.முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டம் ஓய்வுபெற்ற ஆசிரியர் உமர்தீன் தலைமையில் பெரியமுல்லை றசாத் மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி றமீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஒன்றிணைந்து சரியான முறையில் வியூகத்தை அமைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியதனால் வாக்குகள் சரியான முறையில் பாவிக்கப்பட்டு ஐ.ம.சு.மு. வில் போட்டியிட்ட 4 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சைக் குழுவிலும் ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகர சபைக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.

சிறிய சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும். முஸ்லிம்களின் வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி அமைக்க முடியும் என்ற செய்தியை தெரியப்படுத்தியுள்ளோம். தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் சொந்த மண்ணான யாழ்ப்பாணம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளான்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியே நாட்டின் நாலாபாகங்களிலும் சிதறி வாழும் யாழ்.முஸ்லிம்களில் எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலருக்கும் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாக்களிக்காவதர்களுடன் கோபிக்கமாட்டேன். அரசியலில் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். இவற்றை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

“செடோ’ அமைப்பின் செயலாளர் அஜ்மல் பேசும்போது;

யாழ்.மாநகர சபையில் ஐ.ம.சு.மு. ஆட்சியமைக்கத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்பது யாழ்.தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேறும் போது சட்டத்தரணி ரமீஸின் தந்தை பிரதிமேயராக இருந்தார். நாம் மீண்டும் மீள்குடியேறும் போது அவரது மகன் றமீஸ் பிரதிமேயராக இருக்க வேண்டும் என்றார்.

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட் பரீஸ் உரையாற்றும் போது; யாழ்.மாநகர சபைக்கு இரண்டு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 5 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளவம மகிழ்ச்சியைத் தருகிறது. முஸ்லிம்கள் அரசுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். இதனை முஸ்லிம்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் முடிந்த உதவிகளை யாழ்.முஸ்லிம்களுக்காகச் செய்து தருவேன் என்றார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்ற சந்தேகம் கே.பி. கைதால் நீங்கியது – பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்

kp00.jpgசர்வதேச உதவியுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்றிருந்த சந்தேகம் கே.பி.யைக் கைது செய்ததன் மூலம் முற்றாக நீங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் விலி கமகே நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற வீரதரு உதான புலமைப் பரிசில் நிதியத்திற்கு நிதி கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையில் கூறினார்.  நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் டாக்டர் சம்பா அலுத்வீர தலைமையில் வைத்திய சாலை வளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் விலிகமகே தொடர்ந்து உரையாற்றுகையில்;

எமது வாழ்க்கையில் அரைவாசிக் காலத்தில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் உதவியுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்ற சந்தேகம் ஒரு சிலரிடம் நிலவியது. விடுதலைப்புலிகளின் புதிய தலைவரை கைது செய்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்று எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இராணுவத்தினர் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்.

முப்பதாயிரம் படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். 23 ஆயிரம் பேர் வரை அங்கவீனமுற்றுள்ளனர். ஆறாயிரம் பேர் வரை முற்றாக அங்கவீனர்களாகியுள்ளனர். இதனால், அறுபதினாயிரம் குடும்பங்கள்வரை பாதிக்கப்பட்டுள்ளன.  இவர்களுக்கு உதவி செய்து பராமரிப்பது எமது பொறுப்பாகும். இவர்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் காணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதே எமது இலக்கு. இதற்காகவே அபிவெனுவென் அபி திட்டத்தை ஆரம்பித்தோம்.

எமது சேவா வனிதா இயக்கத்தின் தலைவியின் கருப் பொருளுக்கிணங்க வீர தருஉதான திட்டத்தை ஆரம்பித்து இராணுவ வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்காகவே இன்று நிதி உதவி செய்யப்பட்டது. யுத்த வீரர்களைப் போன்று வைத்தியசாலை டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள். அவர்களின் சேவைகளும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.

வவுனியா ந.ச தலைவராக எஸ்.என்.ஜீ. நாதன்

வவுனியா நகர சபைத் தலைவராக எஸ்.என்.ஜீ. நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அறிவிக்கவுள்ளார்.

இந்த நகர சபைக்கான பிரதித் தலைவராக என்.எஸ்.முகுந்தரன் நிய மிக்கப்பட்டுள்ளார் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புலிகளுடன் தொடர்பு : கிறிஸ்தவப் பாதிரியார் கைது

jeyanesan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவப் பாதிரியாரான ஜெயநேசன் கைது செய்யப்பட்டிருப்பதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அமைச்சர் ஒருவரே இவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் எனக் கூறப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அந்தப் பொறுப்பு பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கிறிஸ்ரியன் கெயர்’ என்ற மனிதாபிமான நிறுவனம், ‘லடர் ஹோப்’ (Ladder of Hope) என்ற அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றது. ‘லடர் ஹோப்’ நிறுவனத்தின் தலைவராகவும் இலங்கையில் ‘கிறிஸ்டியன் கெயர்’ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளராகவும் அருட்தந்தை ஜெயநேசன் பணிபுரிந்து வருகின்றார் எனவும் மேற்படி இணையச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

இங்கிலாந்து மக்கள் உலக மகா சோம்பேறிகள்

சமீபத்திய சர்வே ஒன்று உலக மகா சோம்பேறிகள் பட்டத்தை இங்கிலாந்து மக்களுக்கு வழங்கியுள்ளது. இங்கிலாந்து மக்கள் சுமார் 2 ஆயிரம் பேரிடம் லேசி லீக் டேபிள் என்ற நலநிதி அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் முடிவு இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அது இங்கிலாந்து மக்கள் உலக சோம்பேறிகள் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மக்களில் 6ல் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் இல்லாத சூழ்நிலையில் எழுந்து சென்று டிவியை மாற்றமாட்டார்கள். சோம்பேறித்தனம் காரணமாக அதே சேனலை பார்த்து கொண்டிருப்பார்கள், 59 சதவீதம் பேர் முதல் மாடிக்கு கூட லிப்டில் தான் செல்வார்கள் என தெரிவித்துள்ளது. அவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் ஜிம் பக்கம் போனதே கிடையாது என கூறியுள்ளனர். சிலர் சோம்பேறித்தனத்தால் சில சமயம் செக்சுக்கு கூட நோ சொல்லிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் வேளை கொஞ்சம் அதிகம் இருந்தால் இளசுகள் கூட மன்மத கலையை மறந்துவிடுகிறார்களாம்.

மேலும், 64 சதவீதம் பேர் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சோம்பேறித்தனமாக தடையாக இருப்பதை ஒப்பு கொண்டுள்ளனர். இது குறித்து நப்பீல்டு ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சாரா டவுன்சி கூறுகையில், ரெடிமேட் உணவு, ரிமோட் கண்ட்ரோல், இன்டர்நெட் ஷாப்பிங் ஆகியவை மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது. இங்கிலாந்து மக்களை இந்த மோசமான சோம்பேறித்தனத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றார்.

சோம்பேறித்தனம் காரணமாக அதிகம் குண்டாகி வரும் இங்கிலாந்து மக்களில் 9 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் தங்களது வாழ்நாளை விரைவிலே இழந்துவிடுகின்றனர். 58 சதவீதம் பேருக்கு சக்கரை நோயும், 21 சதவீதம் பேருக்கு இதய கோளாறும் ஏற்படும் வாய்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், மக்களின் வாழ்நாள் 9 ஆண்டுகள் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து மக்கள் தொகையில் 2050ம் ஆண்டு வாக்கில் பெரியவர்களில் 10ல் 9 பங்கினரும், குழந்தைகளி்ல் 3ல் 2 பங்கினரும் அதிகம் குண்டாக இருப்பார்கள என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டும் ரூ. 600 கோடி செலவழிக்கும் என கூறப்படுகிறது.