வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும்போது பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடனேயே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
மேற்படி ஊழியர்களில் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறுமட்டத்தினர் உள்ளனர். அவர்கள் வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்தவர்கள் என்பதால் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் அவர்கள் விசாரணை செய்யப்பட்டு அதன் அங்கீகாரத்துடனேயே மீள சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 4500 அரச ஊழியர்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.
வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை யின் கீழ் இவர்கள் மீள அவர்கள் வகித்த பதவியில் நியமிக்கப்படுவர். எனினும், அவர்கள் பாதுகாப்பமைச்சினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவ்வமைச்சின் சான்று ப்படுத்தலுடனேயே மீளச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இவற்றுள் சிலர் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.