அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் செல்வதற்கான வாய்ப்பை யாழ்.மாநகர சபைக்கு ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளதாக யாழ்.மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.எம்.றமீஸ் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது கூறினார். இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் யாழ்.முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டம் ஓய்வுபெற்ற ஆசிரியர் உமர்தீன் தலைமையில் பெரியமுல்லை றசாத் மண்டபத்தில் இடம்பெற்றது.
சட்டத்தரணி றமீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஒன்றிணைந்து சரியான முறையில் வியூகத்தை அமைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியதனால் வாக்குகள் சரியான முறையில் பாவிக்கப்பட்டு ஐ.ம.சு.மு. வில் போட்டியிட்ட 4 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சைக் குழுவிலும் ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகர சபைக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.
சிறிய சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும். முஸ்லிம்களின் வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி அமைக்க முடியும் என்ற செய்தியை தெரியப்படுத்தியுள்ளோம். தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் சொந்த மண்ணான யாழ்ப்பாணம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளான்.
யாழ்ப்பாணத்திற்கு வெளியே நாட்டின் நாலாபாகங்களிலும் சிதறி வாழும் யாழ்.முஸ்லிம்களில் எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலருக்கும் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாக்களிக்காவதர்களுடன் கோபிக்கமாட்டேன். அரசியலில் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். இவற்றை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்.
“செடோ’ அமைப்பின் செயலாளர் அஜ்மல் பேசும்போது;
யாழ்.மாநகர சபையில் ஐ.ம.சு.மு. ஆட்சியமைக்கத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்பது யாழ்.தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேறும் போது சட்டத்தரணி ரமீஸின் தந்தை பிரதிமேயராக இருந்தார். நாம் மீண்டும் மீள்குடியேறும் போது அவரது மகன் றமீஸ் பிரதிமேயராக இருக்க வேண்டும் என்றார்.
நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட் பரீஸ் உரையாற்றும் போது; யாழ்.மாநகர சபைக்கு இரண்டு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 5 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளவம மகிழ்ச்சியைத் தருகிறது. முஸ்லிம்கள் அரசுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். இதனை முஸ்லிம்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் முடிந்த உதவிகளை யாழ்.முஸ்லிம்களுக்காகச் செய்து தருவேன் என்றார்.