Multiple Page/Post

வடக்கு, கிழக்கில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் காத்திருக்கும் தலையாய உடனடிப் பணி

parliament.jpgஇலங்கையின் 7 ஆவது பாராளுமன்ற அவைக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இத்தேர்தலில் பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்ட பல கட்சிகளும் பல சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் நின்றிருந்தன.

முன்னைய தேர்தல்களில் மக்கள் அபிப்பிராயம், ஊகம் ஆகியவற்றிற்கமைய தேர்தல் முடிவுகள் அமைவதற்கு மாறாக தற்பொழுது நடந்து முடிந்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவு அமைந்திருப்பதை யாவரும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது ஒருபுறம் தமிழ்த் தேசியம் என்ற கொள்கைக்கும் மறுபுறம் அபிவிருத்தி என்ற கொள்கைக்கும் மக்கள் ஆணையைப் பெறும்வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளது கொள்கைகள் முன்வைக்கப்பட்ட பொழுதிலும் சில கட்சிகள் இவ்விரு கொள்கைகளுக்கும் இடைப்பட்ட நிலையிலான நெகிழும் தன்மைப் போக்குடைய கொள்கையை முன்வைத்துப் போட்டியிட்டதை யாவரும் அறிவர். கடந்த காலங்களில் வழங்கியது போல தற்பொழுது நடந்து முடிந்த தேர்தல் முடிவும் அமையாது மாறுபாடாகவே வாக்களிப்பில் பங்குகொண்ட 18% மான மக்களில் பெரும்பான்மையினரது விருப்பு வெளிவந்துள்ளமையை உணர முடிகின்றது. நாட்டை ஆளும் அரசியல் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியும் அதேவேளை, தமிழ்த் தேசியம் என்ற கடும்போக்கை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் இவ்விரு கொள்கைக்கும் இடைப்பட்டதும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு உடனடித் தேவையாகவும் நடைமுறைச் சாத்தியமான நெகிழ்ச்சிப் போக்குக் கொள்கையான அபிவிருத்தியும் தேசியமும் கலந்த கொள்கையை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுமாகிய பிரதான அமைப்புகள் தேர்தல் களத்தில் போட்டி போட்டிருந்தன.

எனினும், தேர்தல் முடிவானது காலத்தின் தேவைக்கேற்ப அபிவிருத்தியும் தேசியமும் கலந்த நெகிழ்ச்சிப் போக்குக் கொள்கையும் அபிவிருத்தியும் தேவையென்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூடக் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இயற்கை , செயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழும் தமிழ்மக்கள் நிலையை சூழ்நிலையை யதார்த்த நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்மக்களது இயல்பு வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்கி அதனை அரசு முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பை நல்கவும் தாம் சித்தமாக இருக்கும் பாணியில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையில் கருத்துகள் வெளிவந்ததையும் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் அடிக்கடி பத்திரிகை அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கை உட்பட மீள் குடியேற்றம், கடற்றொழில் வசதி போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தியில் அக்கறை எடுப்பது பற்றி வலியுறுத்தியும் வந்துள்ளதுடன், குறிப்பாக தமிழரசுக் கட்சியில் தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னணி பிரதிநிதிகளும் பத்திரிகை அறிக்கைகள் மூலம் அபிவிருத்தியும் தேசியமும் கலந்த நெகிழ்ச்சிப் போக்குடைய கொள்கையினை வெளிப்படுத்தியும் இருந்ததை யாவரும் அறிவர்.

இந்நிலையில், பொதுத் தேர்தல் பெறுபேறு காலத்தின் தேவை, யதார்த்த நிலை என்பவற்றைக் கருத்தில் கொண்டே பொதுமக்கள் வாக்களித்துள்ளனர் என்பதைக் காட்டி நிற்கின்றது.

வாக்களிப்பில் கலந்துகொண்ட 18% மான மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி மட்டும் தான் தேவையெனக் கருதியிருப்பின் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு ஆசனங்களையும் தனதாக்கியிருக்க வேண்டும். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உறுப்பினர் தொகையில் கணிசமான உறுப்பாண்மையை மட்டும் அபிவிருத்தியை முதன்மைக் கொள்கையாகக் கொண்ட தென் இலங்கைக் கட்சிகள் வென்றெடுத்துள்ளனர். அதேவேளை, தமிழ்த் தேசியம் என்ற கடும்போக்கைக் கொள்கையை வலியுறுத்தி நின்ற அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஸ்தானம் கூடக் கிடைக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களது இன்றைய உடனடித் தேவை , யதார்த்த நிலை ஆகியவற்றையும் நீண்ட கால தூர நோக்கைக் கொண்ட தேசிய கொள்கையையும் தன்னகத்தே கொண்டு களத்தில் நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான உறுப்பாண்மையை வென்றெடுத்ததன் மூலம் தமிழ் மக்களது உடனடித் தேவையான இயல்பு வாழ்க்கை உட்பட மீள்குடியேற்றம், கடற்றொழில் அடங்கலான ஏனைய அபிவிருத்திகளைப் பெற்றுத்தருவதற்கு நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆணையினை வழங்கியுள்ளதாகவே குறித்த வெற்றியை பொருள் கொள்ளவேண்டும்.

தேசியத்திற்கான கொள்கைப் போராட்டம் என்பது ஒரு தனியான நீரோட்டம். அதேபோல, தமிழர்களின் இயல்பு வாழ்க்கை. அபிவிருத்தி என்பது வேறு தனித்துவமான ஒரு நீரோட்டம். இவ்விரு நதிகளும் ஒன்றையொன்று மேவாது சமாந்தரமாக தனித்துவமாக ஓடிக்கொண்டிருப்பதே சிறந்ததாகும். எப்போதாவது ஒருநாள் இவ்விரு நதிகளும் ஒரு இடத்தில் சங்கமமாகி சமுத்திரமாக தனது தனித்துவத்தை உள்ளடக்கிய விழுமியங்களுடன் பரிணாம வளர்ச்சியடைந்த சமூகமாக உருவெடுக்கவும் கூடும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்கள் நன்மை கருதி காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பட கடந்த காலங்களில் தேசியத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும் தென்னாபிரிக்காவின் கறுப்பினத்தின் தலைவர் நெல்சன் மண்டேலாவும் எவ்வாறு அவ்வப்பொழுது மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு விட்டுக் கொடுப்புடன் கூடிய புரிந்துணர்வு நல்லிணக்கக் கொள்கைப் பிரகடனங்கள் செய்து அதன்படி செயற்பட்டார்களோ அதேவழியில் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழரசுக் கட்சி செயற்படுவதில் தவறேதும் இருக்கமுடியாது. எனவே, அரசினால் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தமிழருக்கும் வட, கிழக்கு மண்ணுக்கும் பாதிப்பில்லாத வகையில் அதையும் உள்வாங்கி அமையுமாயின் அதற்குப் பூரண ஆதரவை நல்குவதே காலத்தின் தேவையாகும். இதற்காகத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை இழக்காது அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களுக்கான நற்பணிகளை செய்வதன்மூலம் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி மூலம் தமிழருக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதுடன் , வட, கிழக்குப் பிரதேசத்தில் தனித்துவம், தேசியம், தமிழ் மண் சிறிது சிறிதாக உட்கிடையாக பறிபோவதை சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த சிங்கள முற்போக்காளரின் புரிந்துணர்வு, நட்பு நம்பிக்கையைப் பெறவும் சந்தேகங்களைப் போக்கவும் கூடியதாக அமையும். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் நேரடியாகப் பங்குகொண்டு அமைச்சர் பதவி பெற்று பல அபிவிருத்திகளை வடக்கிலும் கிழக்கிலும் ஆற்றியிருந்தனர். தேசியம் விட்டுக்கொடுக்கப்படவில்லை. இதனால், தனது தனித்துவம் இழக்கப்படவில்லை. அதேபோல, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அபிவிருத்திக்காக இணைந்து அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சர் பதவியைப் பெற்று உள்ளூராட்சி அமைப்புத் தொடர்பில் பல அபிவிருத்திகளை ஆற்றியிருந்தும் தனது தனித்துவத்தை இழக்கவில்லை. பேணிப்பாதுகாத்த வண்ணம் செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கியிருந்தனர்.

தமிழர் தேசியத்தை இறுக்கமாக வலியுறுத்தியமையே தமிழ் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் என பலராலும் பத்திரிகை மூலம் அறியவருகிறது.அக்கருத்து முழுமையாக ஏற்கக்கூடிய ஒன்றல்ல. காரணம் தனித்தேசியம் தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமற்றது. தற்போதைய நிலையில் யதார்த்தமாகத் தமிழ்த்தேசியம் நடைபெறக்கூடிய ஒன்றல்ல எனக் கூறிவரும் ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலை கூட்டணிக் கட்சிகளுக்கே மக்கள் முழுமையாக வாக்களித்திருக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பு அமையவில்லை. இதன் மூலம் இக்கருத்து நிராகரிக்க வேண்டியதாகும். தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தோல்விக்குக் காரணங்கள் பல இருப்பினும் 18% மானவரது கருத்துப்படி தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாகச் சேர்ந்து நின்று போட்டியிடவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது என்பதே எனது கருத்தாகும். அத்துடன்,இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டுமே அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒருமித்து பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் வட, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டதையும் அரசியல் முதிர்ச்சியும் மதிநுட்பமும் கொண்ட தமிழ் பேசும் மக்கள் மனதில் பதிவு செய்ததன் எதிரொலியே வரலாற்றின் திருப்புமுனையில் நிற்கும் தனித்துவ மக்கள் கூட்டத்தின் விவேகமான வாக்குப்பதிவு நிகழ்வாகும்.

ஆயினும் இலங்கை அரசியல் வரலாற்றில் 1965 ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழரசுக்கட்சி இணைந்து ஆட்சி புரிந்தும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை அமுல்படுத்த முடியாது தோல்வி கண்டதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் பங்களிப்புடன் வரைந்த அரசியலமைப்பு நகல் திட்டம் பின்னர் பாராளுமன்றத்தில் கிழித்தெறியப்பட்டு புறந்தள்ளப்பட்டதும் சரித்திரம். இவ்விரு முயற்சிகளையும் முன்னெடுத்த டட்லி,சந்திரிகா ஆகியோருக்குப் பாராளுமன்ற பலமோ மக்கள் ஆதரவுப் பின் புலமோ இல்லாமையே காரணம் என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். இந்த பின்புலத்தில் இன்றைய சூழ்நிலையைப் பரிசீலிப்பது இன்றியமையாததாகும்.

இலங்கையில் ஜனாதிபதியாகவும் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய இரட்சகராக மகிந்த ராஜபக்ஷ விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. அத்துடன், தென்னிலங்கையில் பேரினவாத நச்சுக் கொள்கைகளை வலியுறுத்தி கட்சிகளை பாராளுமன்ற தேர்தலில் பூண்டோடு ஒழித்து பலம் மிக்க பாராளுமன்றத்தை தன்வசம் ஆக்கியுள்ளார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய பகிரங்க இரகசியமாகும். தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் யாழ்நகரில் வந்து தமிழ் மக்களைத் தான் நம்புவதாகவும் தமிழ் மக்களும் தன்னை நம்ப வேண்டுமென்றும் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தெரிவு செய்து அனுப்பிய பிரதிநிதிகளுடன் பேசி உருவாகும் உணர்வுபூர்வமான அரசியலமைப்பு உறுப்புரைகளை நிறைவேற்றும் மன வைராக்கியம், துணிவு, ஆளுமை, ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்டா என்பதை ஆராயும் போது எதுவித சந்தேகமும் இன்றி கடந்த ஆண்டு எமது நாட்டில் நடந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்து எம்முன் நிழலாடுகிறது.

எனவே, இவ்வாறான அதிதீவிர துணிவும் மனவைராக்கியமும் நிறைந்துள்ள மகிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேசித் தீர்க்க முயலும் போது உருவாகும் எதிர்ப்புகளுக்கு அடிபணியாது எதிர்ப்பலைகளை துவம்சம் செய்து தீர்வை அர்ப்பணிப்புடன் அமுல்படுத்தி இலங்கைத் தீவில் நியாயமான அதிகாரப்பகிர்வு அனைத்து தேசிய இனங்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி மகிந்த ராஜபக்ஷ வரலாற்று நாயகனாக முடியாதா என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

ஆகவே,தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்ற மகிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கரு வளர்ச்சியடைந்து செயல்வடிவம் பெற களம் அமைக்க வேண்டியது பெரும்பான்மையாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தமிழரசுக்கட்சியின் காலத்தால் புறம் தள்ளமுடியாத கடப்பாடாகிறது. இவ்வாறு களம் அமைக்கப்படும் பட்சத்தில் பாரத நாட்டின் பின்புலத்துடன் கூடிய சர்வதேச சமூகத்தின் பூரண சம்மதமும் ஒத்துழைப்பும் சங்கமிக்கும் நிலை உருவாகும்.

எதுஎவ்வாறாயினும் தனித்துவத்தை தாரைவார்க்காது வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான மதிநுட்பத்துடன் கறைபடியாத கரமாக தமிழரசுக்கட்சி ஆளுமையும் மனவுறுதியும் மக்கள் ஆதரவும் கொண்ட “பேசித் தீர்ப்பேன்’எனக்கூறிய மகிந்த ராஜபக்ஷவின் கரத்தைப் புரிந்துணர்வுடைய நல்லிணக்கத்துடன் பற்றிப்பிடித்து அர்ப்பணிப்புடன் செயற்படின் ஆசியாவின் ஆச்சரியமான அபிவிருத்தியடைந்த நாடாக மிளிர தமிழ் மக்களும் பங்காளியானார்கள் என சரித்திரம் கூறும்.ஒரு சமயம் வெளிப்படையான புரிந்துணர்வுடன் நல்லிணக்கம் உருவாகாவிடின் தமிழ் மக்களின் உள்ளார்ந்த ஆதங்கத்தை நிஜமாக்க பாரத நாட்டின் பின்புலத்துடன் கூடிய சர்வதேச சமூகத்தின் செயற்பாடு யதார்த்தமாகும் காலம் உதயமாகும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை.

நன்றி-தினக்குரல்

ஐ.தே.க.வில் மறுசீரமைப்பை வலியுறுத்துகிறார் சஜித் பிரேமதாஸ

unp-logo.jpgபாராளு மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தோல்வி கண்டிருக்கும் நிலையில் ஐ.தே.க.வை மறுசீரமைக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றிருப்பவருமான சஜித் பிரேமதாசாவிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்,விவசாயிகள்,மீனவர்கள் உட்பட தாழ்ந்த மட்டத்திலிருந்து பிரதிநிதித்துவத்தை கட்சி கொண்டிருக்கும வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக பி.பி.சி.க்கு சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐ.தே.க. 46 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆளும்கட்சி 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது.ஆளும் ஐ.ம.சு.மு.வுக்கு தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 143 க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் மத்தியிலேயே அதிகாரம் குவிந்து கிடப்பதால் மறுசீரமைப்பை மேற்கொள்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கட்சியின் தலைவருக்கே அதிகளவு அதிகாரப்பகிர்வு உள்ளது என்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். எதிர்காலத் தேர்தல்களில் கட்சி மேம்பாடடைய மறுசீரமைப்பு முக்கியமானது என்பதே கட்சியின் தலைமைத்துவம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு ஹக்கீமுக்கு அழைப்பு

rauff.jpgசிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. வியாழக்கிழமை இரவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஹக்கீம் கூறியுள்ளார். இந்த அழைப்பை ஹக்கீம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 ஏப்ரல் 20 இல் நாவலப்பிட்டியில் மறுவாக்கெடுப்பு இடம்பெற்ற பின்னர் தான் கொழும்புக்குத் திரும்பி வந்து தனது கட்சியுடன் கலந்தாலோசிப்பதாக ஹக்கீம் சம்பந்தனுக்கு உறுதியளித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் குரலை வலுப்படுத்துவதே எமது பிரதான அக்கறையாகும். அரச தரப்பில் சில இன மேலாதிக்கவாதிகள் உள்ளனர். அவர்கள் சில சந்தர்ப்பவாதத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று ஹக்கீம் கூறியுள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார்

parliament.jpgஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்குக் கூடவிருப்பதாக அறிவித்திருக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முன்னர் சபையில் அமரவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.

முதலாவது சபை அமர்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமுகம் தந்து உரையாற்றவிருப்பதுடன் அன்றைய தினம் சபாநாயகர் தெரிவுடன் உப சபாநாயகர், குழுக்களின் செயலாளர் சபை முதல்வர் ஆகியோரின் தெரிவுகளும் இடம்பெறவிருக்கின்றன. இதனையடுத்து சபை அமர்வு ஒத்தி வைக்கப்படுமெனவம் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாவதற்குச் சமாந்தரமாக எதிர்வரும் 18 ஆம் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் இரவு முழுவதும் பிரித்ஓதும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவிருக்கின்றது. மறுதினம் திங்கட்கிழமை காலையில் மகா சங்கத்தினர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.இந்த வைபவங்களிலும் பங்கேற்குமாறு தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அழைப்புவிடுத்திருக்கின்றார்.

அமெரிக்கா, இலங்கை படைகள் மனிதாபிமான கூட்டு செயற்பயிற்சி

அமெரிக்கக் கடற்படையும் இலங்கை இராணுவமும் கூட்டு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தில் இதற்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றிலிருந்து சிவிலியன்களும் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 27 கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதேநேரம், 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெப். கேர்ணல் லறி சிமித்; மனிதாபிமான செயற் திட்டம், மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.

பொன்சேகா நாளுக்குநாள் பலவீனம் பேச முடியாமல் கஷ்டப்படுகிறார் – அனோமா

anma.jpgஇராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களாக பேச முடியாமல் கஷ்டப்படுவதாகவும்,அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாக அவரை பரிசோதித்த விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருப்பதாகவும் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தனது கணவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை மூடி மறைத்து வருவதாகவும் அனோமா பொன்சேகா அரசு மீது குற்றம் சுமத்தினார்.நேற்று வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகாவின் றோயல் கல்லூரி வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது:பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் முறையிட்ட போது அவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களின் அனுதாபத்தை தேடுவதற்காக நாம் பொய் சொல்வதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமரசிங்க தெரிவித்திருந்தார். நான் எனது கணவரைச்சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது உடல் நிலையில் தாக்கம் ஏற்பட்டு வருவதை உணரமுடிந்தது. இப்போது அவரால் பேசமுடியாது. கஷ்டப்பட்டு வருகிறார். வார்த்தைகள் தொண்டையிலிருந்து வெளிவரமுடியாது அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்.

அவரைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழு சுமார் மூன்று நாட்களாக தொடர்ந்து பரிசோதித்த பின்னர் அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்து ஆறு வகையான மருந்துகளை பாவிக்க நியமித்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை எனது கணவருக்கு மருந்துகளை விட சூழல் வசதிகளே முக்கியமானதாகக் கருதுகின்றேன். அவரை அடைத்து வைத்து நோய்க்குள்ளாக்கி இயற்கை மரணத்தின் பக்கம் தள்ளிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுமே ஏற்கவேண்டியேற்படுமெனவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றம் – இம்மாத இறுதிக்குள் வவுனியாவில் குடியமர்வு

வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவாரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோரையும் மேற்படி ஆறு கிராம சேவ கர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

கட்டுநாயக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை பாதிப்பு

srilankan-airlines.jpgஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சாம்பல் பரவி வருவதால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இந்த நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ள பயணிகள் தமது விமானப்பயணம் தொடர்பாக அந்தந்த விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று பல பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவைகளிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக் காலை 3 மணிக்கு பிறாங்போர்ட் செல்லவிருந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. அதேபோல நேற்று நள்ளிரவு செல்லவிருந்த விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 2.55 க்கு லண்டனிலிருந்து வரவேண்டிய யு.எல்.510 விமானம் நேற்று முற்பகல் 11.40 க்கு வந்து சேர்ந்துள்ளது.லண்டனிலிருந்து நேற்று மாலை 4.55 க்கு கட்டுநாயக்கா நோக்கி புறப்படவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.விமானச் சேவைகள் தொடர்பாக 0112252861 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமம் பெற்ற வங்கிகளின் கிளைகளை வடக்கு, கிழக்கில் திறக்க மத்திய வங்கி அனுமதி

உரிமம் பெற்ற வங்கிகள் பலவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார செயற்பாடுகளிற்கு துணைபுரி வதற்கு மிகுந்த ஈடுபாட்டினை காட்டி வருகின்றன. அதன்படி கொமர்சல் பாங்க் ஒப் சிலோன் பிஎல்சி, அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி, சம்பத் பாங்க் பிஎல்சி மற்றும் செலான் பாங்க் பிஎல்சி என்பன அக்கரைப்பற்று, அச்சுவேலி, களுவாஞ்சிகுடி, கிளிநொச்சி, மல்லாவி, மானிப்பாய், மாங்குளம், மன்னார், பரந்தன், துணுக்காய் மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் அடுத்து வரும் ஒருசில மாதங்களில் கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்குத் தேவையான அனுமதிகள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் உரிமம் பெற்ற வங்கிகளும் 2010ஆம் ஆண்டில் ரூ. 56 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் 2011ம் ஆண்டில் ரூ. 70 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் அர்ப் பணிப்புடன் செயற்படுகின்றன.

எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் – ஹக்கீம்

rauff-hakeem.jpgசிறுபான் மைச் சமூகங்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதே சிறுபான்மைக் கட்சிகளின் பிரதான கரிசனையாகும். சமத்துவம், நியாயம், நல்லாட்சிக்கான சூழ்நிலை போன்றவற்றை சிறுபான்மைச் சமூகங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.இதேவேளை அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறாரா? என்று கேட்கப்பட்டபோது அதனை அவர் நிராகரித்துள்ளார். ஐ.தே.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்திலுள்ள எவருடனுமோ நான் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. அவர்கள் என்னை அணுகவும் இல்லை. ஐ.தே.க.வுடன் நாம் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் அந்த மாதிரியான நோக்கம் கிடையாது என்று ஹக்கீம் கூறியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தால் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்வீர்களா என்று கேட்கப்பட்டபோது அதனை மறுத்த ஹக்கீம் நாட்டைக் கட்டியெழுப்ப எதிரணியுடன் இணைந்து பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார். “அரசில் இணைவது தொடர்பான இந்தக் கதைகள் அடுத்தவாரம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எனது பிரதிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வழியைக் கொண்டவையாகும். ஐ.தே.க.வாக்காளர்களின் அதிகளவு வாக்குகளை நான் கொண்டுள்ளேன். எனக்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் என்று ஹக்கீம் தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.