இந்தியா விற்கு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராஜாங்க விஜயத்தை மேற்கொள்ளும் தருணத்தில் இரு நாடுகளுக்குமிடையில் குறைந்தது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 11 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 6 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அவை இந்த வருட இறுதியில்கைச்சாத்திடப்படக்கூடும்.
செவ்வாய் மாலை புதுடில்லியை ஜனாதிபதி சென்றடைவார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். புதன்கிழமை இந்திய ஜனாதிபதி மாளிகையின் முன்றிலில் அரச மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த வைபவத்தில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவார்.
ஜனாதிபதியும் அவரின் தூதுக் குழுவினரும் தங்கியிருக்கும் ஐ.ரி.சி. மயூரியா ஹோட்டலில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதியை சந்திப்பார். ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளனர். ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித்வால் குணவர்தன மற்றும் சிலர் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை, வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஞாயிறு இரவு டில்லிக்கு பயணமாகவிருந்தனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை இடம் மாற்றுவதற்கான உடன்படிக்கை, குற்றவிடயங்களில் பரஸ்பர சட்ட உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை, கலாசார ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை, இலங்கையில் சிறிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்தியாவின் உதவி தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றிலேயே ஜனாதிபதி விஜயத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்தது.
இதேவேளை, தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும் மற்றும் கொச்சிக்குமிடையிலான கப்பல் போக்குவரத்துத் தொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படுவதில் மேலும் காலமெடுக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.