வடக்கில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக அங்குள்ள தொல்லியல் மையங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆய்வு செய்வது அவசியமானது என தொல்லியல் திணைக்கள பிரதிப் பொதுப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொல்லியல்சார் இடங்களை அடையாளம் கண்டு யு.என்.டி.பியின் நிதியுதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
30 வருடங்கள் வடபகுதியில் போர் நடைபெற்றதால் தொல்லியல் சார் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடமுடியவில்லை. அதனால், தற்போது அப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும், வெடிபொருட்களை அகற்றிய பின்னரே முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. அதனால் நிவாரண முகாம்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஊர்களில் மீள்குடியேற்றப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.