வடபகுதி மக்களின் இன்றைய அவலங்களுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பும் முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறிய போதிலும், தமிழ்தேசியக்கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கு புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தியடையக் கூடிய நிலையில் இல்லை என்பது உண்மை. ஆனால் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமானது. கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாது, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. இவை இப்போது இரண்டு மாகாணங்களாக செயற்படுவதில் தவறில்லை. இரு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.