இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாண்டு மாணவர்களை அனுமதிக்கும் சகல பாடத்துறைகளுக்குமான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக உயர்கல்வி அமைச்சர்எஸ்.பி. திசாநாயக்க பிரதி உயர்கல்வி அமைச்சர் என்.எம். ஏக்கநாயக்க ஆகியோர் வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜீ. சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத் தொழில்துறையை மையமாகக்கொண்டதாகவே நிகழ்காலத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடத்துறைகள் அமையுமெனவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த வகையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக கணினிக்கற்கைநெறி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் அனைவரும் அங்கேயே தமது பாடத்துறையை தொடரவேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் இடமாற்றம் அல்லது இணைப்புச் செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.