Multiple Page/Post

“லப்டொப்” பென செங்கட்டி; இலங்கை வர்த்தகரை ஏமாற்றிய சென்னை வியாபாரி

லப்டொப் கணினி வழங்குவதாக 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு செங்கட்டி வைத்துள்ள பொதியை இலங்கை வர்த்தகருக்கு கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக சென்னை விமான நிலையப் பொலிஸார் மண்ணடியைச் சேர்ந்த வர்த்தகரொருவரை கைது செய்துள்ளனர்.

மொஹமட் ஹசன், மொஹமட் றபீ, மொஹமட் பௌஸி ஆகியோர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களாகும்.அவர்கள் புடவை மற்றும் பாதணிகள் வியாபாரத்திற்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கமாகும். கடந்த வியாழக்கிழமை அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் திரும்பிச் செல்லவிருந்தனர். அவர்கள் மண்ணடியிலுள்ள மொஹமட் ஷாபீர் என்ற வர்த்தகருடன் தொடர்பு கொண்டனர். குறைந்த விலையிலான லப்டொப் கணினிகளை தன்னால் வழங்க முடியுமெனவும் அதனை இலங்கையில் அதிக விலையில் விற்கலாம் என்றும் ஷாபீர் ஹசனுக்கு கூறியுள்ளார். ஹசனிடமிருந்து பின்னர் ஷாபீர் 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார். ஹசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பொதி சோதனையிடப்பட்டது. அதற்குள் சந்தேகமான பொருள் இருந்தது அவதானிக்கப்பட்டது.

சோதனையில் கணினிப்பை பொதிக்குள் வெறும் செங்கட்டியொன்று இருந்துள்ளது. தான் செங்கட்டியைக் கொண்டு செல்வது குறித்து ஹசன் அறிந்திருக்கவில்லையென்று பொலிஸார் இந்து பத்திரிகை நிருபருக்குக் கூறியுள்ளனர். பொதிக்குள் இருந்தது லப்டொப் என அவர் கருதியிருந்தார். கடந்த இரு நாட்களாக விசாரணை இடம்பெற்றபோது மண்ணடி வியாபாரி இலங்கை வர்த்தகரை ஏமாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாபீர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.3 இலங்கை வர்த்தகர்களும் விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளனர்.

ஷாபீர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலையை விட்டு விலகிய பின் இலங்கையில் பல வருடம் இருந்து விட்டு பின்னர் சென்னையிலுள்ள மண்ணடிக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் பொலிஸார் கூறினர்.

பிரெட்றிக்காவின் LapTop நீதிமன்ற பாதுகாப்பில்.

pratrika.jpgஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி பற்றிய குறிப்புகள் உள்ளடக்கிய குறிப்பேட்டை ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் சம்பா ராஜரட்னவின் உத்தரவின் பேரில் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார். சம்பந்தப்பட்ட குறிப்பேட்டை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் பிரதம ஆசிரியர் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கினார்.

சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருந்து ரகசிய பொலிஸார் அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதி சட்டமாஅதிபர் வசந்த நவரட்ன நீதிமன்றத்துக்கு கூறினார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஜென ரல் பொன்சேகாவின் நேர்காணல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே பிரதி சட்டமா அதிபர் மேற்கூறியவாறு தெரிவித்தார். ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் சார்பாக வாதாடிய சட்டத்தரணி என். எம். சஹீட் குறிப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட நேர்காணல் உள்ளடக்கிய குறிப்பேடு மூல ஆவணம் என்பதால் அதனை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற குறிப்பேடு தொடராக இலக்கமிடப்படவில்லை என்று பிரதி சட்டமா அதிபர் கூறியதையடுத்து குறிப்பேட்டில் தொடர்ச்சியாக இலக்கமிடுமாறு நீதவான் உத்தரவிட்டார். ஜெனரல் பொன்சேகாவின் சார்பாக வாதாடிய சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி குறிப்பேடு மீது நம்பிக்கை இல்லையென்று கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் செயற்பாடுகள் அவ்வாறான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சர்ச்சைக்குரிய செய் திகளை பிரசுரிப்பதாகவும், இவ்வாறான ஒரு அறிக்கையை அப்பத்திரிகை வெளியீட்டின் நோக்கம் என்ன என்பதை தனக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற பக்கங்களுக்கு இடையே குறிப்பேட்டில் சில காலி பக்கங்களை காண முடிவதாகவும், பத்திரிகைக்கு வெளியாரிடம் இருந்து பணம் கிடைக்கும் போது ஏதேனும் தேவையானளவு நிறைப்பதற்கு அவை காலியாக விடப்பட்டுள்ளனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறான காலிப் பக்கங்கள் குறிப்பேட்டில் உள்ள விடயத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ஜெனரல் பொன்சேகாவை தொடர்ந்து இராணுவ பாதுகாப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் இருந்து காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளை காவற்துறை பணிக்கு இணைத்து கொள்வது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர், யுவதிகள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தமிழ்ச்செம்மொழி மாநாடு நாளை கோவையில் ஆரம்பம் – மாநாட்டில் மலையக காமன் கூத்து

semmoli.jpgஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை கோயம்புத்தூரில் (கோவையில்) கோலாகலமாக ஆரம்பமாகிறது. நாளை ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாளைய தினம் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 49 நாடுகளைச் சேர்ந்த 536 தமிழறிஞர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தியாவிலிருந்து 5000 அறிஞர்கள் பங்குபெறுகின்றனர். தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்கும் வகையில் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற வேண்டும். இந்த மண்ணில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் சமதர்மம் கிடைக்க திருவள்ளுவர் சொன்ன மணிமொழியாம் தமிழ்மொழி வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் 2004 ஆம் ஆண்டில்தான் கிடைக்கப் பெற்றது. இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தரவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

செம்மொழி மாநாட்டில் மலையக காமன் கூத்து

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மலையக பாரம்பரிய கலையான காமன் கூத்து அரங்கேற உள்ளது. எதிர்வரும் 24ம் திகதி கலாசார நிகழ்வின் போது காமன்கூத்து அரங்கேறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஹட்டன் தமிழ்ச் சங்கத் தலைவரும், கவிஞருமான சு. முரளிதரன் மேற்கொண் டுள்ளார். இலங்கை குழுவின் தலைவரான பேராசிரியர் கா. சிவதம்பியின் வேண்டுகோளின்படி முரளிதரன் இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

மலையக மக்கள் கலை அரங்க ஏற்பாட்டில் 14 கலைஞர்கள் இடம்பெறுகின்றனர். மலையகத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் இரா. பிரான்ஸிஸ், ஹெலன் நெறியாள்கையில் என் சாம்பசிவன் மூர்த்தி, எஸ். சிறிவேதா, பி. விஜயகோபால், எஸ். பிரேமகுமார், எம். தியாகராஜா, வி. இராமர், எஸ். போல் பெரேரோ, வசந்தி ஹெலன், கிறிஸ்டிலா இராமர், பி. டலாதேவி உட்பட 14 பேர் குழுவில் செல்கின்றனர்.

செட்டிக்குளத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 155 பேர் கைது

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா மாவட்ட பதில் நீதிவான் எம்.சிற்றம்பலம் முன்னிலையில் நேற்று {20.06.2010) ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

புலி உறுப்பினர்கள் மூவர் தமிழகத்தில் கைது

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் மூன்று பேர் கியூவ் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவா, தமிழ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை மேலும் 6 மாதங்கள் வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம்

உலக உணவுத் திட்டமானது வடக்கில் இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட் களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட நிறுவனத் திடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கிணங்க இவ்விணக்கப் பாட்டினை அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு கடந்த ஆறுமாத காலங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் வழங்கி வந்துள்ளதுடன் அப்பொருட்கள் மக்களுக்குப் பகிர்ந்த ளிக்கப்பட்டு வந்துள்ளன.

கடந்த மாதத்துடன் ஆறு மாதகால ஒப்பந்தம் நிறைவடைவதுடன் அவ்வுதவியினை மேலும் ஆறுமாத காலத்திற்கு நீடிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கிணங்க மேலும் ஆறு மாத காலத்திற்கு உணவுப் பொருட்களை வழங்க அந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மிக முன்னேற்றகரமான நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படும்

இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். யாழ். மாவட்டத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான பெருமளவு இலக்கிய நூல்களை அன்பளிப்புச் செய்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பெளதீக வளங்களையும் மேம்படுத்த வேண்டும். பல வருடங்கள் நீடித்த யுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்துவதற்கு மனித வள முகாமைத்துவம் மிகவும் முக்கியமாகும்.

பல வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த யாழ். மாவட்டம் இன்று சுதந்திர பூமியாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டம் நாட்டில் முன்னேறிய நகரமாக முன்னேற் றப்படும். இன, மத அடித்தளத்தில் இருந்து ஒதுங்கி செயற்படுவதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்வி நிலையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். சிங்கள மற்றும் தமிழ் கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார். அமைச்சர், சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம், யாழ் மின்சார சபை என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார், ஹெல உருமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு ஈரானில் மரண தண்டனை

ஈரானில் கைது செய்யப்பட்ட சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சுன்னி ஆயுதக் குழுத் தலைவர் அப்டொல்மாலிக் ரெஜி கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்டொல்மாலிக் ரெஜி, ஜூன்டல்லாஹ் கிளர்ச்சிக் குழுவின் தலைவராக கடமை யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப் பினர்கள் முன்னிலையில் ரெஜிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளின் பின்னர் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பலுகிஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கடுமையான குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் ரெஜிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் முகவராக செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாக ரெஜியின் சகோதரருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியிருந்தது. எவ்வாறெனினும், ஜூன்டல்லாஹ் அமைப்புடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஊடகவியல்: ரூபன் மரியாம்பிள்ளையின் ஊடகவியல் நூல்கள் ஒரு அறிமுகம் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Rubanmariam_Pillai இக்கட்டுரை ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இவை அனைத்தையும் எழுதியவர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை. சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை 1959 ஜுன் மாதம் 24ம் திகதி பிறந்தவர். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1965,ல் தன் ஆரம்பக் கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1972ல் தன் உயர் கல்வியையும் பெற்றவர்.

கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய தேசிய இறையியல் கல்லூரியில் 1982லும், புனித பிரான்சிஸ் குருத்துவக் கல்லூரியில் 1984லும் தன் இறையியல் கல்வியை மேற்கொண்டவர். 1986முதல் யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் குருவானவராக பணியாற்றுபவர். 1979ஆம் ஆண்டு மௌன ஊர்வலம் என்ற பாதுகாவலன் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை மூலம் பத்திரிகைத்துறைக்கு அறிமுகமானவர் இவர். அன்றிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பாதுகாவலன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார், யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட வரலாறு கொண்ட பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் பாதுகாவலன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோதே அப்பத்திரிகை 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்புக்கொண்ட தமிழ்ப் பத்திரிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஈழநாடு, முரசொலி, போன்ற பத்திரிகைகளில் தவக்காலச் சிந்தனைகள் என்ற பகுதியின் வழியாக அறிமுகமான இவர் ஈழநாடு பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். நான் என்ற உளவியல் சஞ்சிகை, இறையியல் கோலங்கள், புதிய உலகம், மற்றும் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தொண்டன் போன்றவற்றிலும் இவரது பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. உதயன் பத்திரிகையில் ஏறக்குறைய 30க்கும் அதிகமான சமயக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் சான்றிதழ் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், பின்னர் தன் பத்திரிகைத் துறைக்கான பட்டப்பின் படிப்பையும், முதுகலைமாணிப் பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர்.

தற்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் ஊடகத்துறையில் கலாநிதிப் பட்டத்திற்கான உயர் ஆய்வினை இங்கிலாந்தின் Sheffield ஹாலம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கல்விசார் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகக் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்.

யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் நினைவாக, Bishop Savundram Media Centre என்ற பத்திரிகையியல் கல்வி நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் 2000ம் ஆண்டில் உருவாக்கி இன்றுவரை இயக்கியும் வருகின்றார். இத்தகைய ஊடகவியல் பின்னணியில் இவர் எமக்கு வழங்கியுள்ள கனதியான நூல்களைப் பற்றிய தகவல்களை உள்ளே காணலாம். Pirasurakalam_5June2010

இவ்விதழில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக விற்பனை செய்ய அதன் ஆசிரியர் முன்வந்துள்ளார். எட்டு நூல்களையும் பெற விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: செல்வராஜா (0044) 07817402704 selvan@ntlworld.com Single copy £ 10.00 Set Price £ 60.00 (Postage included).