Multiple Page/Post

தற்காலிக தாக்குதல் நிறுத்தம்: நிபந்தனைகளுடன் பரிசீலிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு

krambukkela.bmpஇலங்கையின் போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் மனிதாபிமான நலனுக்கான தற்காலிக தாக்குதல் நிறுத்தம் ஒன்று தேவை என்ற ஐ.நா. மன்றக் கோரிக்கை தமது நிபந்தனைக்கு அமைய பரிசீலிக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.மன்ற கோரிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை அரசின் பாதுகாப்பு விவகரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல,  நிஜமான பலன் ஏற்படும் என்றால் மட்டுமே அப்படி ஒரு தாக்குதல் நிறுத்தம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை வெளிவர விடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அரசாங்கம் வழங்கிய 48 மணிநேர அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக கூறுகையில் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இருபது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையும்,  மற்றும் சர்வதேச சமூகமும் தெரிவிக்கும் ஆலோசனையான மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் என்னவகையான மாதிரிகள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் எதுவும் குறிப்பிடாதபோதிலும் களநிலைமைகளுக்கு ஏற்ப அவை நேரத்துக்கு நேரம் மாற்றமடையும் என்று கூறியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில்,  அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒத்தாசையுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபை மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அறிவுறுத்தியிருந்ததுடன்,  புலிகளையும் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் அரசாங்கம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மோதல் இடைநிறுத்தம் பரிசீலிக்கப்படுமே தவிர,  வேறுவகையான செல்வாக்கின் அடிப்படையிலோ அன்றேல் அழுத்தத்தின் அடிப்படையிலோ அமையமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரை கொல்லும் பிரதேசமாக மாறியுள்ளது.

அதனால், அவர்கள் காயமடைந்து வருகின்றனர். சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்கள் திருப்பித் தாக்குவதில்லை. நாங்கள் எதிரிக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்வற்றை நிறுத்தி விட்டோம். காரணம் சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான். ஆனால், புலிகள் இதனை வாய்பாகக் கொண்டு மக்களுக்கு பின்னால் மறைந்திருந்து படையினரைத் தாக்குகின்றனர்.

இந்தக் கட்டத்தல் யுத்த நிறுத்தத்துக்கு அரசாங்கத்துக்கு எவ்வித ஆர்வமும் கிடையாது. சிவிலியன்கள் பாதுகாக்கப்பட்ட பின்னர் புலிகளை படையினர் அழித்தொழிப்பார்கள் என்றார். 

மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்தால் தற்காலிக மோதல் நிறுத்தம் சாத்தியம் – இலங்கைக்கான ஐ.நா.நிரந்தர பிரதிநிதி பளிகக்கார

இலங்கையில் வடக்கு பகுதியில் மோதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலி யுறுத்திவரும் நிலையில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்தால் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இணங்குவது சாத்தியமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தமக்களை (தமிழ்பொதுமக்கள்) வெளியேற புலிகள் அனுமதியளிக்க தயாரெனில் குறைந்தது அவர்களில் ஒரு பகுதியினரையாவது செல்வதற்கு அனுமதியளித்தால் தற்காலிக சண்டைநிறுத்த அனுசரணையை வழங்க அரசாங்கம் இணங்கக்கூடும் என்று ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி எச்.எம். ஜி.எஸ் பளிகக்கார கூறியுள்ளார்.

இதனை குறுகியகால இடைநிறுத்தம் என்றோ அல்லது அரசு முன்னர் வழங்கிய 48 மணிநேரம் என்றோ கருதமுடியும் என்று நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் வைத்து அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

புலிகள் அவர்களை வெளியேறவிடவில்லை என்பதே இந்த விடயமாகும். அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பளிககார கூறியுள்ளார்.

புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயம் முழுமையாக சுற்றிவளைப்பு. மக்களை பாதுகாப்பாக விடுவிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்கிறார் இராணுவப் பேச்சாளர்

srilanka_army1.jpgபுலிகளின் சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகள் ஊடுருவியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள அதேசமயம், சகல முனைகளிலும் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும், தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத விதத்திலும் கடற்பரப்பிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார்.கடற்படையினர் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கடற்பரப்பிலும் புலிகள் தப்பிச் செல்ல முடியாத விதத்தில் நான்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஐ. சி. ஆர். சி. யின் ஒத்துழைப்புடன் இதுவரை புலிகளின் பிடியிலிருந்து பதினைந்து தடவைகள் சுமார் ஆறாயிரம் வரையிலான பொதுமக்களை கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தற்பொழுது புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிகேடியர் உதய நாணக்கார மேலும் தகவல் தருகையில்,புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 59,441 பொது மக்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தப்பிவரும் பொது மக்களின் வருகையை தடுக்கும் வகையில் புலிகள் பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும் தப்பி வரும் பொதுமக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எஞ்சியுள்ள பொது மக்களையும் எவ்வாறாவது பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் தமது சகல வளங்களையும், பலத்தையும் நாளுக்குநாள் முழுமையாக இழந்து வருகின்றனர். புலிகள் சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதுடன் பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் பதில்தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளனர் என்றார்.

புதுமாத்தளன் வடபகுதியில் நிலைகொண்டுள்ள கிராமத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், பிரசன்ன டி சில்வா தலைமையிலான படையிலும், இரணைப்பாலைக்கு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கே நிலைக் கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான படையினரும் தமது நிலைகளை நாளுக்குநாள் விஸ்தரித்துவருவதுடன் புலிகளின் மண் கரண்களையும் கைப்பற்றிவருகின்றனர்.

மூன்று படைப்பிரிவுகளுக்கும் உதவியாக கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான இராணுவத்தின் எட்டாவது விசேட படைப்பிரிவும் களமுனையில் ஈடுப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் தினங்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் படையினர் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம்

mahinda-in-gr.jpg* 156 ஏக்கர் நிலப்பரப்பு * றகர், உதைபந்தாட்ட மைதானத்தில் 3000 பேர் அமரும் வசதி * மெய்வல்லுனர் போட்டிகளை 10,000 பேர் கண்டுகளிக்கலாம் * முதற்கட்டப்பணி ஏப்ரலில் பூர்த்தி

ஹோமாகம, தியகம பகுதியில் 156 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

சூழலுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை நிர்மாணிக் குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடனும் கூடியதாக அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு மெய் வல்லுநர் போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல், ரகர் மைதானம் உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், குறிபார்த்துச் சுடும் பிரிவு என்பனவும் நிர்மாணிக்கப் பட்டு வருகின்றன.

இது தவிர விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கான உடற் பயிற்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது. சூழலுக்கு உகந்த வகையில் இயற்கையான சூழலுடன் கூடியதாக இந்த நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு தென்னை, இளநீர், மாங்காய், நாக மரம் என்பனவும் நடப்படவுள்ளன. இங்கு பசுமை வலயமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரகர் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் கண்காணிக்கக் கூடியவாறு பார்வையாளர் அரங்கும் நிர்மாணிக்கப்படும். இத்தோடு மெய்வல்லுநர் போட்டிகளை 10 ஆயிரம் பேர் கண்டு களிக்கக் கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளன.

முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதமளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நிர்மாணப் பணிகளை இராணுவத்தின் 7ஆவது பொறியியல் சேவைப்படையணி முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய முதலாவது சர்வதேச விளையாட்டு மைதானம் இதுவாகும்.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், விளையாட்டு அமைச்சின் செயலாளர் எஸ். லியனகம, கடற்படை உப லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ ஆகியோரும் விளையாட்டு மைதானத்தை பார்வையிடச் சென்றனர். இதே வேளை பிலியந்தலை மடபாத பகுதியில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பெளத்த மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி நேற்று (29) நேரில் சென்று பார்வையிட்டார்.

இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ அமைப்பு தெரிவிப்பு

இலங்கையில் மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களைத் தங்கவைக்க வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ எனப்படும் ஐரோப்பிய ஆணையகத்தின் மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எகோ குழு வவுனியா முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது. அந்த மக்களுக்கு எகோ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எகோ குழுவின் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிரிவுத் தலைவர் எஸ்கோ கென்சின்ஸ்கி , “இலங்கையில் மனிதாபிமான நிலைமை கவலைப்படும் வகையில் இருப்பதாகவும், இதில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் “என்றும் தெரிவித்தார்.

சோதனைச் சாவடிகளில் பொதுமக்களைப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளில் சர்வதேச அமைப்புக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.

வட இலங்கையில் மோதல்கள் கடுமையடைகின்றன

srilanka_army1.jpgவட இலங்கைப் போர்முனைகளில் கடந்த இரண்டு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர், பழமாத்தளனுக்கு வடக்கே விடுதலைப்புலிகள் அமைத்திருந்த மண் அரண் பகுதியையும், அதனோடு இணைந்த அகழிப் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சண்டைகளில் 46 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரணைப்பாலைக்கு வடக்கே உள்ள முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டைகளில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்தச் சண்டைகளில் படைத்தரப்பிற்குக் குறைந்த அளவிலான சேதங்களே ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், தமது முன்னரங்க மண் அரணைத் தகர்த்து ஊடுருவ முயன்ற இராணுவத்தினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதல்களில் இராணுவத்தினருக்குப் பலத்த சேதங்கள் எற்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகளும் கூறியிருக்கின்றார்கள்.

மேல் மாகாண தேர்தல் – தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏப்ரல் மாதம் 17 வரை

 ‘மேல்மாகாண சபைத் தேர்தலையொட்டி அடையாள அட்டையற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17 வரை மட்டுமே ஏற்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களினூடாக தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2,3 மற்றும் 4ம் திகதிகளில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகளில் மாத்திரம் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட அரச அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.மேல் மாகாண சபைத் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை – இந்தோனேசியா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்

sri-indo.jpgஇலங்கையும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்திருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தோனேசியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜீடாவுக்கும் அமைச்சர் போகொல்லாகமவுக்கு மிடையில் நேற்று அமைச்சில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது இருநாடுகளுக்குமிடை யிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக, செய்தியாளர் மாநாடுடில் அமைச்சர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது இந்தோனேசியாவின் சார்பாக அமைச்சர் ஹஸன் விராஜீடா வன்யிலிருந்து இடம்பெயர்ந்து ள்ளவர்களுக்காக 500 டொன் அரிசி, இரண்டு டொன் மருந்துப் பொருட்கள் மற்றும் குழந்தைக ளுக்கான உணவுப் பொருட்களை அமைச்சர் போகொல்லாகமவிடம் கையளித்தார்.

இதேவேளை இன்று (30) இலங்கை, இந்தோனேசிய நாடுகளுக்கிடையில் விசா தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதனையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையில் பல வருடங்களாக நெருங்கிய உறவு காணப்படுகிறது. சர்வதேச ரீதியான மாநாடுகளில் இலங்கை பங்குபற்றிய வேளைகளில் இந்தோனேசியா எமக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கு மிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் விவசாய ரீதியான உறவுகளை மேம்படுத்துவதற்காக ஆணைக்குழுவொ ன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இருநாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் பயங்கரவாதம் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வகையாக உருவெடு க்கிறது. அதற்கு முகம் கொடுக்க தேவையான விதத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை விரைவில் கைச்சாத்திடவுள்ளோம் என்றார்.

இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையும் இந்தோனேசியாவைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடாகும். எமது நாடு சுதந்திரம் பெறும் தறுவாயில் இலங்கை எமக்கு மிகவும் நெருங்கிய உதவிகளை முன்னெடுத்துள்ளது.

அதேபோல் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்தோனேசியா என்றும் ஒத்துழைப்பு நல்கும். இலங்கையில் உருவாகியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எமது நாடு என்றும் ஆதரவு வழங்காது.

இலங்கையின் படைவீரர்கள் மோதல் களில் வெற்றியீட்டி வருவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், எனக் குறிப்பிட்டார். இந்தோனேசிய ஜனாதிபதி இவ்வருடம் இலங்கை வருவாரென தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.

ராஜாங்கனை கிராமம்: புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

வில்பத்து, ராஜாங்கனை 18ம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு புலிகள் மேற்கொண்ட முயற்சி முறிய டிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர் நேற்று தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கிய புலிகள் குழுவொன்று நேற்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றதாகவும் பொலிஸாரும், சிவிலி பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற் கொண்ட தாக்குதலையடுத்து அவர்கள் தப்பிச் சொன்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாலை கிராமத்தினுள் புகுந்த புலிகள் ரி-56 ரக துப்பாக்கியினால் கிராமத்தை நோக்கி சுட்டுள்ளதோடு உடனடியாக செயற்பட்ட பொலிஸாரும் சிவில் பாதுகாப்பு படையினரும் புலிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து புலிகள் காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வில்பத்து பகுதிக்கு மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அனுப்ப்பட்டு காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதோடு கிராமங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். தேடுதலின் போது வெற்றுரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வெலிகந்த மற்றும் சேருநுவர பகுதிகளுக்குள் புகுந்த புலிகள் பல பொதுமக்களை சுட்டுக்கொலை செய்தமை தெரித்ததே.

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாதென கூறுவது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் – இரா.துரைரெத்தினம்

thurairetnam.jpgகிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாதென அமைச்சர் வி. முரளிதரன் கூறுவது தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்;

இலங்கையும் இந்தியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஊடாகவே தமிழ் மக்களுக்காக இம்மாகாணசபை உருவாக்கப்பட்டது. விரும்பியோ, விரும்பாமலோ நிர்ப்பந்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பிரிந்து கிழக்கு மாகாணசபை உருவாகியுள்ளது. மாகாண சபைக்கு அதிகாரம் பெறுவதற்காக சகல தமிழ் கட்சிகளும் சகல தமிழ் மக்களும் பிரதிநிதிகளும் குறிப்பாக அமைச்சர் முரளிதரனும் அதிகார பரவலாக்கலுக்காக அயராது உழைக்கவேண்டும்.

நெருக்கடிமிக்க இந்தக்காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து கூட்டுச் சேர்ந்து அதிகார பரவலுக்கான தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அயராது உழைக்கவேண்டும்.

அதிகாரப் பரவலாக்கலுக்குரிய செயற்பாடுகள் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களுக்காக போராடியவர் என்று தன்னை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமைச்சர் முரளிதரன், கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாதெனக்கூறுவது கிழக்கு மாகாணத்தில் 7,000 மக்களுக்கு மேல் படுகொலை செய்தமை 2,000 பெண்களுக்கு மேலாவர்களை விதவைகளாக்கியதற்கும் 3,000 த்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணர்களின் கல்வியை தொடராமல் இடை நிறுத்தியதிற்கும் ஜனநாயகம் அற்ற சூழலை உருவாக்கியமைக்கும் சான்று பகிர்கிறது.

30 வருடங்களுக்கு மேலாக ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்கள் அனைத்தையும் இழந்த இந்த நிலையில் அமைச்சர் முரளிதரனின் இக் கூற்று அனைத்து தமிழ் மக்களுக்கும் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். எனவே இப்படியான அறிக்கைகளை விடுவதைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரபரவலாக்கலை வென்றெடுப்பதற்கு ஐக்கியப்படுமாறு கேட்டுள்ளார்.

வருகை விஸா துஷ்பிரயோகம் 400 வெளிநாட்டவர்கள் கைது; நாடு கடத்தல்

இலங்கையின் குடிவரவு- குடியகழ்வு சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நானூறு (400) வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.

2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், இந்த ஆண்டின் முற்பகுதியிலும் இவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

79 நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு ஒரு மாதம் தங்குவதற்கான வருகை விஸாவுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இலங்கையில் முப்பது நாட்கள் தங்கி இருப்பதற்கான விஸா வழங்கப்பட்டு வந்தது. அவர்களுடைய தேவையைப் பொறுத்து மேலும் இரண்டு மாதங்கள் விஸா நீடித்துக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் இவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்து நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்கள் உல்லாச ஹோட்டல்கள், நகைக்கடைகள், கட்டிட நிர்மாணத்துறை, தொழில் நுட்பத்துறை, மசாஜ் நிலையங்கள், கெசினோ கிளப்கள் உட்பட பல இடங்களில் சட்ட விரோதமாகத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை விடவும் சிலர் போதைப் பொருள் வியாபாரம், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புதல், விபசாரத்தில் ஈடுபடுதல் உட்பட மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஏ9 ஊடாக பொருள் கொண்டு செல்ல தனியார் துறையினருக்கும் அனுமதி

a9-food.jpgயாழ்ப் பாணத்தில் உணவு பொருட்களின் விலைகளை சாதாரணமட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர் யாழ்ப்பாணத்திற்குத் தாராளமாகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான அமைதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினரை விசேட பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பு நாளை (31) செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடைபெறும்.

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களும் தட்டுப்பாடின்றி குடாநாட்டில் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் தனியார் வர்த்தகருடனான இந்தச் சந்திப்பை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளார்.

அபான்ஸ், லிவர் பிரதர்ஸ், ஆர்பிகோ, மலிபன், மஞ்சி, ரைகம் கொகாகோலா, லயன் புரூவதி, எலிபண்ட் ஹவுஸ் போன்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறிய அவர், யாழ். குடாநாட்டுக்கு புதிய ஆடைகள் கொண்டுசெல்ல விரும்பும் தனியார் புடவைக் கடை உரிமையாளர்கள் இருப்பின் தம்முடன் தொடர்புகொள்ளுமாறும், செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். குடாநாட்டு மக்கள் சித்திரைப் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அடுத்த புதன்கிழமையன்று ஏ-9 பாதையூடாக பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டையிட்டு 100 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஏ-9 ஊடாக பொருட்களை எடுத்துச்செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களையும், புடவை உள்ளிட்ட பொருட்களையும் குடாநாட்டுக்குக் கொண்டுசெல்ல விரும்பும் தனியார் வர்த்தகர்கள் தன்னுடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.