வட இலங்கைப் போர்முனைகளில் கடந்த இரண்டு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர், பழமாத்தளனுக்கு வடக்கே விடுதலைப்புலிகள் அமைத்திருந்த மண் அரண் பகுதியையும், அதனோடு இணைந்த அகழிப் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இந்தச் சண்டைகளில் 46 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரணைப்பாலைக்கு வடக்கே உள்ள முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டைகளில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்தச் சண்டைகளில் படைத்தரப்பிற்குக் குறைந்த அளவிலான சேதங்களே ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
எனினும், தமது முன்னரங்க மண் அரணைத் தகர்த்து ஊடுருவ முயன்ற இராணுவத்தினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதல்களில் இராணுவத்தினருக்குப் பலத்த சேதங்கள் எற்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகளும் கூறியிருக்கின்றார்கள்.