Multiple Page/Post

இலங்கையை பலமுள்ள நாடாக நாம் கட்டியெழுப்பியுள்ளோம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgசர்வதேச நாடுகள் சில பலவீனமுற்ற நாடு என்ற முத்திரையை எம்மீது குத்த முயன்ற போதும் நாம் பலமுள்ள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதாரம், சுகாதாரம் என பல்துறைகளையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பியதுடன் துண்டாட முனைந்த நாட்டையும் மீட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் மட்டுமன்றி எம்மவர் சிலரும் இலங்கையை பலவீனமான நாடாக உலகுக்குக் காட்ட முனைந்தனர். அதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். அத்துடன் சர்வதேச நிதியம் உட்பட நிதி வழங்கும் நாடுகளிடம் எமது நாட்டை அடிமைப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்

சென்னையில் நாளை வாக்குப் பதிவு – வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆரம்பம்

india-elc.jpgசென்னையில் வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி ஆரம்பமானது.

மொத்தம் 52,175 வாக்குச் சாவடிகளுக்குப் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – அமைச்சர் டளஸ்

dalas.jpgஇந்த நாடு ஒரு இனக்குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று (11) மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம். இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பிக்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்கள் இறந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.

மத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை

sarath-cp-cm.jpgமத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக இந்த மாகாண மக்களின் தகவல் தொழிநுட்ப கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் கண்டி கெட்டம்பேயில் மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்த நிர்மாணப்பணிகளுக்காக மத்திய மாகாண சபை 4 கோடி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர தகவல் தொழிநுட்ப துறையை முன்னேற்றும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை அமைச்சு திணைக்கள மட்டத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மற்றொருபுறம் இந்த நவீன தொழினுட்பத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு கணினி தொழினுட்ப பயிற்சி அளிக்கும் நோக்கில் பயிற்சித்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிந்தவூரிலிருந்து உணவுப் பொருட்கள்

islam.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென நிந்தவூர் பிரதேச செயலகமும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இளைஞர்களின் உதவியோடு நிந்தவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மனிதாபிமான முறையில் சேகரிக்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பலதரப்பட்ட உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா தெரிவித்தார்.

தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிய பிரச்சினைகள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவிப்பு

Minister Tissa Vitharanaசர்வ கட்சி பிரநிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  எனவே, கூடிய விரைவில் தீர்வு யோசனையை தயாரித்து முடித்து விட முடியுமென நம்பிக்கை வெளியிட்ட பேராசிரியர் விதாரண, எனினும் அதற்கு காலவரையறையொன்றை கூற முடியாதென்றும் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரித்து பரிந்துரை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்திருந்தார். இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஏற்கனவே பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அக் குழு நூறாவது சந்திப்பையும் தாண்டி கூட்டங்களை நடத்தி வருகிறது.

தீர்வுயோசனையை தயாரிப்பதில் ஏற்கனவே 90 சதவீதமான விடயங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டபோதிலும் 10 சதவீதமான விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் தீர்வு யோசனை தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது;

பிரச்சினைக்குரியதாக இருந்த அனைத்து விடயங்களிலும் தற்போது பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இதற்கமைய ஒவ்வொரு விடயங்களாக கலந்துபேசி தீர்வு யோசனையை தயாரிக்கும் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, நீண்ட காலம் செல்வதற்குள் தீர்வு யோசனையை தயாரித்து முடித்துவிட முடியுமென நம்புகிறேன்.

எமது இந்த யோசனை தயாரிக்கப்பட்டதும் முதலில் (பிரதான எதிர்க்கட்சியான) ஐ.தே.க.விடம் அதை முன்வைத்து கலந்துபேசிய பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடனும் இந்த தீர்வு யோசனை குறித்து கலந்துபேச எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்குறித்த கலந்தாலோசனைகளின்போது ஏதேனும் திருத்தங்கள், புதிய யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அவை குறித்தும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்தாராயப்பட்டு அனைவரது பொது இணக்கப்பாட்டையும் எட்டக்கூடிய வகையில் ஏற்புடைய திருத்தங்கள் உள்வாங்கப்படும்.

இறுதியான தீர்வுயோசனை அறிக்கை குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

இலங்கையில் ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் கவலை

20090424063601srilanka4.jpgஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் வைஸ் பீபீஸி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு குழுவின் தலைவராக வஜிர எம்.பி – ஐக்கிய தேசியக் கட்சி

unp.jpgமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் கிரமமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்குமான விசேட திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ஐ.தே.க.வினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முன்னர் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாள்வதற்கென இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாளும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு

itali.jpgஇலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலை வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.  இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையர்களுக்கு இன்னும் சில மாதங்களில் வேலை வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இத்தாலிய அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சுகாதாரததுறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கைத் தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு  அங்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மெனிக்பாமில் தயார் நிலையில் இரு தீயணைப்பு படை வாகனங்கள்

international-firefighters-day.jpgசெட்டி குளம் மெனிக்பாம் பகுதியில் இரண்டு தீயணைப்புப் படை வாகனங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலேயே தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பகுதியிலிருந்து இரு தீயணைக்கும் படைப் பிரிவும், பாவனைக்குரிய அம்புலன்ஸ் வண்டிகளும் பணியாளர்களும் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.