Multiple Page/Post

பிரபாகரன் மரணச் செய்தி அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது.

இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. விடுதலைப் புலிகள இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசாதாரண நிலை காணப்படுகிறது.

இன்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

சேலத்தில் புதிய பஸ் நிலையப் பகுதியில் இன்று காலை குடியுரிமை நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அப்போது அரசுப் பேருந்து ஒன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது. பஸ் டிரைவரும், கண்டக்டரும் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செல்லக்குப்பம் பகுதியில், ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், சிதம்பரம் , மஞ்சக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் பிரபாகரன் மரணச் செய்தி அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது. சில பகுதிகளில் வர்த்தர்கள் அவர்களாகவே கடைகளை அடைத்துள்ளனர். பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பாக உள்ளது.

வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

unhcr.jpgஇலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக யூ.என்.எச்.சீ.ஆர். பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறினார்.

புலித்தேவன் மற்றும் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்

LTTE LOGOஇலங்கை இராணுவத்தின் சூழ்ச்சியால் ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல் துறையச் சேர்ந்த புலித்தேவன, மற்றும் ப.நடேசன்  ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை என்ற சொல் எமது அகராதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது -பாராளுமன்றத்தில் ஜனாதிபதி

parliament.jpgஇந்த நாட்டில் இதன்பின்னரும் தமிழ் முஸ்லிம் பேகர் மலே என்பவர்கள் சிறுபான்மையினர் அல்லர். அனைவரும் இநநாட்டின் பிரஜைகளே. சிறுபான்மை என்ற சொல்லை மூன்று வருடங்களுக்கு முன்னரே எமது அகராதியிலிருந்து நீக்கியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நாடு முன்னுதாரணமான ஒரு சிரேஷ்ட நாடாகும். எங்களுடைய சிரேஷ்ட மன்னர்களான துட்டகைமுனு போன்றவர்களால் பேனப்பட்டு வந்த சிறந்த நற்பண்புகளபை  பின்பற்றி சரணடைந்த அல்லது உயிரிழந்த எதிரியையும் நாம்  கௌரவிக்க வேண்டும.; இது அரசாங்கத்திடம்  மாத்திரமின்றி  இந்நாட்டு மக்கள் மத்தியிலும் காணப்படும் ஒரு சிறந்த நற்பன்பாகும்.

எமது நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என அழைப்பு விடுகிறேன். பல உலக நாடுகளில் வசிக்கும் எமது வைத்தியர்கள் பொரியியலாளர்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற புத்தி ஜீவிகள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த மக்களுக்கு நாட்டின் ஏயை பகுதிகளைச் சார்ந்தவர்களுக்குப் போன்று ஜனநாயக உரிமையை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வும்  பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். எனினும் அது வெளிநாடுகளால் முன்வைக்கப்படும் தீர்வல்ல. ஒவ்வொரு நாடும் முன் வைக்கும் தீர்வுத் திட்டத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் இல்லை. எனவே எங்களுடையதான ஒரு தீர்வுத் திட்டத்தையே நாம் வழங்கவேண்டியுள்ளது.

அது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்ககொள்ளக் கூடிய நியாயமான தீர்வுத் திட்டமாக இருக்கவேண்டும். இதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பேயன்றி தடைகளை நாம் எதிர்பார்க்கவில்லை. எங்களால் முன்வைக்கப்படும் தீர்வு உலகுக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.

இப்போது இந்த நாட்டில இரண்டு சாதியினரே உள்ளனர். ஒரு சாரார் நாட்டுப் பற்றுடையவர்கள் மற்றவர்கள் நாட்டுப்பற்றற்றவர்கள் ஆவர். குறைந்த எண்ணிக்கையிலான ஒரு சாராரே நாட்டுப் பற்றில்லாதவர்களாக உள்ளனர். இன்று நாம் கண்டுள்ள வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி மட்டுமல்ல தேசியக்கொடியின் கீழ் ஒன்று கூடிய அனைவரினதும் வெற்றியாகும்.

வன்னி மக்களுக்கு ஜப்பான் 50 மில்லியன் ரூபா நிதியுதவி

japan0001.jpgபடையினரால் மீட்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்கு உதவும் வகையில் ஜப்பான் அரசாங்கம் 50 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஜப்பான அரசாங்கப் பிரதிநிதி குனியோ தகாஷி நிதியுதவித் தொகையை ஜனாதிபதியின் விசேட ஆலோசகரான பஸில் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

வழங்கப்பட்ட உதவிப் பொருட்களில் 560 கூடாரங்கள்,  10000 பாய்கள்,  4000 பிளாஸ்டிக் விரிப்புகள்,  30000 ஜெரி கொள்களன்கள்,1000 நுளம்பு வலைகள் அடங்குகின்றன. இதேவேளை ஜப்பான் உணவுப் பொருட்களையும் உதவியாக வழங்க உள்ளது. அதன்படி 6255 மெட்றிக் தொன் அரிசி 132 மெட்றிக் தொன் டின் மீன் ஆகியன விரைவில் கொழும்பு வந்து சேரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சுதந்திர நாட்டைக் கட்டி எழுப்புவோம் – மஹிந்த ராஜபக்ஷ

mahinda-rajapaksha.jpgநாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சுதந்திர நாட்டைக் கட்டி எழுப்புவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். புலிகளிகள் ஆக்கிரமித்த பிரதேசங்கள் அனைத்தையும் படையினர் மீட்டெடுத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று காலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக தமிழ் மொழி மூலமான விசேட உரையொன்றை ஆற்றிய போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது.

சபாநாயகர் அவர்களே இது எமது நாடு. நாம் பிறந்த நாடு. நாம் ஒரு தாய் மக்களாக இங்கு வாழ வேண்டும். இங்கு இன மத குல பேதம் எதுவும் இருக்க முடியாது. கடந்த முப்பது வருட காலமாக எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த மக்கள் தொகை ஏராளம். சிங்கள, தமிழ்,  முஸ்லிம் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். எல்.ரீ.ரீ.ஈ உடன் செய்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல.

எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து எமது சகோதர தமிழ் மக்களைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படை வீரர்கள் உயிர் தியாகம் செய்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யைத் தோல்வியுறச் செய்து நாம்பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றியாகும். எமது தாய் நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் வெற்றியாகும்.

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களைப் பாதுகாப்பதும் எமது பொறுப்பாகும். அது எனது கடமை. இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் அச்சமின்றி சந்தேகமின்றி பாதுகாப்பாகவும் சம உரிமையோடும் வாழ வேண்டும். இதுவே எனது நோக்கமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியையடுத்து சிங்கள மொழியில் உரை நிகழ்த்தினார்.அதன்போது அவர் தெரிவித்ததாவது.

பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டுள்ளோம். இதன் பின்னர் நாட்டின் ஒவ்வொரு அங்குள நிலப் பரப்பிலும் மக்கள் அதிகாரம் பெற்ற பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட சட்டம் மட்டுமே அமுல்படுத்தப்படும். சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மூன்றில் ஒரு பங்கிலான நிலப்பகுதியில் இவ்வாறான சட்டத்தை செலுத்த முடியாத நிலை தோன்றியிருந்தது. 2005 ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்ற வேளையில் வடக்கு கிழக்கில் புலிகளின் பொலிஸ் வங்கி மற்றும் நீதிமன்றங்களும் இருந்தன. புலிகளின் பாராளுமன்றம் ஒன்று மட்டுமே இல்லாதிருந்தது. நாம் தற்போது அவை அனைத்தையும் நிறந்தரமாகவே இல்லாமல் செய்துள்ளோம்.

நாட்டின் ஒவ்வொரு அங்குள நிலப்பரப்பிலும்  அதாவது 65332 சதுரக் கிலோமீடடர் பரப்பளவிலும் நாட்டின் அரசியலமைப்பு வியாபிக்கும் வகையிலேயே இன்றைய பாராளுமன்ற அமர்வை இன்று நாம் கூட்டியுள்ளோம். இந்த மகிழ்ச்சியை சபா நாயகருக்கு இங்கு கூடியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் அதன்பின்னரான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இன்று அனுபவிக்க முடியும்,

ரஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்

rajeeve_.pngபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்,  உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவுள்ளதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் முதல் இரண்டு குற்றவாளிகளாக புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும்,  அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்தகவல் குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஜீவ் கொலை வழக்கு விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பூர்வமான முடிவை மேற்கொள்ள நீதிமன்றத்தை அணுகுவோம் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர்; தெரவித்துள்ளார். 

பிரபாகரனது போல் தென்படும் சடலத்தை இலங்கை தொலைக்காட்சி காண்பித்தது – பீபீஸி செய்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கொரில்லாக்களின் உடையணிந்த சடலம் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பகுதி ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்தப் பகுதியில் காயத்தை மறைப்பதற்காக அது இருக்கலாம்.

அந்த சடலத்தின் மரபணுச் சோததனைகள், அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
 
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்… போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
 
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார். அது போலத்தான் இப்போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.

பிரபாகரன் மரண செய்தி: வெளிநாடுகளில் தமிழர்கள் கொந்தளிப்பு

Pirabakaran_V விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் முன்னணி தளபதிகள் அனைவரையும் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
 
இது உலகம் முழுவதும் தமிழர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற தமிழர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர். அவர்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
லண்டனில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து பாராளுமன்றம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
 
சுவிட்சர்லாந்தில் ஐ.நா. சபை அலுவலகம் எதிரே ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் காவலை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
 
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பும் போராட்டம் நடந்தது. இதில் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.  இதேபோல பிரான்சு, கனடா, ஜெர்மனி, ஆஸ்தி ரேலியா, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் தமிழர்கள் தெருக்களில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அனைத்து இடங்களிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தோடு கூடி இருந்தனர். அவர்களில் பலர் கதறி அழுதனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். அவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அனைத்து நாடுகளிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.