வெளி நாடுகளில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு வருமாறு அழைப்பதற்கும் அவர்கள் வராத பட்சத்தில் அவர்களின் இடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம்,கஜேந்திரன், என்.கே.ராஜலிங்கம் ஆகியோர் நீண்டகாலமாக வெளிநாடுகளில் தங்கி உள்ளனர்.
இவர்களில் சிலருக்கு நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொடுப்பதில் இங்கிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லீவு பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது எனவும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திய அத்தாட்சிப்பத்திரத்தை கொடுத்து விடுமுறை பெற வேண்டிய நிலைக்கு சக கூட்டணி உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர். இதனை அடுத்து இவ் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது