பிரபல பாடகர் மைக்கேல் ஜக்சனின் திடீர் மரணத்தையிட்டு அவரின் நண்பர்களும் விசிறிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியிருக்கும் அதேசமயம், ஜக்சனின் சகோதரரான ஜரமின் ஜக்சன் இந்த நெருக்கடியான தருணத்தில் தமது குடும்பத்தினரின் கௌரவம், அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஜக்சனின் வரலாற்றுப் புகழ்பெற்ற அல்பத்தைத் தயாரித்தவரான குயின்ஸி ஜோஜ்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்;
இந்த துன்பகரமான, எதிர்பார்த்திராத செய்தியை கேள்விப்பட்டதும் நான் விரக்தியடைந்துள்ளேன். இந்த மாதிரியான இளம் வயதில் சடுதியாக ஜக்சன் எம்மத்தியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து விபரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எமது ஆன்மாக்களை கடவுள் ஒன்றிணைத்தார். 1980 களில் நாம் ஒன்று சேர்ந்து பணிகளை மேற்கொள்ள ஆண்டவனே அனுமதித்திருந்தார். இன்றுவரை நாம் ஒன்று சேர்ந்து இசையை உருவாக்கினோம். “திரில்லர், பாட்’ ஆகியன உலகின் சகல மூலை முடுக்கெங்கும் இசைக்கப்படுகின்றன. அவரின் திறமை, கருணை, தொழில்சார் சிறப்புத் தேர்ச்சி, அர்ப்பணிப்பு என்பனவற்றின் வெளிப்பாடு இதுவாகும். அவர் விட்டுச் சென்ற பங்களிப்புகள் எப்போதுமே உலகத்தவரால் உணரப்பட்டவையாக அமைந்திருக்கும். எனது சிறிய சகோதரரை இன்று நான் இழந்துவிட்டேன். எனது ஆன்மாவின் ஒரு பகுதி அவருடன் சென்றுவிட்டது.