நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உப தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு ஒரு கட்சி தலைவராக இருந்து அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் கிழக்கின் அபிவிருத்திக்காக ஒன்று பட்டு செயற்படுவோம் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளைக் காரியாலயத்தை மட்டக்களப்பில் நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் முரளி தரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளையொன்று திறந்ததன் மூலம் இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணத்தில் எமது சகோதரர்கள் எதிர் நோக்கி வந்த சிக்கல்கள் திர்த்து வைக்கப்படும்.
நமது மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர். முதற்கட்டமாக இப்பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். கொழும்புக்கு சென்று வீண் அலைச்சலைத் தவிர்க்கும் பொருட்டும், முகவர்களின் ஏமாற்றத்திலிருந்து தடுக்கும் பொருட்டும் இப்பணியகம் சேவையாற்றவுள்ளது என அவர் தெரிவித்தார்.