நோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.
ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.