Multiple Page/Post

கிளிநொச்சி நகருக்கு இருவாரங்களில் மின்சாரம் – ரூ. 600 மில்லியன் ஒதுக்கீடு

கிளிநொச்சி நகரத்துக்கு இன்னும் இரு வாரங்களில் மின்சார வசதி அளிக்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. கிளிநொச்சி நகரத்துக்கு மின்சார வசதி அளிக்கும் திட்டத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வட பகுதிக்கு மின்சார வசதி அளிக்க 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரத் தொகுதி அமைக்கப்பட்டு வருவதோடு மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுவதாக அமைச்சு கூறியது.

இது தவிர கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இரண்டு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக அமைச்சு கூறியது.

கிளிநொச்சி நகரத்திற்கு மின்சார வசதி அளிப்பது தொடர்பான ஆரம்ப வைபவம் அண்மையில் மின்சார சபை தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது இரணமடு குளத்திற்கருகில் வைத்து முதலாவது மின்மாற்றி பொருத்தப்பட்டது.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்சார வசதி அளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு மாணவர் 30வருட காலம் இழந்ததை மீளப்பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பாடு – ஜனாதிபதி

mahinda-rajapa.jpgவடக்கு, கிழக்கு மாணவர்கள் கடந்த 30 வருட காலமாக இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீளக் கிடைத்த பிரதேசங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியைப் போல், கல்வியையும் விளையாட்டையும் சமமாக மேம்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் மறைந்து கிடக்கும் திறமைகளைத் தேடி வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென்றும் நேற்று (09) மாலை பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,

இன்று பெற்றோர்களுக்கு அச்சம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் மறைந்து கிடக்கும் வளங்களைத் தேடிச் செல்லும் தருணம் பிறந்துள்ளது. 30 வருடங்களாக இல்லாமற் போனதை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

துள்ளி விளையாட வேண்டிய குழந்தைகளின் கரங்களில் துப்பாக்கிகளைக் கொடுத்தார்கள். துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டக்கூடிய 11, 12 வயது பிள்ளைகள் இன்று முகாம்களில் இருக்கிறார்கள. இவர்கள் அனைவரும் இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுப்போம். எதிர்வீரசிங்கம் போன்ற விளையாட்டு வீரர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உருவானார்கள். அவ்வாறானவர்களை மீண்டும் நாம் உருவாக்குவோம். அபிவிருத்தியை ஒரு பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் என்றார்.

இலங்கை-பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு – வெளிவிவகார அமைச்சு தகவல்

bangladeshi_fm.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி டிபு மொனி இன்று பிற்பகல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது இணையத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குமிடையிலான இச்சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் சார்க்நாடுகளின் சிறுவர் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் எனக் கூறினார்.

இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியா செயலகத்தில் நிலுவையாக உள்ள பணத்தைத் தாமதமின்றி வழங்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா செயலக வளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவு பெறப்பட்டு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டு வந்தது.  சுமார் 4 மாதங்கள் இவ்வாறு சமைத்த உணவு வழங்கப்பட்டதாகவும், நாளொன்றுக்கு, ஒருவருக்கு 130 ரூபா பெறுமதியான 3 வேளை உணவு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டு, அதற்காக ஒரு தொகைப் பணம் தங்களுக்கு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் தற்போது நிலுவையாக உள்ள பணத்தில் முழுச்சாப்பாடு 100 ரூபாவாகவும் அரைச்சாப்பாடு 80 ரூபாவாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது உடன்பாட்டுக்கு விரோதமானது என்றும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  தங்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதனை வழங்குவதற்கு தற்போது அதிகாரிகள் சாக்கு போக்குகள் கூறுவதாகவும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரச சுற்று நிருபத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணத்தின்படியே கொடுப்பனவுகளை வழங்க முடியும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. சமைத்த உணவு வழங்கிய வகையில் சுமார் 250 மில்லியன் ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதில் ஒரு பகுதி நிதி தற்போது கிடைத்திருப்பதாகவும், இதனை வழங்குகையிலேயே ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவுக்கான கட்டணம் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கொலை மற்றும் தலையை வெட்டிக் கொல்ல முற்பட்ட 10 பேருக்கு சிறைத் தண்டனை!!!

Murder_Weaponநோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.

ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Murder_Weaponசம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Yogarajah_Balasinghamஇம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.

தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்

Rita Ariyaratnam with her childrenஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இத்துயர சம்பவத்தில் ஏழு மாத இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர். மகப்பேற்றுக்குப் பின்னான மனஉளைச்சலுக்கான மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட நிலையில் தாயும் குழந்தைகளுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஆபத்தான நிலையைக் கடந்து உடல்நிலை தேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிழக்கு பேர்த் பகுதியில் உள்ள குளோவர்டேல் பகுதியில் வாழும் செல்வின் அரியரத்தினம் எனபவரின் குடும்பத்திலேயே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. யூலை 6ம் திங்கட்கிழமை மாலை 3:30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய அரியரத்தினம் அவரது குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் மனைவி றீட்டாவும் வரவேற்பறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவர்களுக்கு அருகில் றிட்டாவுக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மனஉளைச்சலுக்கான மாத்திரைப் போத்தலும் காணப்பட்டது.

உடனடியாக ‘000’ அவசரசேவைக்கு அவசர அழைப்புவிடுத்தார். மருத்துவ வண்டி வரும்வரை றீட்டாவின் இதயத்தை தொடர்ந்தும் இயக்குவதற்கான செயன்முறைகளை தொலைபேசியில் வழங்க அரியரத்தினம் அதனை மேற்கொண்டார். மருத்துவ வண்டி வந்தடைந்ததும் றீட்டா றோயல் பேர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் இருவரும் பிறின்சஸ் மார்கிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனையை அடைகையில் உயிரிழந்தனர்.

குழந்தைகளின் தாயார் றீட்டா பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட அழுத்தக் குறைவு காரணமாக பல நாட்களாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் என்று நெருங்கிய உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். குழந்தைகளின் பெற்றாரான இளம் தம்பதியர் எதுவித பிரச்சினைகளுமின்றி திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்று இக்குடும்பத்தின் நெருங்கிய நண்பி ஒருவர் தெரிவித்தார்.

Twins_Ariyaratnamஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகளுடன் திருப்திகரமாக வாழ்ந்து வரும் இக் குடும்பத்தின் இளம் தாயார் நீண்ட காலமாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் என்றும் இது தற்செயலாக ஏற்பட்ட கர்ப்ப தரிப்பு அல்ல என்றும் அந்த குடும்ப நண்பி மேலும் கூறினார். தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட திருமதி றீட்டா அரியரத்தினம் ஒரு அன்பான தாய் என்றும் அவருக்கு அழுத்தக் குறைவு நோய் ஏற்பட்டதும் இதற்கு சிகிச்சை பெற்றதும் அவ்வேளையில் தமக்கு தெரியாது என்றும் அந்த நண்பி கூறினார்.

அவருக்கு டாக்டரினால் வழங்கப்பட்ட மருந்துகள் வீட்டில் காணப்பட்டன என்று சிரேஷ்ட பொலிஸ் சார்ஜன்ட் மார்க் ஃபை தெரிவித்துள்ளார். எந்த விதமான மருந்துகள் என்று தெரிவிக்காத அவர் மருந்தை அளவுக்கதிகமாக அவர் உட்கொண்டிருப்பாரென தாம் கருதுவதாகவும் கூறினார்.
குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை தம்மால் கூற முடியாதிருக்கிறது என்று தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தாய் தனது குழந்தைகளை கொலை செய்து தன்னையும் அழித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் இது முதற்சம்பவம் அல்ல. கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு லண்டனிலும் இவ்வாறான ஒரு துயரம் நிகழ்ந்தது. (அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன், கனவிலும் தோண்றாத கொடூரம் – தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!) வேறு வேறு நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களிலுமே இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். தாய்மார்களின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றின் தாக்கம் முழுமையாக உணரப்படவில்லை. குறிப்பாக பெண்கள் மத்தியில் அவர்களது பிரசவத்திற்கு முன் பின்னாக இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஒரு-பால் உறவு குற்றமாகாது என்ற தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

gayrightcelectration.gifஇந்தியா வில் பரஸ்பர சம்மதத்துடன் ஒரு பால் உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு்ள்ளது.

இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஒரு பால் உறவினரின் உரிமைகளுக்குப் போராடும் நாஸ் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுரேஷ் குமார் கெளஷல் என்ற ஜோதிடர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சார்க் சிறுவர் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட 4வது மாநாடு இன்று ஆரம்பம் – தலைமைப்பொறுப்பு அமைச்சர் சுமேதாவுக்கு

sumeda.jpgதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான நான்காவது சிரேஷ்ட உயர் அதிகாரிகள் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை ஆரம்பமான இந்த மாநாட்டின் போது இலங்கைக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷில் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாக கலந்து கொண்ட நேற்றைய மாநாட்டிற்கு இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம். சுமனதாச தலைமை வகித்தார். சார்க் அமைப் பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சார்க் நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான நான்காவது மாநாடு இன்று ஆரம்பமாகிறது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் அமைச்சர்கள் மட்ட மாநாட்டின் தலைமை பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜீ. ஜயசேன தலைமை வகிக்கவுள்ளார்.

இன்றைய தினம் இந்த மாநாட்டில் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் சிறுவர் விவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 13 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்ற இந்த மாநாட்டின் போது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

மட்டு. நகரில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம் : பயணிகள் மகிழ்ச்சி

sri_lankan_policeman.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பிரதான நெடுஞ்சாலைகளிலுள்ள அநேகமான வீதித் தடைகளும் பொலிஸ் சோதனைச் சாவடிகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் பயணங்கள் கடந்த காலங்களை விட இலகுவாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு – கொழும்பு பயணத்தின் போது மட்டக்களப்பிலிருந்து மன்னம்பிட்டி வரை 7 சோதனைச் சாவடிகளும் 10இற்கும் மேற்பட்ட வீதித் தடைகளும் அமைந்திருந்தன.

சோதனைகளின் போது பயணிகள் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாமதங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இவை அகற்றப்பட்டுள்ளதாலும், சோதனைச் சாவடிகளில் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பயணங்கள் இலகுவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

“ஏற்கனவே இந்த வீதித் தடைகளினாலும், சோதனைச் சவடிகள் காரணமாகவும் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான பயணத்திற்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. இப்போது 7 முதல் 8 மணித்தியாலங்கள் போதுமானது” என தெரிவிக்கின்றனர்.  இருப்பினும் ஓட்டமாவடி-மன்னம்பிட்டி ,வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிகளில் வாகன இலக்கங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றது

“மட்டக்களப்பிலிருந்து வெளியிடங்களுக்கான பயணங்கள் தற்போது இலகுவாக இருந்தாலும், வாகனத்திற்கு இன்னமும் பொலிஸ் பாஸ் பெற வேண்டும் என்ற நடை முறை அமுலிலிருப்பதால் அதனையும் நீக்க வேண்டும்”  அதே வேளை மட்டக்களப்புக்கு வடக்கே பயணங்கள் இலகுவாக இருந்தாலும் தெற்கே வீதி தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் இன்னமும் காணக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையிலான 43 கிலோ மீற்றர் தூரத்திற்குள் மட்டும் ஓந்தாச்சி மடம், கல்லாறு ,நீலாவணை ஆகிய இடங்களிலுள்ள சோதனைச் சாவடிகளில் தொடர்ந்தும் சோதனைகள் இடம் பெறுகின்றன.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு!

aedes_aegypti.jpgநாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளதென டெங்கு நோய் தடுப்புப்பிரிவு தெரிவிக்கின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 08-07-2009வரை இந்த எண்ணிக்கை நிலவியதாகவும் இதேகால எல்லையில் டெங்கு நோயால் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கடந்த வாரம் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 569 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொழும்பு,  கண்டி,  கேகாலை,  ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். ஏனைய மாவட்டங்களில் நோய் பரவும் நிலை சற்று குறைந்து வருகின்றது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 237 பேர் டெங்கு நோயினால் பீடிக்க்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் நுளம்புகளை ஒழிப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது. நுளம்புகளை அழிப்பதற்கான பற்றீரியாக்கள் கூடுதலான நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலேயே பயன்படுத்தப்படுவதால் ஏனைய பகுதிகளில் நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் பணிகளை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென  டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது.