இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியா செயலகத்தில் நிலுவையாக உள்ள பணத்தைத் தாமதமின்றி வழங்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா செயலக வளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவு பெறப்பட்டு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டு வந்தது.  சுமார் 4 மாதங்கள் இவ்வாறு சமைத்த உணவு வழங்கப்பட்டதாகவும், நாளொன்றுக்கு, ஒருவருக்கு 130 ரூபா பெறுமதியான 3 வேளை உணவு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டு, அதற்காக ஒரு தொகைப் பணம் தங்களுக்கு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் தற்போது நிலுவையாக உள்ள பணத்தில் முழுச்சாப்பாடு 100 ரூபாவாகவும் அரைச்சாப்பாடு 80 ரூபாவாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது உடன்பாட்டுக்கு விரோதமானது என்றும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  தங்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதனை வழங்குவதற்கு தற்போது அதிகாரிகள் சாக்கு போக்குகள் கூறுவதாகவும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரச சுற்று நிருபத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணத்தின்படியே கொடுப்பனவுகளை வழங்க முடியும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. சமைத்த உணவு வழங்கிய வகையில் சுமார் 250 மில்லியன் ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதில் ஒரு பகுதி நிதி தற்போது கிடைத்திருப்பதாகவும், இதனை வழங்குகையிலேயே ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவுக்கான கட்டணம் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • romeo
    romeo

    எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபம்

    Reply